<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">தினை சாகுபடி</h3> <p style="text-align: justify;"><span style="text-align: justify;">சிறுதானிய வகைகளில் ஒன்றான தினை பயிரிட்டால் அதிக அளவில் லாபம் கிடைக்கும்.</span></p> <p style="text-align: justify;"><span style="text-align: justify;">பொதுவாக, தினை கடுமையான வறட்சியையும் தாங்கி வளரக் கூடியது. ஆடி, புரட்டாசிப் பட்டம் இந்தப் பயிருக்கு ஏற்றதாகும். மனிதன் 40 வயது முதல் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவருவதால், சிறுதானியங்களை உண்பது அதிகரித்து வருகிறது.</span><br /><span style="text-align: justify;">மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருளாக தினை உள்ளதால், சந்தையில் எப்போதும் விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்கும்.</span></p> <p style="text-align: justify;"><span style="text-align: justify;">"லவ் பேட்ஸ்' எனப்படும் காதல் பறவைகளுக்கும் மிகவும் பிடித்தமான தீனி தினையாகும். தற்போது கடைகளில் ஒரு கிலோ தினை ரூ. 80 முதல் ரூ. 90 வரை விற்கப்படுகிறது.</span></p> <p style="text-align: justify;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/copy2_of_17.jpg" /></p> <h3 style="text-align: justify;">தினை சாகுபடிக்கு ஏற்ற நிலம்</h3> <ul style="text-align: justify;"> <li style="text-align: justify;">செம்மண், இருமண் கலந்த மண் சிறந்தது. கோடை மழையை பயன்படுத்தி பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பையைக் கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். கோடை உழவால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு, மழைநீர் சேமிக்கப்படுவதுடன் கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படும்.</li> <li style="text-align: justify;">நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின்போது மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க் காலத்தில் பூச்சிகளின் தாக்குதல் குறையும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>விதை அளவு</strong></p> <p style="text-align: justify;">தினை விதையை வரிசையாக விதைத்தால் ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ தேவைப்படும். விதையைத் தூவினால் ஒரு ஹெக்டேருக்கு 12.5 கிலோ தேவைப்படும்.</p> <p style="text-align: justify;"><strong>இடைவெளி</strong></p> <p style="text-align: justify;">வரிசைக்கு வரிசை 25 செ.மீட்டரும், செடிக்குச் செடி 10 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>விதை விதைப்பு</strong></p> <p style="text-align: justify;">கை விதைப்பு அல்லது விதைப்பான் கருவி கொண்டு வரிசையாக விதைப்பு செய்யலாம். இப்படிச் செய்வதால் அதிக பரப்பில் மண் ஈரம் காயும் முன்பே விதைத்து முடிக்கலாம்.</p> <h3 style="text-align: justify;">விதை நேர்த்தி</h3> <p style="text-align: justify;">ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதையளவுக்கு 600 கிராம் அசோபாசை அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோ அசோபாசை 25 கிலோ மணல், 25 கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">உரமிடுதல்</h3> <ul style="text-align: justify;"> <li style="text-align: justify;">ஒரு ஹெக்டேர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பி பிறகு நிலத்தை உழ வேண்டும். பின்னர் 20 கிலோ தழைச் சத்து, 20 கிலோ மணிச் சத்து ஆகியவற்றை விதைப்பின்போது அடியுரமாக இட வேண்டும்.</li> <li style="text-align: justify;">மேலுரமான 20 கிலோ தழைச்சத்தை விதைத்த 20-25 நாள்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தை பயன்படுத்தி இட வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>களை நிர்வாகம்</strong></p> <p style="text-align: justify;">விதைத்த 18 முதல் 20-ஆம் நாளில் களை எடுத்தல் அவசியம். பின்னர் 40-ஆம் நாளில் தேவைப்பட்டால் இன்னொரு முறையும் களை எடுக்கலாம்.</p> <p style="text-align: justify;"><strong>பயிர் களைதல்</strong></p> <p style="text-align: justify;">விதைத்த 18 முதல் 20 -ஆம் நாளில் செடிகளைக் களைத்து தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">பயிர் பாதுகாப்பு</h3> <p style="text-align: justify;">இந்தப் பயிரை பொதுவாக பூச்சிகள். நோய்கள் தாக்குவதில்லை. ஆதலால், பயிர் பாதுகாப்பு அவசியமில்லை. உயர் விளைச்சலைத் தரக்கூடிய ரகத்தை பயன்படுத்தும்போது நல்ல விளைச்சலைப் பெறலாம்.</p> <h3 style="text-align: justify;">அறுவடையும் விளைச்சலும்</h3> <ul style="text-align: justify;"> <li style="text-align: justify;">கதிர்கள் நன்கு காய்ந்து இலைகள் பழுத்தவுடன் அறுவடை செய்து களத்தில் காயவைத்து அடித்து தானியங்களை பிரித்து சுத்தம் செய்ய வேண்டும்.</li> <li style="text-align: justify;">தோராயமாக ஒரு ஹெக்டேருக்கு 1,850 கிலோ தானிய விளைச்சலையும், 5,500 கிலோ தட்டை விளைச்சலையும் பெறலாம். இவ்வாறு கிடைக்கும் தானியத்தை சாக்குப் பையில் போட்டு போத்து நீண்ட காலம் பாதுகாக்க முடியும்.</li> </ul> <h3 style="text-align: justify;">மதிப்பூட்டப்பட்ட பொருள்கள்</h3> <ul style="text-align: justify;"> <li style="text-align: justify;">தினையில் இருந்து அவல், உப்புமா, தோசை, புட்டு, முறுக்கு, பக்கோடா உள்ளிட்ட சுவையான உணவையும் தயாரிக்க முடியும்.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: தேசிய வேளாண் ஆராய்ச்சி மையம்</p> </div>