மிளகாய் சாகுபடி சித்திரைப் பட்டத்தில் காய்கறி சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் வீரிய ஒட்டுரக காய்கறி விதைகளை தரமானதாக உள்ளதா, நல்ல முளைப்புத்திறன் உள்ளதா என விவசாயிகள் பார்த்து வாங்க வேண்டும். குறிப்பாக, மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள் 100 சதவீதம் முளைப்புத் திறன் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். வீரிய ஒட்டுரக மிளகாய் பயிரை 2.5 அடி இடைவெளிவிட்டு நடவு செய்தால் ஏக்கருக்கு 8,890 செடிகள் வரை பராமரிக்கலாம். இப்படி செய்தால் 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெறலாம். விவசாயிகள் தங்களது விதைகளை 10 கிராம் மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலையங்களில் ரூ.30 செலுத்தி பரிசோதனை செய்யலாம். பாரம்பரிய மிளகாய் சாகுபடியை மேற்கொள்ள சில அறிவுரைகள்: மிளகாய் விதையை சாண எரிவாயு கலன் கழிவில் ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து விதைத்தல் விதை வீரியமாக முளைத்து நன்கு வளர்வதோடு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்குகிறது. ஆட்டுக்கிடை அமர்த்தினால் அதிக மகசூல் கிடைக்கும். கடலை புண்ணாக்கு இடுவதால், பூ உதிர்வது தடுக்கப்படுவதோடு மகசூல் அதிகரிக்கும். அதிக பூக்கள் பெறவும், பூ உதிர்வதைக் குறைப்பதற்கு, பெருங்காயத்தை ஏக்கருக்கு 1 கிலோ வீதம் எடுத்து, துணியில் கட்டி வாய்க்காலில் வைக்க வேண்டும். ஆமணக்குப் பயிரை வரப்புப் பயிராக பயிர்ச் செய்தால் அது புகையிலை வெட்டுப்புழுவை கவரும். 5 மிளகாய் வரிசைக்கு 2 வரிசை மக்காச்சோளம் அல்லது சோளம் நடவு செய்தால் தேமல் நோயைக் கட்டுப்படுத்தலாம். முள்செடி இலைச்சாற்றை 2 மாதம் ஆன செடியில் தெளித்தால், இலைப்புள்ளி, சாம்பல் நோய் அழுகலைக் கட்டுப்படுத்தலாம். வேம்பு, அரளி, நொச்சி, துளசி, எருக்களை ஆகியவற்றின் இலைகளை இடித்து அதை வடிகட்டி அந்தச் சாற்றை தெளிக்கலாம். இதனால் இலைச்சுருள் நோய், வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்துவதோடு, நன்றாகச் செடி வளரும். வில்வம் இலைச்சாற்றை தெளிப்பதால் அடி அழுகல் நோய் கட்டுப்படுத்தலாம். கேள்வி பதில்கள் மிளகாயில் அதிக மகசூல் பெற ஏதேனும் உக்திகள் உண்டா? மிளகாயில் பூக்கள் உதிர்வதைத் தடுப்பதன் மூலம் அதிக மகசூல் எடுக்க முடியும். எவ்வாறு வணிகரீதியாக குடைமிளகாய் சாகுபடி செய்ய முடியும்? வணிகரீதியாக குடைமிளகாயினை நிழல்வலைக்குடில்களில் சாகுபடி செய்யலாம் பஜ்ஜி மிளகாயினை அதிக வெப்ப பிரதேசங்களில் சாகுபடி செய்யலாமா? பஜ்ஜி மிளகாயினை அதிக வெப்ப மண்டலங்களில் சாகுபடி செய்ய முடியாது. மேலும் இதனை நிழல்வலை குடில் தென்னை மரங்களுக்கிடையே சாகுபடி செய்யலாம். ஆதாரம்: காஞ்சிபுரம் விதை பரிசோதனை நிலையம்