நிலக்கடலை சாகுபடிக்கான குறிப்புகள் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள், விதை நிலக் கடலையைக் கட்டாயம் பரிசோதனை செய்த பிறகே நடவுப் பணியில் ஈடுபட வேண்டும். எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை ஓர் முக்கியப் பங்கு வகிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கார்த்திகைப் பட்டத்தில் நிலக்கடலை பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யும்போது போதிய மழை, சரியான தட்பவெப்ப நிலை சாதகமாக இருப்பதால் அதிக மகசூல் பெறப்படுகிறது. நிலக்கடலை சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதியுடைய செம்மண், மணல் கலந்த வண்டல் மண் மிகவும் உகந்தது. கார்த்திகை பட்டத்துக்கு டிஎம்வி-13, விஆர்1-2, விஆர்1-3, டிஏஜி -2ஏ இவற்றில் ஏதாவது ஒரு ரகத்தைச் சாகுபடிக்கு தேர்வு செய்யலாம். நிலக்கடலை சாகுபடியில் அதிக இடுபொருள் செலவாக இருப்பது விதையே. நல்லத் தரமானச் சான்று பெற்ற விதையைத் தேர்வு செய்வது மிக அவசியம். நிலக்கடலையைப் பொருத்தவரை பயன்படுத்தப்படும் விதைகளுக்கு குறைந்தபட்சம் 70 சதவீதம் முளைப்புத் திறன் இருப்பது அவசியம். அவ்வாறு குறைந்தபட்சம் முளைப்புத் திறன் 70 சதவீதம் உள்ள விதைகளை 30 செ.மீ.க்கு 30 செ.மீ. என்ற இடைவெளியில் ஏக்கருக்கு 80 கிலோ காய்களைப் பயன்படுத்தி விதைப்பு செய்யும் போது ஏக்கருக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 333 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையைப் பராமரிப்பது எளிதாகும். எந்த ஒரு பயிருக்கும் அதன் பயிர் எண்ணிக்கை என்பது மகசூலைக் கணிக்கும் முக்கிய அம்சமாகும். அவ்வாறு தரமான விதைகளைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு செடியிலும் சராசரியாக 40 காய்களுக்கு குறையாமல் கிடைக்கும். இதனால் ஏக்கருக்கு சராசரி மகசூலைவிட 30 சதவீதம் கூடுதல் மகசூல் பெறுவது உறுதி. எனவே மகசூலை அதிகப்படுத்துவதற்கு காரணியாக விளங்குவது விதையின் தரமே ஆகும். விதையின் தரத்தை அறியாமல் விதைப்பு மேற்கொள்வதால், விதைத்தப் பின் முளைப்புத் திறன் பாதிக்கப்பட்டு பயிர்களின் இடைவெளி அதிகமாகிறது. எனவே விவசாயிகள் தங்களது கையிருப்பில் உள்ள விதை நிலக்கடலைக் காய்களில் இருந்து 500 கிராம் அளவுக்கு விதை மாதிரி எடுத்து விதைப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். விதைப் பரிசோதனை நிலையத்திற்கு ரூ. 30 பரிசோதனைக் கட்டணத்துடன் நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பி விதையின் தரத்தைத் தெரிந்து கொண்டு விதைப்புக்குத் தயாராகலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நிலக்கடலை ரிச் பூஸ்டர் ஆதாரம்: மாவட்ட விதைப் பரிசோதனை நிலையம்