<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்படும் நெற்பயிர்களைக் காக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.</p> <h3 style="text-align: justify;"><strong>தண்ணீரை</strong><strong> </strong><strong>வடிகட்டுதல்</strong><strong> </strong><strong>மற்றும்</strong><strong> </strong><strong>பயிர்</strong><strong> </strong><strong>பராமரிப்பு</strong><strong> </strong></h3> <ul style="text-align: justify;"> <li>தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி பயிர் மூழ்காத வகையில் நீரை வெளியேற்ற வேண்டும். அதனால், வேர்ப் பகுதிகளில் காற்றோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.</li> <li>இளம் நெற்பயிர்கள் கரைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவ்வாறன சமயங்களில் அதே ரகம் மற்றும் அதே வயதுடைய நாற்றுகளை கரைந்துபோன இடங்களில் மீண்டும் நடவு செய்ய வேண்டும்.</li> <li>சற்று வயதான நெற்பயிராக இருந்தால் வயலில் அதிக தூர்கள் இருக்கும் குத்திலிருந்து சில தூர்களை பிடிங்கி கரைந்துபோன இடங்களில் நட்டு பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;"><strong>நெற்பயிர்</strong><strong> </strong><strong>தண்ணீரில்</strong><strong> </strong><strong>மூழ்குவதால்</strong><strong> </strong><strong>உண்டாகும்</strong><strong> </strong><strong>பாதிப்புகள்</strong><strong> </strong></h3> <ul style="text-align: justify;"> <li>தண்ணீர் தேங்கிய நிலையில் பிராணவாயு கிடைக்காமல் வேர்களின் சுவாச இயக்கம் பாதிக்கப்படும். பிராணவாயு பயிருக்கு சரிவர கிடைக்காமல் போவதால் அதை சார்ந்த நுண்ணுயிர்களின் செயல் குறைந்துவிடும் அல்லது நின்றுவிடும்.</li> <li>மண் அதிகம் குளிர்ந்து விடுவதால் இயற்கையாக மண்ணில் காணப்படும் வெப்பம் குறைந்து மண் மீண்டும் வெப்பம் அடைய அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளும்.</li> <li>இந்த குளிர்ந்த நிலையில் மணிச்சத்து, சாம்பல்சத்து, துத்தநாகம் மற்றும் தாமிரச்சத்துக்களை பயிர் எடுத்துக்கொள்ளும் அளவு குறைவதால் அவைகளின் பற்றாக்குறை உண்டாகும்.</li> <li>இதனால் பயிரின் வளர்ச்சி தடைபடுகிறது.</li> <li>மழைநீர் வடியும்போது நீருடன் மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, போரான், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு சத்துக்களின் கரைதிறன் அதிகமாகி தண்ணீரோடு கரைந்து வெளியேறிவிடும்.</li> <li>குளிர்ச்சியான வெப்பநிலையில் அங்ககப் பொருள்கள் பதனமாற்றமாகி சத்துக்களாக உருமாற்றம் ஆவது பாதிக்கப்படுவதால் பயிருக்கு கந்தகச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு பயிரின் தோகைகள் மஞ்சள் நிறமாக மாறும்.</li> <li>மண்ணில் இரும்புச்சத்து அதிகமாகி மாங்கனீசு சத்துக் குறைந்து இலைகளின் விகிதாச்சாரம் பாதிக்கப்பட்டு இரும்பின் அளவு அதிகமாவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். மாங்கனீசு சத்தின் பற்றாக்குறையினால் இலைப்புள்ளி நோய்கள் உண்டாகும்.</li> </ul> <h3 style="text-align: justify;"><strong>நிவர்த்தி</strong><strong> </strong><strong>முறைகள்</strong><strong> </strong></h3> <ul style="text-align: justify;"> <li>வெள்ளநீர் வடிந்தவுடன் தழைச்சத்து உரத்தை அம்மோனியா வடிவில் இடவேண்டும். அதற்கு யூரியாவை நேரடியாக பயிருக்கு அளிக்க வேண்டும்.</li> <li>ஒரு ஏக்ருக்கு 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து 1 நாள் இரவு வைத்திருந்து மறுநாள் இத்துடன் 17 கிலோ மூரியேட் ஆப்பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும்.</li> <li>மணிச்சத்தை டிஏபி உரத்தின் மூலமாக 2 சத அளவில் தெளிக்கவேண்டும். நுண்ணூட்ட உரக்கலவையினையும் மேலுரமாக தெளிக்கவேண்டும்.</li> <li>இலை வழி உரமாக அளிக்க வேண்டுமெனில், 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ சிங் சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். அல்லது 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை வடித்து தெளிந்த நீருடன் 2 கிலோ பொட்டாஷ் உரத்தையும் சேர்த்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவேண்டும்.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை</p> </div>