<div id="MiddleColumn_internal"> <h3>சாம்பார் வெங்காயம்</h3> <p style="text-align: justify;">சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் பெற்று லாபம் அடையலாம்</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b9abbeb95bc1baab9fbbf/copy_of_7.jpg" /></p> <p style="text-align: justify;">சின்ன வெங்காயம் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் வளர்ச்சிக்கு 15 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அவசியம். நன்கு தண்ணீர் தேங்காத வளமான இரு மண்பாங்கான நிலம் சாகுபடிக்கு உகந்ததாகும்.</p> <p style="text-align: justify;">மண்ணின் கார, அமிலத் தன்மை 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருத்தல் சிறந்தது. மண் ஆழம் குறைவாக இருந்தாலே போதுமானது.</p> <h3 style="text-align: justify;">நிலம் தயாரித்தல்</h3> <p style="text-align: justify;">நிலத்தை 2 முதல் 3 முறை உழுது கடைசி உழவின்போது ஒரு ஹெக்டேருக்கு 25 டன் மக்கிய தொழு உரமிட வேண்டும். பின்பு 45 செ. மீட்டர் இடைவெளியில் பார் பார்த்திகள் அமைத்து நிலத்தை தயார் செய்யவேண்டும்.</p> <h3 style="text-align: justify;">விதையளவு, பருவம்</h3> <p style="text-align: justify;">ஒரு ஹெக்டேருக்கு விதை வெங்காயம் 1,500 கிலோ தேவைப்படும். விதை வெங்காயத்தை 10 சென்டிமீட்டர் இடைவெளியில் பார் பாத்திகள் இருபுறங்களிலும் அமைக்க வேண்டும். விதை வெங்காயம் நடவுக்கு ஏப்ரல், மே மாதங்கள் ஏற்றவை.</p> <h3 style="text-align: justify;">உரமிடுதல்</h3> <p style="text-align: justify;">நடவுக்கு முன்பு பார் பாத்திகளின் இருபுறமும் அடி உரமாக ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும், 30 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும். பின்னர் நடவு செய்த 30 நாள் கழித்து 30 கிலோ தழைச் சத்தினை மேலுரமாக இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">நீர் பாய்ச்சுதல்</h3> <p style="text-align: justify;">விதை வெங்காயம் நட்டபின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 3 நாள்கள் கழிந்து உயிர் தண்ணீர் இட வேண்டும். அதன் பின்னர் 7 முதல் 10 நாள்கள் இடைவெளியில் நீர் பாய்ச்சுவது நல்லது.</p> <h3 style="text-align: justify;">பின்செய் நேர்த்தி</h3> <p style="text-align: justify;">விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து மேலுரமிட்டு மண் அணைந்து நீர் பாய்ச்சுதல் வேண்டும். பின்னர் தேவைக்கு ஏற்ப களை எடுத்து நிலத்தை சுத்தம் செய்யவேண்டும்.</p> <h3 style="text-align: justify;">பயிர் பாதுகாப்பு</h3> <ol> <li style="text-align: justify;">இந்தப் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் பாதிப்பு பரவலாக காணப்படும். இதைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டோ பாஸ் ஸ்டாக்ஸ் மருந்தை ஒரு சதவீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.</li> <li style="text-align: justify;">நோய்களில் இலைப்புள்ளி நோய் பரவலாக காணப்படும். அதை கட்டுப்படுத்த இன்டோபில் எம்.45 என்ற மருந்தை 2 சதவீதம் தெளிக்க வேண்டும். அறுவடை: வயலில் வெங்காயத்தின் இலைகள் 75 சதவீதம் காய்ந்து விட்டால் பயிர் முதிர்ச்சி அடைந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். அறுவடைக்கு 7 நாள்கள் முன்பு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சவேண்டும்.</li> <li style="text-align: justify;">பின்னர் கொத்து அல்லது மண் தோண்டி மூலம் தோண்டி வேர், இலைகளை பறித்து சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின் நிழலில் காயவைத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.</li> </ol> <h3>மகசூல்</h3> <p style="text-align: justify;">விதை ஊன்றிய 65 முதல் 85 நாள்களில் ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் வரை சின்ன வெங்காயம் மகசூல் கிடைக்கும்.</p> <h3>கேள்வி பதில்கள்</h3> <p style="text-align: justify;"><strong>நான் சிறு வெங்காயத்தினை விதைமூலம் உற்பத்தி செய்ய முடியுமா? அவ்வாறு இருப்பின் உகந்த இரகத்தின் கூறவும்.</strong></p> <p style="text-align: justify;">கோ (ஆன்) 5</p> <p style="text-align: justify;"><strong>எனது வெங்காய பயிரில் வெள்ளை/வெளிய நிறப்பகுதிகள் உள்ள இலைகள் காணப்படுகின்றது. மேலும் அத்துடன் சிறிய கருப்பு நிற பூச்சிகள் காணப்படுகின்றது. இது நன்மையா?</strong></p> <p style="text-align: justify;">வெளிறிய பகுதிகள் காணப்படுவதற்கு இலைப்பேன் தாக்குதலே காரணமாகும். இதனைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 ஈ.சி. 1 மிலி / லிட்டர் +0.5 மிலி ஒட்டும் திரவமான டிபால் கலந்து தெளிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>பெரு வெங்காயம்/பெல்லாரி வெங்காயம் சாகுபடி செய்ய எவ்வளவு நாள் வயதுடைய நாற்றுக்களை தேர்வு செய்ய வேண்டும்?</strong></p> <p style="text-align: justify;">45 நாள்</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை, <span style="text-align: justify;">சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் </span><span style="text-align: justify;">மைய தொழில்நுட்ப மையம்</span></p> </div>