<h3 class="body" style="text-align: left;">நிரந்தர வருமானம் தரும் கோரை</h3> <p class="body" style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/korai_2187533f.jpg" width="434" height="267" /></p> <p class="body" style="text-align: justify;">தமிழ்நாட்டில் சில பகுதிகள் செழிப்பான நன்செய் பூமியாகவும், ஏனைய பகுதிகள் வானம் பார்த்த புன்செய் நிலமாகவும் உள்ளது.</p> <p class="body" style="text-align: justify;">நன்செய் பகுதியில் அதிகமாக நெல், வாழை ஆகியவை பயிரிடப்படும் நிலையில் காவிரியை யொட்டியுள்ள புதுப்பாளையம், மறவாபாளையம், நொய்யல், நெரூர், குளித்தலை, நங்கவரம் என காவிரி பாசன பகுதிகளில் அதிகளவில் கோரை சாகுபடி நடைபெற்று வருகிறது. நெல், வாழை, கரும்பு, வெற்றிலை போன்ற நன்செய் பயிர்களை விட்டு எதற்கு கோரை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது.</p> <p class="body" style="text-align: justify;">“கோரைக்கு எப்போதும் தண்ணீர் நிற்க வேண்டும். மேலும், தண்ணீர் பாய்ச்சலையும், காய்ச்சலையும் தாங்கக்கூடியது கோரை. எவ்வளவு தண்ணீர் நின்றாலும் தாங்குவதுடன், தண்ணீ ரின்றி வறண்டு போனாலும் தாங்கக் கூடியது கோரை. ஆடு, மாடுகள் மேயாது. திருடு போகாது, எந்த பருவத்திலும் சாகுபடி மேற் கொள்ளலாம்.</p> <p class="body" style="text-align: justify;">ஒரு முறை கோரை சாகுபடி செய்துவிட்டால் 10, 15 ஆண்டுகள் வரை அதனை வைத்து வருவாய் ஈட்டலாம். வியாபாரிகள் நம் வீடு தேடி வந்து கொள்முதல் செய்து கொள்வார்கள். நிலத்தை உழவு செய்து, வரப்பு வெட்டி நெல்லுக்கு தயார் செய்வது போல வயலைப் பண்படுத்திக் கொடுத்து விட்டால், வியாபாரிகளே கோரைக்கிழங்கு நட்டுக் கொடுத்து விடுவார்கள்.</p> <p class="body" style="text-align: justify;">முதல் முறை சாகுபடியின் போதும் மட்டும் நடவுக்கென கணிசமான தொகையை செலவிடுவதுடன், உரம் வைத்தல், களையெடுப்பு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.</p> <p class="body" style="text-align: justify;">அறுவடைக்காக 10 மாதங்கள் வரை காத்திருக்கவேண்டும். ஒரு கட்டு கோரை ரூ.900 முதல் ரூ.1,200 வரை விலை போகிறது. ஒரு கட்டில் 25 முதல் 30 கிலோ வரை கோரை இருக்கும். ஒரு ஏக்கரில் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம். அதன்பின் களை எடுப்பது, உரம் வைப்பது ஆகிய பணிகளை மட்டும் மேற்கொண்டால் 6 மாதங்களுக்கு ஒரு முறை வியாபாரிகள் வந்து அறுவடை செய்து கொள்வார்கள். புகழ்பெற்ற பத்தமடை பாய் தயாரிக்க கோரைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. கோரை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.”</p> <p class="body" style="text-align: justify;"><span style="text-align: justify;">ஆதாரம்: உழவர் ஆய்வுமன்ற அமைப்பு, <span style="text-align: justify;">மேட்டுமருதூர்</span></span></p>