<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">மானாவாரியில் காராமணி (தட்டைப் பயிறு வகையறா) சாகுபடி</h3> <p style="text-align: justify;">பயறு வகைகளில் அதிக சத்துகளைக் கொண்டது காராமணி. இதில் 23.4 சதவீதம் புரதம், 1.8 சதவீதம் கொழுப்பு, 60.3 சதவீதம் கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் இரும்புசத்து ஆகியவை உள்ளன.</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/bb5bc7bb3bbeba3bcdbaebc8-baabafbbfbb0bcdb95bb3bcd/baabafbb1bc1-bb5b95bc8b95bb3bcd/kaaramani1.jpeg" /></p> <p style="text-align: justify;">கால்நடைகளுக்கு ஏற்ற பயிராகவும் காராமணி உள்ளது. குதிரை மசாலை விடவும் மிகச் சிறந்தது. இதை தொடர்ந்து சாகுபடி செய்து பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்தலாம். இது மானாவாரிக்கு மிகவும் உகந்த பயிராகும்.</p> <p style="text-align: justify;">காராமணி ஆப்பிரிக்காவில் பயிரிடப்படுகிறது. உலக சாகுபடியில் 90 சதவீதம் ஆப்பிரிக்காவில் சாகுபடியாகிறது. மேலும் தென், வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாக பயிரிடப்படுகிறது.</p> <p style="text-align: justify;">இந்தியாவில் உத்தரபிரதேசம், பஞ்சாப், தில்லி, ஹரியாணா, தென்இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பயரிடப்படுகிறது.</p> <p style="text-align: justify;">இதை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இருந்தாலும் மார்ச்-ஏப்ரல், ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் சாகுபடிக்கு மிகவும் சிறந்த பருவமாகும். தமிழ்நாட்டில் ஆடிப் பட்டத்தில் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் பயிரிட கோ-6, பையூர்-1, பூசா-152, கோ(சி.பி.)-7 ரகங்கள் சிறந்தவை.</p> <p style="text-align: justify;">கோ-6 பயிரை 55 நாட்களில் அறுவடை செய்யலாம். அனைத்து பருவங்களிலும் ஏக்கருக்கு 670 கிலோ மகசூல் பெறலாம்.</p> <p style="text-align: justify;">பையூர்-1 பயிரை 75 நாட்களில் ஜூன்-ஜூலை, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பயிரிட்டு 900 கிலோ மகசூல் பெறலாம்.</p> <p style="text-align: justify;">பூசா-152 ரகத்தை 75 நாட்களில் அனைத்து பருவங்களிலும் பயிரிட்டு 1200 கிலோ வரை மகசூல் பெறலாம்.</p> <p style="text-align: justify;">பையூர்-1, கே.எம்.1, கோ-2, கோ-3 சாகுபடிக்கு ஹெக்டேருக்கு விதைஅளவு தனிப்பயிராக இருந்தால் 20 கிலோவும், கலப்புப்பயிராக இருந்தால் 10 கிலோவும் இருக்க வேண்டும். பயிர் எண்ணிக்கை ஹெக்டேருக்கு 3.50 லட்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ரகங்களுக்கு ஏற்றவாறு இடைவெளி 30-10 செ.மீ., 45-15 செ.மீ. இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.</p> <p style="text-align: justify;">காரமணியை பயிரிட நிலத்தை நன்கு உழுது மண்ணை பதப்படுத்த வேண்டும். நன்கு வடிகால் வசதியும் அமைக்க வேண்டும். ஆழமாக உழுவது மிகவும் நல்லது. காராமணி பயிருக்கு பரவலாக மழை பெய்யும் காலங்களில் நீர் பாய்ச்சத் தேவையில்லை.</p> <p style="text-align: justify;">இப்பயிருக்கு முதல் கைக்களை 10-15 நாட்களிலும், இரண்டாவது கைக்களை 25-30 நாட்களிலும் எடுக்க வேண்டும். இறவையாக சாகுபடி செய்யும்போது ஹெக்டேருக்கு பாசலின் 1.5 லிட்டர் என்ற களைக்கொல்லி மருந்தை 900 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 3-வது நாளில் தெளிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">காய்கள் 80 சதவீதம் விதை முற்றியவுடன் அறுவடை செய்து சில நாட்கள் சூரிய ஒளியில் காயவைத்து விதையை பிரித்து எடுக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைத்துறை</p> </div>