ஐக்கிய நாடுகள் சபை பிரதமரின் பரிந்துரையை ஏற்று 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக [International Year of Millets (IYM)] அறிவித்தது. இதன் அடிப்படையில் 2023-ஆம் ஆண்டில் இந்தியாவை சிறுதானியங்களின் சர்வதேச மையமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு கண்ணோட்டத்தை மக்கள் இயக்கமாக (Global Hub for Millets) மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய உணவு இந்தியாவில் விளைந்த முதல் தானியம் சிறுதானிம் தான் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. உலகம் முழுவதும் 130 நாடுகளில் சிறுதானியங்கள் விளைவிக்கப்பட்ட போதிலும், இதுவே ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் 50 கோடிக்கும் மேற்பட்டோரின் பாரம்பரிய உணவாக உள்ளது. இந்தியாவில் காரீஃப் பருவத்தின் முதன்மை தானியமான சிறுதானியங்கள், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன், உலகம் முழுவதும், உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டே ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில், மத்திய அரசு சிறுதானியங்களை முன்னிலைப்படுத்தியது. 2022 டிசம்பர் 6ஆம் தேதி ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023க்கான துவக்கவிழாவை இத்தாலியின் ரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்தியா சார்பில் அதிகாரிகள் குழு பங்கேற்றது. இதையடுத்து, சர்வதேச அளவில், சிறுதானியங்களை முன்னெடுத்துச் செல்வதை இந்தியாக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதனை அடைவதில், அனைத்து மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், விவசாயிகள் , ஸ்டார்ட் -அப் நிறுவனங்கள், வணிகர்கள், உணவங்கள் மற்றும் இந்திய தூதரகங்கள் ஒருகிணைந்த அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிறுதானியங்கள் குறித்த விழிபுணர்வை ஏற்படுத்த வேண்டும். சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு இதற்கான பணிகளில், ஜனவரி மாதம் 15 நாட்கள், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகம் (Ministry of Sports and Youth Affairs) சார்பில் 15 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், விளையாட்டு வீரர்கள், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களைக் கொண்டு, விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுதல், வெபினார்களை நடத்துதல் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. இதே போல், உணவு பதப்படுத்தும் துறை அமைச்சகத்தின் (Ministry of Food Processing Industries) சார்பில் ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் பீஹாரில் சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சிகள் (Millet Fair-cum-Exhibitions) நடத்தப்பட உள்ளன. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் [Food Safety and Standards Authority of India (FSSAI)] சார்பில் தமிழ்நாடு, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், சரியான உணவைப் சாப்பிடுங்கள் என்ற உணவுக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதே போல் சட்டீஸ்கர், மிஸோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், ஜனவரி மாதம், சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிறுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம், பெல்ஜியத்தில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியில் (Trade Show) வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் [Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA)] மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை [Department of Agriculture and Farmers' Welfare (DA&FW)] உள்ளிட்ட பல இந்திய வேளாண் அமைப்புகள் இந்திய சிறுதானியத்தை முன்னிறுத்தும் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த உள்ளன. இதே போல், 140 நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், சிறுதானிய ஆண்டு 2023 கொண்டாடும் வகையில், அந்நாடுகள் வாழ் இந்தியர்கள் பங்கேற்கும், கண்காட்சிகள், உணவுத் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றை நடத்தும். இந்த ஆண்டு முழுவதும் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக, ஜனவரி மாதத்தில் அஜெர்பெய்ஜனில் உள்ள இந்தியத் தூதரகம் (Embassy of India in Azerbaijan) சார்பில் உணவுத் திருவிழா (Millets Food Festival) உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதே போல் ஜி-20 (G-20) கூட்டங்களில் பங்கேற்கும் வெளிநாட்டினருக்கு, சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடும் அனுபவத்தை வழங்குதல், விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினருடன் கலந்துரையாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்