<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;"><span style="text-align: justify;">பூங்கார்</span></h3> <p style="text-align: justify;">நெற்பயிர் தண்ணீரிலேயே இருந்தாலும், நாற்பது நாட்களுக்கு விதை உறக்கத்தில் இருந்து, அதற்குப் பிறகே முளைக்கக்கூடிய திறன்கொண்ட மாறுபட்ட ரகம் பூங்கார்.</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/bb5bc7bb3bbeba3bcd-bb5bbfbb5bb0baabcdbaabc1ba4bcdba4b95baebcd/baabafba9bc1bb3bcdbb3-ba4b95bb5bb2bcdb95bb3bcd/unnamed.jpg" width="519" height="352" /></p> <p style="text-align: justify;">பாரம்பரிய நெல் ரகங்களில் குறுகிய காலப் பயிர். எல்லாப் பருவங்களுக்கும் ஏற்ற பயிர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மண் வகைகளுக்கும் ஏற்ற ரகம். ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்ய ஏற்ற ரகம் பூங்கார்.</p> <h3>மண்ணுக்கேற்ற விதை</h3> <p style="text-align: justify;">இதன் வயது எழுபது நாட்கள் என்றாலும், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிர் செய்யும்போது எழுபதிலிருந்து தொண்ணூறு நாட்களில் அறுவடைக்குத் தயாராகிறது. சிவந்த, நடுத்தரமான நெல் ரகம். அரிசியும் சிவப்புதான். நடவு செய்யவும் நேரடி விதைப்புக்கும் ஏற்ற ரகம்.</p> <h3>தாங்கும் திறன்</h3> <p style="text-align: justify;">பாரம்பரிய நெல் ரகங்களில் மழை, வெள்ளத்தைத் தாங்கி வளரக் கூடியது, விதைப்பு செய்து நாற்றங்கால் அல்லது வயலில் பத்து நாட்களுக்கு மேலாகத் தண்ணீர் வடிய வழியில்லாமல் இருந்தாலும் முளைக்கும் திறனும், முளைத்த விதையும் பாதிக்கப்படாது. கதிர் முற்றி அறுவடை நேரத்தில் தொடர் மழையாலும் மழை நீர் சூழ்ந்திருக்கும் காலத்தில் நெல் கதிர் தண்ணீருக்குள் இருந்தாலும், அது முளைக்காது. குறைந்தபட்சம் 40 நாள் விதை உறக்கத்துக்குப் பிறகே முளைக்கும் தன்மை கொண்டது.</p> <h3>மருத்துவக் குணம்</h3> <p style="text-align: justify;">மருத்துவக் குணம் கொண்ட இந்த ரக அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிட்டுவந்தால், ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைப்பதுடன் மருத்துவச் செலவு குறையும். தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனால் `டப்பா பால்பவுடர்’களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. தாய், சேயின் ஆரோக்கியம் நீடிக்கும்</p> <p style="text-align: justify;">ஆதாரம்: நெல் ஆராய்ச்சி மையம், திருவள்ளுவர் மாவட்டம்</p> </div>