<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">கம்பி பந்தல் : 1 ஏக்கரில் பாகற்காய், புடலை, பீர்க்கன் சாகுபடி</p> <p style="text-align: justify;">பாசனம் : சொட்டு நீர் பாசனம்</p> <p style="text-align: justify;">அமைப்பு : மேட்டுப்பாத்தியில் மக்கிய தொழு உரம் இடுதல்</p> <p style="text-align: justify;">பார் இடைவெளி : 12 அடி முதல் 14 அடி</p> <p style="text-align: justify;">மழை காலம் : பார் 13 அடி 15 அடி</p> <p style="text-align: justify;">செடி இடைவெளி : 5 அடி</p> <p style="text-align: justify;">விதைப்பு : 2 (அல்லது) 3 விதைகள் படுக்கை வசம் குழியில் நட <span style="text-align: justify;">வேண்டும்</span></p> <p style="text-align: justify;">சொட்டு நீர் பாசனம் : 1 ஏக்கர் 20 நிமிடம்</p> <p style="text-align: justify;">உளவு செய்தல் : வருடம் 1 முறை</p> <p style="text-align: justify;">அடி உரம் போடுதல் : மக்கிய தொழு உரம், கோழி எரு, மண் புழு உரம்</p> <p style="text-align: justify;">பூச்சி பாதுகாப்பு : விளக்குப் பொறி மூலம், இனக்கவர்ச்சி மாத்திரை, டிரைகோடர்மா ஒட்டுண்ணி, மூலிகை பூச்சிவிரட்டிகள், பஞ்சகாவ்யா தெளித்தல், ஜீவாமிர்தம், மீன் அமிலம், அமிர்த கரைசல் – 3 ஜி கரைசல், (பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்)</p> <p style="text-align: justify;">பந்தல் : கல் தூண் கொண்டு, கம்பி பந்தல் அமைக்க 1 ஏக்கருக்கு ரூ.1,35,000/- வேண்டும்.</p> <h3>உழவு</h3> <p style="text-align: justify;">முதலில் 5 கலப்பை (அல்லது) எட்டு கலப்பை கொண்டு உழவு செய்யவும். இரண்டாவது முறை உழவு செய்து 12 முதல் 15 அடி அகலம் பார் இடைவெளி அமைத்து தெற்கு, வடக்கு வாய்க்கால் ஓட்டவும். கரையை ஆட்கள் மூலம் எடுத்து பக்கவாட்டில் மண் அணைக்கவும். வாய்க்காலில் மக்கிய தொழு உரம் போட வேண்டும் (3 டிராக்டர் தேவைப்படும்). பிறகு மேல் மண் லேசாக போடவும். பின்பு 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டிரியா, 2 கிலோ சூடோமோனஸ் மூன்றையும் 25 கிலோ காய்ந்த பொடி செய்த சாணத்துடன் கலந்து மேற்படி பாரில் தூவவும். பின்பு மண்புழு உரம் போட்டு ¾ அடி உயர மேடு செய்து 5 அடிக்கு 1 மேட்டுக்குழி அமைத்து சொட்டு நீர் பாசனம் செய்வும்.</p> <h3>விதைகள்</h3> <p style="text-align: justify;">நாட்டு விதைகளான, பாகற்காய், புடலங்காய், பீர்க்கன்காய், சொரைக்காய், கோவைக்காய், வெள்ளரிக்காய், அவரைக்காய் போன்ற விதைகளை நாட்டுமாட்டு சாண கோமியத்தில் 24 மணி நேரம் ஊறவைத்து பின்பு நடவு செய்யவும்.</p> <h3>நேரடி நடவு</h3> <p style="text-align: justify;">பயோடைனமிக் காலண்டரை பார்த்து நடவு நாட்களில் நடவு செய்ய வேண்டும்.</p> <ul> <li>1 ஏக்கருக்கு சுமார் 500 முதல் 550 குழிகள் அமைக்கவும்.</li> <li>1 குழிக்கு 2 விதைகள் படுக்கை வசம் நடவு செய்ய வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">நீர்ப்பாசனம்</h3> <p style="text-align: justify;">அதிகாலை அல்லது மாலை 1 முறை ஏக்கருக்கு 15 முதல் 20 நிமிடம் தண்ணீர் தினமும் விட்டால் போதும்.</p> <h3 style="text-align: justify;">செடிகள் வளர்ப்பு செய்முறை</h3> <p style="text-align: justify;">தென்னை நார் கழிவு + மக்கிய சாணம் பொடியாய் செய்து இரண்டையும் கலந்து பிளாஸ்டிக் டம்ளரில் (150மிலி) இட்டு 1 விதை போட்டு பூவாளியில் தண்ணீர் விடவும்.</p> <p style="text-align: justify;">9 முதல் 10 நாளில் முளைப்பு வரும். 14 முதல் 15வது நாளில் டம்ளரில் உள்ள செடிகளுக்கு பஞ்சகாவ்யா 300 மில்லி 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.</p> <h3 style="text-align: justify;">நடவு செய்தல்</h3> <p style="text-align: justify;">செடிகளை 20 நாளில் டம்ளருடன் எடுத்து மேற்கண்ட பார்களில் உள்ள மேட்டுப்பாத்தி குழிகளில் (5 அடி இடைவெளியில்) குழிக்கு இரண்டு <span style="text-align: justify;">டம்ளர்</span> வீதம் நடவு செய்து 20வது நாளில் களை எடுக்கவும். தினமும் காலையில் சூரிய உதயம் முன்பாக செய்யவும்.</p> <h3 style="text-align: justify;">வளர்ப்பு</h3> <p style="text-align: justify;">செடிகள் வளர்ந்த 18-வது நாளில் 1 குழிக்கு 2 பிளாஸ்டிக் முளைக்குச்சிகள் ¾ அடி உயரம் நட்டு, பாவுநூல் கயிறு கொண்டு குச்சியில் கட்டி அதை பந்தலில் கட்ட வேண்டும்.</p> <p style="text-align: justify;">வளரும் செடிகள் நூல் கயிற்றில் படரவிட்டு ஒற்றை கொடியாய் பந்தல் வரை சென்றதும் (கணுக்களில் வரும் பக்க கிளைகளை விட வேண்டாம்) பந்தலில் கொடிகளை நான்கு புறமும் பிரித்து படரவிட வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">செடிகளுக்கு வளர்ச்சி ஊக்கி</h3> <p style="text-align: justify;">செடிகளை 18 லிருந்து 20 நாட்களுக்குள் களை செய்து 2 நாள் பூமியை உலர வைக்கவும். ஜீவாமிர்தம் தயார் செய்து அதனுடன் 20 கிலோ பிண்ணாக்கு நீர் கலந்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும். 15 நாட்கள் இடைவெளியில் நிலவள ஊக்கி, மீன் அமிலம், அறப்பு மோர் கரைசல், வேப்பம் பிண்ணாக்கு அல்லது ஆமணக்கு பிண்ணாக்கு போட்டு வர வேண்டும்.</p> <p style="text-align: justify;">70வது நாளில் மட்கிய தொழு உரம் 1 சட்டி குழிக்கு போட வேண்டும். இதனால் மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். செடியின் 60 நாள் வயதில் ஏக்கருக்கு 4 விளக்கு பொறியும் 3 பக்கெட்டு இனக்கவர்ச்சி பொறியும் அவசியம் வைக்க வேண்டும். பஞ்சகாவ்யா 20 நாள் இடைவெளியில் தெளிப்பு செய்ய வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">பயிர் பாதுகாப்பு</h3> <p style="text-align: justify;">15 முதல் 20 நாட்கள் இடைவெளியில் பஞ்சகாவ்யா தெளிக்க வேண்டும். தினமும் காலையில் நான்கு விளக்கு பொறிகளில் உள்ள பூச்சிகளை வடிகட்டி எடுத்து குழியில் புதைத்து விடவும். நல்ல பெண் பூக்கள் மலர அறப்பு மோர் கரைசல் பெளர்ணமி தினம் அன்று காலையில் தெளிக்கவும். வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய் உடன் சோப்பு கரைசல் கலந்து 20 நாள் இடைவெளியில் தெளிக்கவும். அதிக வெப்பமும், குளிர் காற்றும் மாறி மாறி வந்தால் நாட்டு மாட்டு புளித்த மோரும், நடுப்பதம் உள்ள இளநீர் கலந்து தெளிக்கவும். விளக்கு பொறி, இனக்கவர்ச்சியினால் தாய் பூச்சிகள் அழிந்துவிடும். KNOX(Bio மருந்து) 60 நாள் வரை 8 - 10 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 12 முதல் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.</p> <ul> <li>புளித்த மோர் கரைசல்</li> <li>பஞ்சகாவ்யா</li> <li>மூடாக்கு (அல்லது) மல்சிங்</li> </ul> <p style="text-align: justify;">செடிகள் உள்ள பாத்திகளில் நம்மிடம் உள்ள கழிவுகளை போட்டு மூடி சூரிய வெப்பத்தை தடுப்பதன் மூலம் ஈரப்பத்தை காக்கலாம். கருப்பு பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு செய்யலாம். களைகளும் கட்டுப்படும், ஈரப்பதமும் பாதுகாக்கும். செடிகள் பந்தலில் படர்ந்து காய்கள் 65 - 70 நாட்களில் வர ஆரம்பிக்கும். ஒரு நாள் இடைவெளியில் காலை சூரிய உதயத்திற்கு முன் காய்களை அறுவடை செய்து நிழலில் வைத்து சந்தைக்கு அனுப்பவும். காய்கள் நன்கு பிடித்தவுடன் தினமும் காலையிலும், மாலையிலும் தண்ணீர் பாய்ச்சினால் காய்கள் எடை கூடும். அதிக வெப்பம் சுமார் 30 முதல் 40 டிகிரி உள்ளபோது இதுபோல் இரண்டு தடவை தண்ணீர் பாய்ச்சவும். ஏக்கருக்கு 15 நிமிடம் முதல் 20 நிமிடம் போதும். சுமார் 100 நாட்கள் வரை காய்கள் அறுவடை செய்யலாம். செடிகளின் வளர்ச்சி தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்க வேண்டும். இந்த 1 ஏக்கரில் 20000 கிலோவுக்கு அதிகமாய் எடுக்கலாம். வீரிய ஒட்டு ரக விதைகள் பல கம்பெனிகளில் வந்துள்ளது. நமது நிலத்திற்கு தக்கவாறு தேர்வு செய்ய வேண்டும். மேற்கண்ட விதைகளை நாட்டு மாட்டு கோமியம் சாணியில் கலந்த நீரில் ஊறவைத்து 24 மணி நேரம் கழித்து எடுத்து நடவு செய்ய வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">அறுவடை</h3> <p style="text-align: justify;">60லிருந்து 65 நாட்களில் காய்கள் வந்துவிடும். காலையில் 9.30 மணிக்குள் அறுவடை செய்தல் அவசியம். காய்கள் 7 நாட்கள் வரை நன்கு இருக்கும். காய்கள் மூன்று நாள் இடைவெளியில் அறுவடை செய்ய வேண்டும். 90 நாட்கள் முதல் 100 நாட்கள் வரை அறுவடை தொடரும். ஏக்கருக்கு சுமார் 20 டன் முதல் 25 டன் காய்கள் கிடைக்கும்.</p> <h3 style="text-align: justify;">காய்கறிப் பயிர்களில் <span style="text-align: justify;">அதிக உற்பத்தி </span>பெறுவதற்கான புதிய உத்திகள் (ஏக்கருக்கு)</h3> <p style="text-align: justify;">கடலை பிண்ணாக்கு 10 கிலோ, தேங்காய்ப் பிண்ணாக்கு 10 கிலோ, பருத்தி விதை பிண்ணாக்கு 10 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ நான்கையும் தனித் தனியே சுமார் 4 நாட்கள் ஊறவைத்து (நன்கு புளிக்க வைத்து) நான்கையும் ஒன்றாக கலந்து பாஸ்போ பேக்டீரியா 1 1/2 கிலோ, அசோஸ்பைரில்லம் 1 1/2 கிலோ, க்யுமிக் பவுடர் 1 1/2 கிலோ சேர்த்து நன்கு கரைத்து பிண்ணாக்கு கரைசலுடன் கலந்து 20 நாட்கள் இடைவெளியில் செடிகளுக்கு அருகில் ஊற்றி வந்தால் நல்ல உற்பத்தி கிடைக்கும்.</p> <p style="text-align: justify;">20 நாட்கள் இடைவெளியில் புளித்த மோர் 200 மில்லியுடன் சூடோமோனாஸ் 100 கிராம் கலந்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் மேல் தெளித்து வரவும்.</p> <p style="text-align: justify;">3 ஜி கரைசல் (இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கரைசல்) 20 நாட்கள் இடைவெளியில் செடிகளின் மேல் தெளித்து வரவும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை</p> </div>