<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">நெற்பயிர்களை குலைநோய் கடுமையாக தாக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குகிறது. இதில் இருந்து தங்களது நெற்பயிரைப் பாதுகாக்க விவசாயிகள் கீழ்கண்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும்.</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/b9abbfbb1ba8bcdba4-ba8b9fbc8baebc1bb1bc8b95bb3bcd/copy_of_34.jpg" width="417" height="259" /></p> <h3 style="text-align: justify;">குலைநோய் அறிகுறிகள்</h3> <ul> <li style="text-align: justify;">பயிரில் உள்ள இலைகள், தண்டு, குருத்து உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் தாக்கப்பட்டிருக்கும். இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய திட்டுகளை உருவாக்கும்.</li> <li style="text-align: justify;">கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர்மணிகள் சுருங்கியும், பகுதி நிறைந்தும், கதிர்கள் உடைந்து தொங்கிக் கொண்டிருக்கும். இதையே கழுத்துக் குலை நோய் என்கிறோம்.</li> <li style="text-align: justify;">பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணுத் தாக்குதலும் ஏற்படுவதால், வெண்கதிர் அறிகுறி தோன்றும். கதிர்ப் பருவநிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. ஆனால் கதிர்ப் பருவத்துக்குப் பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானாலும் குறைந்த தரத்துடன் காணப்படும்.</li> <li style="text-align: justify;">கதிர், கதிர்க்கிளைகளில் உள்ள புள்ளிகள் பழுப்பு நிறமாக அல்லது அடர்பழுப்பு நிறமாக இருக்கும். நெல் ரகங்களைப் பொருத்து, புள்ளிகளின் அளவும், வடிவமும் மாறி காணப்படும்.</li> </ul> <h3 style="text-align: justify;">நோய்க்காரணி</h3> <p style="text-align: justify;">சேமிப்பு நெல் விதைகள், தாக்கப்பட்ட தூர்களில் இந்நோய் காரணி இருக்கும். பூசண இனவிருத்தி அமைப்புகள், வித்துகள் மூலம் அடுத்த பருவ நெற்பயிருக்கு இந்நோயைப் பரப்பும் பூசணி வித்துகளை காற்றின் மூலம் மற்ற நெற்பயிர்களுக்கு நீண்ட தூரம் வரை பரப்பும்.</p> <h3 style="text-align: justify;">உழவியல் முறை</h3> <ul> <li style="text-align: justify;">குலைநோய் எதிர்ப்பு ரகங்களை பயிர் செய்ய வேண்டும்.</li> <li style="text-align: justify;">நோய் தாக்குதலைத் தாங்கும் ரகங்களான கோ 47, கோ 5,0 ஏடிடீ 36, ஏஎஸ்டீ 16, ஏஎஸ்டீ 2, 0 ஏடிடீ 39, ஏஎஸ்டீ 19, டிபிஎஸ் 3, வெள்ளை பொன்னி, ஏடிடீ 44, பிபிடி 5204, கோஆர்எச், பல்குணா, ஸ்வர்ணமுகி, சுவாதி, பிரபாட், ஐஆர் 64, ஐஆர் 36, ஜெயா ஆகியவற்றை பயிரிடலாம்.</li> <li style="text-align: justify;">அதிக தழைச் சத்து உரமிடுவதைத் தவிர்க்க வேண்டும். தழைச் சத்து உரத்தை மூன்றாகப் பிரித்து இடவேண்டும். வரப்பிலிருக்கும் களைகளை அழிக்க வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">நோய் தடுப்புமுறை</h3> <ul> <li style="text-align: justify;">புழுதி நாற்றங்கால்களையும் தாமதமாக நடுதலையும் தவிர்க்க வேண்டும். அறுவடைக்குப் பின் வைக்கோல், தூர்களை எரித்து விடவேண்டும். வரப்புகள், பாத்திகளின் மீதுள்ள புல்வகைகள், மற்ற களைகளை அழிக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">சுடோமோனாஸ், புளோரசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும். 25 சதுரமீட்டர் பரப்புள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ. ஆழம் வரை நீரைச் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சுடோமோனாஸ், புளோரசன்ஸ் பொடியைத் தூவி நன்கு கலக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">நாற்றுகளின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 45 நாள்களுக்கு பின் 10 நாள் இடைவெளியில் சுடோமோனாஸ் புளோரசன்ஸ் பொடியை 0.5 கிராம் என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">ரசாயன முறை</h3> <ul> <li style="text-align: justify;">காலை 11 மணிக்குள்ளும், மாலை 3 மணிக்கு மேலும் தான் இம்மருந்துகளை தெளிக்க வேண்டும். கேப்டன், கார்பன்டாசிம், டிரைசைக்லசோல் ஆகிய ஏதோ ஒன்றோடு 2 கிராம், ஒரு கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.</li> <li style="text-align: justify;">டீரைசைக்லசோல் ஒரு கிராம், லிட்டர் தண்ணீர் அல்லது கார்பன்டாசிம் ஒரு கிராம், ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகித்ததில் கலந்து தெளிக்க வேண்டும். முழுமையாக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நாற்றங்கால், தூர்வைக்கும் பருவம், கதிர் வெளிவரும் பருவங்களில் 3 அல்லது 4 முறை தெளிக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">நாற்றங்கால் பருவத்தில் குறைந்த தாக்குதல் இருந்தால் கார்பன்டாசீம் அல்லது டிரைசைக்லசோல் ஒரு கிராம், ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">கதிர் உருவாகும் ஆரம்ப நிலை முதல் கதிர் உருவாக்கம் வரை 2.5 சதவீத இலைப் பரப்பு சேதம் இருப்பின் கார்பன்டாசீம் அல்லது டிரைசைக்லசோல் ஒரு கிராம், ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">பூக்கும் பருவமும் அதற்குப் பின் வரும் பருவங்களும் 5 சதவீத இலைப்பரப்பு சேதம் அல்லது கழுத்துப் பகுதி தாக்குதல் இருப்பின் கார்பன்டாசீம் அல்லது டிரைசைக்லசோல் 1 கிராம், ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify;">இந்த முறைகளைக் கையாண்டால் விவசாயிகள் குலை நோயில் இருந்து தங்களது பயிர்களை பாதுகாக்கலாம்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: திரூர் வேளாண் அறிவியல் நிலையம்</p> </div>