<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">ஊட்டச்சத்து பயிர் வளர்ச்சி மற்றும் பயிரின் நிர்வாகத்திற்குப் பயன்படுகிறது. ஊட்டச்சத்து மேலாண்மை இடம் மற்றும் சூழ்நிலையைச் சார்ந்தது. இவை சூழ்நிலைக் காரணிகளின் விளைவுகளைக் குறைத்து பயிரின் உற்பத்தியை நிலைபடுத்துகின்றன.</p> <h3 style="text-align: justify;">ஊட்டச்சத்து மேலாண்மையை திட்டமிடுதல்</h3> <ul style="text-align: justify;"> <li>முருங்கையை நடவு செய்வதற்கு முன் மண் வளத்தின் தற்போதைய நிலையை அறிதல் வேண்டும்.</li> <li>முருங்கையின் மூலம் ஊட்டச்சத்து நீக்கப்படும் நிலையினை கணக்கிட வேண்டும்.</li> <li>ஊட்டச்சத்தின் முந்தைய நிலையின் தற்போதைய இருப்பினைக் கணக்கிட வேண்டும்.</li> <li>ஊட்டச்சத்தின் இடம்பெயருதலின் தாழ்நிலை இடர்பாட்டினைக் கணக்கிட வேணடும்.</li> <li>ஊட்டச்சத்தினை ஒவ்வொரு முறை இடும்போதும் பதிவு செய்தல் வேண்டும் .</li> </ul> <h3 style="text-align: justify;">உரமிடுதல்</h3> <ul style="text-align: justify;"> <li>முருங்கை உரம் இல்லாமலே நன்கு வளரும் தன்மை கொண்டது.</li> <li>முருங்கை நடுவதற்கு உள்ள நடவுக்குழிகளில் மக்கிய உரத்தை நன்கு கலந்து குழிகளில் நிரப்ப வேண்டும்.</li> <li>மணிச்சத்து வேரின் வளர்ச்சிக்கும், தழைச்சத்து இலையின் பெருக்கத்திற்கும் ஊக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. 7.5 கிலோ தொழு உரம் மற்றும் 0.37 கிலோ அம்மோனியம் சல்பேட்டினை ஒரு மரத்திற்கு இடுவதால் காயின் மகசூல் 3 பங்கு உயர்கிறது. உரம் மற்றும் நீர் முருங்கையின் அதிக பட்ச மகசூல் பெறுவதற்கு உரிய காரணிகளாகும்.</li> <li>தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஒரு மரத்திற்கு 7.5 கிலோ தொழு உரத்துடன் 037 கிலோ அம்மோனியம் சல்பேட் இடுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என நிருபிக்கப்பட்டுள்ளது.</li> <li>இந்த மகசூல் உரமிடாத மரத்தினைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. தொழுஉரம் 20 கிலோ/ குழி, மேலுரமாக 100 கிராம் அளவுள்ள யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் முரியேட் ஆப் பொட்டாஷ் ஆகிய மூன்றினையும் சமபங்கு உள்ளவாறு ஒரு மரத்திற்கு இடுவதன் மூலம் உற்பத்தி அதிகரிப்பதாக நிருபிக்கப்பட்டுள்ளது.</li> <li>ஒர் ஆண்டு வயதுடைய முருங்கையில் 6/4 என்று தேர்ந்தெடுக்கப்பட்ட இரகத்தில் 250:125:125 கிராம் எண்.பி.கே ஒரு மரத்திற்கு இடுவதன் மூலம் 524 கிலோ காய் பெறலாம்</li> </ul> <p style="text-align: justify;">* அதிக மகசூலுக்கு முருங்கையில் 100 கிராம் யூரியா, 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 50 கிராம் முரியேட் ஆப் பொட்டாஷ் போன்ற உரங்களை நடவு செய்த 3 மற்றும் 6-வது மாதத்திலும் 100 கிராம் யூரியாவை மேலுரமாக இட்டு நல்ல மகசூலினைப் பெறலாம்.</p> <p style="text-align: justify;">* பியூலா (2001), இவர் செடி முருங்கையில் உயிர் உரம், அங்கக உரம் மற்றும் எண்.பி.கே போன்றவற்றை பல்வேறு அளவுகளில் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்து, முடிவாக கோழி உரம் (500 கிராம் / குழி) + வேப்பம் புண்ணாக்கு (250 கிராம் / குழி) (250 கிராம் / குழி) + பஞ்சகாவியா (2 சதவீதம்) + 150:150:100 கிராம் எண்.பி.கே / மரம் என்ற இந்த விகிதத்தில் உரம் தரும் பொழுது செடியின் இளம் பருவ வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையை நாம் கடைபிடிப்பதன் மூலம் மண்ணின் வளத்தினைப் பாதுகாக்கலாம்.</p> <h3 style="text-align: justify;">தொழு உரம்</h3> <p style="text-align: justify;">தொழு உரம் என்பது பண்ணை விலங்குகளான மாடு, ஆடு மற்றும் கோழி ஆகியவற்றின் கழிவுகளைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். தொழு உரம் பயன்படுத்துதல் நமது பாரம்பரியமான முறையாகும். தொழு உரம் பயன்படுத்துவதால் மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதி பொருட்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன.</p> <p style="text-align: justify;">தொழு உரத்தில் காணப்படும் சத்துக்கள் (தோராயமான அளவு)</p> <ul style="text-align: justify;"> <li>0.5 சதவீதம் - தழைச்சத்து</li> <li>0.25 சதவீதம் - மணிச்சத்து</li> <li>0.50 சதவீதம் - சாம்பல் சத்து</li> </ul> <p style="text-align: justify;">ஒரு டன் தொழு உரத்தில் இருந்து 5 கிலோ தழைச்சத்து,</p> <p style="text-align: justify;">2.5 கிலோ மணிச்சத்து மற்றும் 5 கிலோ சாம்பல் சத்தினைப் பெறலாம். மக்கிய உரம் தோட்டம், கிராமம் மற்றும் நகர்புறத்தில் உள்ள தேவையற்ற பொருட்களைச் சேகரித்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்க விட வேண்டும். மண் புழு உர தொழில்நுட்பம் 2 மீ நீளம் x 1 மீ அகலம் x 1 மீ ஆழம் உள்ள குழி எடுக்க வேண்டும். உடைந்த செங்கற்களை 5 செ.மீ நீளத்திற்கு குழியின் அடிப்பகுதியில் நிரப்ப வேண்டும். 2-வது அடுக்காக 20 செ.மீ அளவிற்கு களிமண் அல்லது மணல் நிரப்ப வேண்டும். இதனை மண்புழு படுக்கை (Vermibed) எனலாம். இந்த படுக்கை மீது தொழு உரம் நிரப்பி, இதன் மீது 100 எண்ணிக்கை உள்ள மண்புழுக்களை பெருக்கத்திற்கு விட வேண்டும். படுக்கையின் மேற்புறம் வைக்கோல் கொண்டு நிரப்பி, கால இடைவெளியில் நீர் தெளிக்க வேண்டும். 30 நாட்களுக்குப் பிறகு தேவையற்ற பொருட்களை 5 செ.மீ உயரத்திற்கு நிரப்பி படுக்கையை தென்னை ஒலை கொண்டு மூட வேண்டும். தேவையற்ற பொருட்களை வாரத்திற்கு 2 முறை நிரப்ப வேண்டும் (படுக்கை நிரம்பும் வரை). 45 நாட்களுக்கு மட்டும் நீர் விட வேண்டும். மண்புழு குழியில் உள்ள பொருட்களை உண்டு கருமை/காவி நிறமுள்ள உரத்தை நமக்கு தருகிறது. ஒரு ஏக்கருக்கு 2000 கிலோ மண்புழு உரம் இடலாம். ஒரு முருங்கை மரத்திற்கு 1-10 கிலோ வீதம் இடலாம்.</p> <h3 style="text-align: justify;">ஆட்டின் உரம்</h3> <p style="text-align: justify;">ஆடு மற்றும் செம்மறி ஆட்டின் கழிவுகள் நேரடியாக நிலத்தில் விழுவதால் அவை மக்கி உரமாகப் பயன்படுகிறது. ஆட்டின் உரத்தில் காணப்படும் சத்துக்கள்</p> <ul style="text-align: justify;"> <li>தழைச்சத்து - 3 சதவீதம்</li> <li>மணிச்சத்து - 1 சதவீதம்</li> <li>சாம்பல் சத்து - 2 சதவீதம்</li> </ul> <h3 style="text-align: justify;">பசுந்தாள் உரம்</h3> <p style="text-align: justify;">பசுந்தாள் உரங்களை இடும் பொழுது ஊட்டங்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல் மண் வளத்தையும் மண் கட்டமைப்பையும் மேம்படுத்தி, பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றது. சணப்பை, தக்கைப் பூண்டு, பில்லிப்பெசரா, சீமை அகத்தி போன்ற பசுந்தாள் உரங்களை மண்ணில் விதைத்து, 30 நாட்கள் கழித்து மடக்கி உழுதுவிடலாம். பசுந்தாள் உரங்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்து மண்ணில் 30 நாட்கள் கழித்து மடக்கி புதைத்து விடலாம். 25 டன்கள் எடை கொண்ட பசுந்தாள் உரங்கள் வாயிலாக மண்ணுக்கு 50 கிலோ தழைச்சத்து கிடைக்கின்றது.</p> <p style="text-align: justify;">பயிரிடப்படாத நிலங்கள், வயல் வரப்பு மற்றும் வேறு இடங்களில் வளரக்கூடிய செடிகளும் பசுந்தழை எருவிற்கான மற்றொரு ஆதாரம் ஆகும். பசுந்தழை உரத்திற்கு முக்கியமான செடி வகைகள்-வேம்பு, இலுப்பை, கொளுஞ்சி, புங்கம், எருக்கு, அகத்தி, சுபாபுல் மற்றும் இதர புதர் செடிகள் போன்றவைகளும் கிடைக்கின்றன.</p> <h3 style="text-align: justify;">புண்ணாக்கு</h3> <p style="text-align: justify;">எண்ணெய் பயிர்களில் எண்ணெய் நீக்கிய பிறகு கிடைக்கும் புண்ணாக்கில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் போன்ற தாதுக்கள் அதிகமாக காணப்படுகிறது. விவசாயிகள் புண்ணாக்குகளை மண்ணில் உரமாக பயன்படுத்துகின்றனர். உண்ணத்தகுந்த புண்ணாக்குகள் மாட்டிற்கு உணவாகப் பயன்படுகிறது. உண்ணத்தகாத புண்ணாக்குகள் மட்டுமே உரமாக இந்தியாவில் பயன்படுத்தப்படும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்</p> </div>