கோ.ஆர் – 50 சம்பா பருவத்தில் கோ – 43 நெல் இரகத்திற்கு மாற்றாக அதிக விளைச்சல் தரும் புதிய நெல் இரகமான கோ.ஆர் – 50 என்ற நெல் இரகத்தை விவசாயிகள் அனைவரும் இருப்பருவத்தில் சாகுபடி செய்து பயனுடைய வேண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைத்து தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் நெல் இயக்கத்தின் கீழ் ஒரு கிலோ விதைக்கு ரூ.10 வீதம் மானியத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மத்திய கால (130 – 135 நாட்கள்) வயதுடைய கோ.ஆர் – 50 நெல் இரகம், கோ – 43 இரகத்தையும் ஏடிடீ – 38 நெல் இரகத்தையும் ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது. சிறந்த தாவர பண்புகளை உடைய கோ.ஆர் – 50 நெல் இரகம் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 2530 கிலோ மகசூல் தரவல்லது. இந்த விளைச்சல் ஏடிடீ.ஆர் – 46 இரகத்தை விட 10 சதம் அதிகமாகும். அதிக விளைச்சல் பெறுவதற்கு உகந்த சிறந்த தாவர பண்புகளான சாயாத தன்மை, நடுத்தர உயரம் (100 – 120 செ.மீ) அதிக ஒளிச்சேர்க்கை நடைபெறுவதற்கு தேவையான கரும்பச்சை நிற இலைகள், நன்கு நீண்ட (55 செ.மீ) மற்றும் அகலமான (2 செ.மீ) இலையை பெற்றிருப்பதுடன் நீளமான செங்குத்தான பூட்டையுடைய இலை உடையது. நீண்ட நெற்கதிரும், ஒரு கதிருக்கு 350 முதல் 400 நெல் மணிகளையும் கொண்டது. கோ.ஆர் – 50 இரகம், பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு தன்மை உடையது. குறிப்பாக குருத்து பூச்சி, இலை சுருட்டுப்புழு ஆகிய பூச்சிகளுக்கும், குலை நோய், இலையுறை அழுகல், பாக்டீரியல் இலை கருகல், துங்ரோ ஆகிய நோய்களுக்கும் மிதமான எதிர்ப்புத் திறன் உடையது. மத்திய சன்ன அரிசியை உடைய இந்த இரகம் நல்ல அரவைத்திறனும் (71.6 சதம்) முழு அரிசி (60 சதம்) காணும் திறனும் உடையது. ஒட்டாத சாத தன்மை கொண்டு இருப்பதால் சமைப்பதற்கும், இட்லி தயாரிக்கவும் உகந்த இரகமாகும். எனவே தன்மை மற்றும் நல்ல சமையல் பண்புகளைக் கொண்டுள்ள கோ.ஆர் – 50 நெல் இரகத்தை நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் பயிரிட்டு அதிக விளைச்சல் பெறவும். சம்பா நெல் சாகுபடிக்கான அரசு மானியங்கள் விதை நெல் விநியோகம் கிலோவிற்கு ரூ.10/- மானியம் விதை நெல் உற்பத்திக்கு கிலோவிற்கு ரூ.5/- மானியம் (வெளியிடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட இரகங்களுக்கு மட்டும்) இயந்திர நெல் நடவு: எக்டேருக்கு ரூ.3000/- மானியம் நடவு இயந்திரம் வாங்குவதற்கு 4 வரிசை நடவு இயந்திரத்திற்கு அ) சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு ரூ.94,000/- மானியம். ஆ) இதர வகுப்பினருக்கு ரூ. 75000/- மானியம். 6 முதல் 16 வரிசை நடும் நடவு இயந்திரத்திற்கு அனைத்து பிரிவினருக்கு ரூ.2 இலட்சம் மானியம். ஆதாரம்: வேளாண்மைத்துறை, திருச்சி