<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">தற்போது மாமரங்களில் பூப்பிடிக்கும் பருவம் என்பதால் பூங்கொத்து புழுக்கள் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும்</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/mango.jpg" /></p> <p style="text-align: justify;">தற்போது, மாமரங்கள் பூ பிடிக்கும் பருவம் என்பதால் தத்துப்பூச்சி, பூங்கொத்து புழு, இலைச்சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், இலைப்புள்ளி போன்ற பல்வேறு நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்குதல் அதிகம் இருக்கும். இந்நோய் தாக்கினால் மாம்பழ மகசூல் குறையும். அதனால், விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">பயிர் பாதுகாப்பு முறை</h3> <p style="text-align: justify;">தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு பாசலோன் 35 இசி 1.5 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து கிளைகள், தண்டுகள், மரத்தின் இலைகள், ஆகியவைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். அதேபோல், கார்பரில் 50 சதவீதம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து பூப்பிடிக்கும் காலத்தில் தெளிக்க வேண்டும். பூப்பிடிக்கும் பருவம் என்பதால் பூங்கொத்து புழு அதிகம் தாக்கும். இதை கட்டுப்படுத்த பாசலோன் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">நோய் தாக்குதல்</h3> <p style="text-align: justify;">தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் இருந்தால் தரை மட்டத்திலிருந்து சுமார் 1 மீட்டர் உயரத்தில் மரத்தின் பட்டையை ப வடிவில் செதுக்கி இடையில் நனையும் பஞ்சை வைத்து மானோகுரோட்டாபாஸ் 10 மில்லி மருந்தை பஞ்சு நனையும் வரையில் வைத்து பின்பு பட்டையை மரத்தோடு பொறுத்தி களிமண் பசையினால் மூட வேண்டும். இலைப்புள்ளி தாக்குதல் இருந்தால் மாங்கோசெப் 2 கிராம் மருந்து ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பென்டாசிம் 1 கிராமை ஒரு லிட்டர் தண்ணீரிலும் அல்லது க்ளோராதலேனில் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து பிஞ்சுப் பருவத்திலிருந்து அறுவடை செய்வதற்கு முன்பு வரையில் 15 நாள்களுக்கு ஒரு முறை தெளித்து வர வேண்டும்.</p> <p style="text-align: justify;">இதுபோன்ற ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்றி மாம்பழ மகசூலை அதிகரிக்க செய்ய வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை</p> </div>