<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;"><span style="text-align: justify;">சுரைக்காய்</span></h3> <p style="text-align: justify;">உடலுக்கு குளிர்ச்சி தரும் சுரைக்காயை விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்து பயன்பெறலாம்</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/9f5ef7dadd634b908bbe16a44153cc30_S_secvpf.gif" /></p> <ol> <li style="text-align: justify;">சுரைக்காய் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது. இதனால் கோடைக் காலத்தில் சுரைக்காயை அதிகளவில் மக்கள் வாங்கி பயன்படுத்துவது வழக்கம்.</li> <li style="text-align: justify;">சுரைக்காய் வளர்ச்சிக்கு மண்ணின் காரம், அமிலத் தன்மை 6 முதல் 7 சதவீதமாக இருப்பது நல்லது. பொதுவாக இதனை அனைத்து வகையான மண்ணிலும் சாகுபடி செய்யலாம். ஆனால் நல்ல வடிகால் வகைகளும் சாகுபடிக்கு ஏற்றவையாகும்.</li> <li style="text-align: justify;">இது வெப்ப மண்டலப் பயிராகவும், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. சில பகுதிகளில் மரங்கள், வேலிகளில் படர்ந்தும் வளரும்.</li> </ol> <h3>சுரைக்காயின் ரகங்கள்</h3> <p style="text-align: justify;">கோ.1, பூசா சம்மர் பிராலிபிக் லாங், பூசா சம்மர் பிராலிபிக் ரவுண்ட், பூசா நவீன், பூசா சந்தேஷ், பூசா மஞ்சரி போன்ற ரகங்கள் உள்ளன.</p> <h3>நிலம் தயாரித்தல்</h3> <ol> <li style="text-align: justify;">நிலத்தை 3 முதல் 4 முறை நன்றாக உழுது கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும்.</li> <li style="text-align: justify;">பின்னர் 2.5 மீட்டர் இடைவெளியில் 60 சென்டி மீட்டர் அகலமுள்ள வாய்க்கால் தயார் செய்ய வேண்டும். அதில் 2.5 மீட்டர் இடைவெளியில் 50 கிராம் கலப்பு உரமிட்டு மேல் மண்ணுடன் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும். இதையடுத்து குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும்.</li> </ol> <h3>விதையளவு</h3> <p style="text-align: justify;">ஒரு ஹெக்டேருக்கு 3 முதல் 4 கிலோ விதையை விதைக்கலாம்.</p> <h3>பின் செய் நேர்த்தி</h3> <ol> <li style="text-align: justify;">சுரைக்காய்க்கு வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். விதை முளைப்புக்கு முன் குடம் வைத்து தண்ணீர் ஊற்றவேண்டும். வளர்ந்த உடன் வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.</li> <li style="text-align: justify;">விதை ஊன்றிய 20 முதல் 30 தினங்கள் கழித்து களைகளை எடுத்து சுத்தம் செய்து ஒரு ஹெக்டேருக்கு 20 கிலோ தழைசத்தை மேலுரமாக இட்டு மண் அனைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.</li> <li style="text-align: justify;">கொடிகள் நிலத்தில் படருவதால் மழைக்காலங்களில் பாதிப்பு இல்லாமல் இருக்க சின்ன குச்சிகளை ஊன்று கோலாக பயன்படுத்தி நிலத்தில் படாமல் பாதுகாக்கலாம். இதன் மூலம் அழுகல் நோய் வராமல் தடுக்கலாம்.</li> </ol> <h3>அறுவடை</h3> <p style="text-align: justify;">சுரைக்காய் முற்றுவதற்கு முன்பாகவே அறுவடை செய்து விட வேண்டும். விதை ஊன்றி 70 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம்.</p> <h3>மகசூல்</h3> <p style="text-align: justify;">இந்த வழிமுறைகளில் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 35 டன் வரை அறுவடை செய்யலாம்</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை</p> </div>