<div id="MiddleColumn_internal"> <h3>கோடை மழையால் பாதித்த பருத்தியை பாதுகாக்கும் வழிமுறைகள்</h3> <ol> <li style="text-align: justify;">காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணப்பயிரான பருத்தியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்த பருத்தி பயிர் 75 நாட்களை கடந்து பூ பூத்து காய்கள் உருவாகும் தருவாயில் உள்ளன. இந்த சூழ்நிலையில் தற்போது விடாமல் பெய்து வரும் கோடை மழையால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.</li> <li style="text-align: justify;">இந்த பாதிப்பை தவிர்க்க பயிர் செய்யப்பட்ட நிலங்களில் அதிகப்படியாக உள்ள நீரை வடிகால் வசதியை ஏற்படுத்தி வடியவிட வேண்டும். நீண்ட நாட்கள் நீர் தேங்கியுள்ள நிலையில் பருத்தி வேரின் செயல்பாடு குறைந்து பருத்தி பயிருக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்படும். இதை தவிர்க்க நீரை வடித்த பிறகு வயலை உலர விட்டு அதன்பின் 19.19.19 அல்லது 20.20.20 போன்ற நீரில் உடன் கரையக்கூடிய ஏதனும் ஒரு உர கரைசலை தெளிக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">இதனுடன் நுண்ணூட்ட உரங்களை துத்தநாக சல்பேட் (0.5 சதம்) மற்றும் மக்னீசியம் சல்பேட் கலந்து தெளிக்க வேண்டும். தேவைக்கேற்ப 15 நாள் இடைவெளியில் பொட்டாசியம் நைட்ரேட் 1 சதவீத கரைசலையும் தெளிக்கலாம்.</li> <li style="text-align: justify;">அதேபோல் இந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிர்கள் மழை ஈரம் காரணமாக மண் மூலம் பரவக்கூடிய நோய்களான வாடல்நோய், வேரழுகல் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். இந்த நோய்கள் மண்வாழ் பூச்சிகளான பியுசேரியம் மற்றும் ரைசோக்டோனியா போன்றவற்றின் மூலம் ஏற்படுகிறது.</li> <li style="text-align: justify;">இந்த நோய் காரணிகள் பருத்தியின் வேர் பகுதிகளை தாக்கி அழிப்பதால் செடிகள் காய்ந்து விடுகிறது. இதை கட்டுப்படுத்த முதலில் நோய் தாக்கப்பட்ட செடிகளை பிடிங்கி அழிக்க வேண்டும். பின்னர் பாதிக்கப்பட்ட இடத்திலும் அதனை சுற்றியுள்ள செடிகளின் வேர் பகுதியை நனையுமாறு பூசன கொல்லி கரைசலை மண்ணில் ஊற்ற வேண்டும்.</li> </ol> <p style="text-align: justify;">ஆதாரம்: தினகரன்</p> </div>