மண் பரிசோதனை தற்பொழுது நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு உணவு தேவையை சமாளிக்க பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரித்து வேண்டியுள்ள கட்டாய தருணத்தில் மண் வளத்தை பதுகாக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும். விளை நிலங்களுடைய சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. மண் வளத்தையும் சரியாக பாதுகாக்காத்தால் பயிர் மகசூல் குறைந்து வருகிறது. மண் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை செய்து, பரிந்துரைக்கப்பட்ட கனிம உரங்களையும், இயற்கை எருக்களையும் அதிகமாக உபயோகிக்க வேண்டிய கட்டாய தருணத்தில் உள்ளோம். மண்ணின் மாறுபட்ட தன்மைகளால் ஏற்படும் விளைவுகள் மண்ணில் களர்த்தன்மை (பி.எச்.8.5க்கு மேல்) அதிகரித்தால், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். மகசூல் குறையும். உவர்த்தன்மை (ஈசி 3.0க்கு மேல்) அதிகரித்தாலும், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். மகசூல் குறையும். தழைச்சத்து, பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. அளவு அதிகமானால், பயிர் அதிகம் வளர்ந்து பூச்சி நோய்த் தாக்குதலுக்கு உட்படுகிறது. மகசூல் பாதிக்கப்படும். மணிச்சத்து, பயிரில் மணிகள் முதிர்ச்சி அடையும், வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அளவு அதிகமானால் பயிருக்குக் கிடைக்காமல் மண்ணில் வீணாகிறது. சாம்பல்சத்து பயிரில் பூச்சிநோய்கள் வராமல் காக்கிறது. வறட்சியைத் தாங்க உதவுகிறது. அளவு அதிகமானால் பயிருக்குக் கிடைக்காமல், மண்ணில் வீணாகிறது. மண் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்? உரச்செலவைக் குறைந்து அதிக மகசூல் பெற்றிட மண்ணில் உள்ள களர், அமிலத்தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்திட தழை உரம், தொழு உரம், ஜிப்சம், சுண்ணாம்பு இவற்றின் அளவை அறிந்து இடவும். மண்ணின் உவர்த்தன்மைகளை அறிந்து வடிகால் வசதியைப் பெருக்குதல். உப்பைத்தாங்கி வளரும் சூர்யகாந்தி, பருத்தி மிளகாய்ப் பயிர்களைச் சாகுபடி செய்தல். மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும். பயிர்களுக்குத் தேவையான உரமிடும் அளவை அறிந்து உரமிடவும். தேவைக்கேற்கு உரமிடுவதால் உரச்செலவை குறைக்கவும். இடும் உரம் பயிருக்கு முழுமையாக கிடைத்திடவும். அங்ககச்சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை பெருக்கிடவும். மண்ணின் தன்மைக்கேற்ப பயிரைத் தேர்ந்தெடுக்கவும் மண் பரிசோதனை அவசியம். மண் பரிசோதனைக்கு மண் மாதிரி சேகரிப்பது எப்படி? 1) ஒரு வயலில் எடுக்கும் மண் மாதிரி அந்த வயலின் சராசரி தன்மையைக் காட்டும் வகையில் இருக்க வேண்டும். மண்ணின் வளமும், தன்மையும், ஒரே வயலில் கூட இடத்திற்கு இடம் மாறுபடும். ஆகையால், ஒரே இடத்தில் மண்மாதிரி எடுக்கக்கூடாது. ஏக்கருக்கு குறைந்தது 10 இடங்களில் எடுத்து கலந்து அதிலிருந்து கால் பங்கிட்டு முறையில் அரைகிலோ மண் மாதிரி எடுக்க வேண்டும். 2) மண் மாதிரி எடுக்கும் சமயம் எரு குவிந்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மரநிழல் மற்றும் நீர் கசிவு உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். 3) மண் மாதிரி எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை மேல் மண்ணை நீக்காமல் கையினால் அப்புறப்படுத்த வேண்டும். 4) ஆங்கில எழுத்து V வடிவக் குழி குறிப்பிட்ட ஆழத்திற்கு வெட்ட வேண்டும். குழியின் இரு பக்கங்களிலும் மேலிருந்து கீழ்வரை ஒரே – சீராக அரை அங்குல கனத்தில் செதுக்கவேண்டும். வெட்டிய மண்ணை ஒரு சட்டியிலோ (அ) சாக்கிலோ போட வேண்டும். காய்ந்து வெடித்த வயலில் குழி வெட்ட சிரமமாக இருந்தால் மண்கட்டி ஒன்றை பெயர்த்து மேலே வைத்து அதன் பக்கவாட்டில் மண்ணை குறிப்பிட்ட ஆழத்திற்கு செதுக்கி எடுக்கவும். 5) V வடிவ குழியின் ஆழம் பயிருக்கு பயிர் மாறுபடும். பயிர் ஆழம் நெல், கேழ்வரகு, கம்பு, வேர்க்கடலை மேலிருந்து 15 செ.மீ. பருத்தி, கரும்பு, மிளகாய், வாழை, மரவள்ளி மேலிருந்து 22.5 செ.மீ. தென்னை, மா மற்றும் பழத்தோட்ட பயிர்களுக்கு மூன்று மாதிரிகள் 30.60.90 செ.மீ. 6) களர், உவர் நிலத்தில் ஒவ்வொரு அடிக்கும் 1 மண் மாதிரி வீதம் 3 மாதிரி எடுக்கவும். 7) நிலம் சாகுபடியில் இல்லாத சமயத்தில் மண்மாதிரி எடுக்கவேண்டும். 8) வயலில் சேகரித்த மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்த வேண்டும். சுத்தமான தரையில் (அ) காகித விரிப்பில் மண்ணை சீராகப்பரப்பி நான்கு சமபாகங்களாகப் பிரிக்கவும். பின்னர் எதிர் மூலையில் இருபாகங்களில் உள்ள மண்ணை நீக்கி விடவும். மீண்டும் மண்ணை பரப்பி முன்பு செய்தது போல் நான்கு சமபாகங்களாக பிரித்து வேறு எதிர் எதிர் மூலையில் உள்ள மண்ணை நீக்கிவிடவும். ஈரமான மண் மாதிரியை அனுப்பினால் பிளாஸ்டிக் பையில் மண் மாதிரி விவரத்தாள் அல்லது அட்டையை வைக்கவும். 9) நுண்ணூட்ட ஆய்வு மாதிரிகளை மூங்கில் குச்சியால் மேற்கண்ட முறைப்படி எடுக்கவும். பென்சிலால் எழுதினால் எழுத்து அழியாது இப்படி பகுத்து பிரித்து சுமார் அரை கிலோ மண்ணை துணிப்பையில் இட்டு கட்டி விபரங்களை இணக்கவும். வேளாண்துறை மண் பரிசோதனை நிலையம் (அ) இப்கோவின் நடமாடும் மண் ஆய்வகம் (அ) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அமைந்த ஆய்வு கூடங்களின் மூலம் மண் மாதிரிகளை ஆய்வு செய்து பயன்பெறவும். ஆதாரம்: இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம்