<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">வேலி மசால்</h3> <p style="text-align: justify;">கால்நடைகளுக்குத் தீவனமாக புல்வகை தீவனப் பயிர்களைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பயறு வகை தீவனப் பயிர்களையும் கொடுத்தால்தான் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். ஆடு மாடுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு தானிய புல்வகை தீவனப்பயிர்கள் மற்றும் ஒரு பங்கு பயறு வகை தீவனப் பயிர்களும் வழங்கப்படவேண்டும். அதிக புரதச்சத்து கொண்ட வேலி மசாலை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை போக்க முடியும்.</p> <p style="text-align: center;"><img class="image-inline" title="" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/bb5bc7bb3bbeba3bcdbaebc8-baabafbbfbb0bcdb95bb3bcd/ba4bc0bb5ba9baabcdbaabafbbfbb0bcdb95bb3bcd/desmanthus.jpg" alt=""></p> <h3 style="text-align: justify;">வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள்</h3> <ul> <li>பல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம்</li> <li>அதிக அளவு புரதச்சத்து (20 -22 சதம்) கொண்டது.</li> <li>ஒரு செடிக்கு 15 முதல் 20 வரையிலான கிளைகள் விடும் தன்மை உடையது.</li> <li>ஒரு செடியில் அதிக காய்கள் (75 – 100) தரக்கூடியது.</li> <li>வருடத்திற்கு ஏக்கருக்கு 50 டன்கள் வரை பசுந் தீவன மகசூல் கிடைக்கும்</li> <li>வருடத்திற்கு ஏழு அறுவடைகள் தரக்கூடியது</li> <li>வருடத்திற்கு ஏக்கருக்கு 200 – 250 கிலோ விதை மகசூல் கிடைக்கும்</li> <li>பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.</li> </ul> <h3 style="text-align: justify;">பருவம்</h3> <p style="text-align: justify;">இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரி பயிருக்கு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் பயிரிடலாம்.</p> <h3 style="text-align: justify;">நிலம் தயாரித்தல்</h3> <p style="text-align: justify;">இரும்பு கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பின்பு 50 செ.மீ இடைவெளியில் பார் பிடித்து பார்களுக்கிடையில் வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">உர நிர்வாகம்</h3> <p style="text-align: justify;">ஒரு ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் உரத்தினை கடைசி உழவிற்கு முன்பு விட்டு நன்கு உழவு செய்ய வேண்டும். மண் பரிசோதனை செய்து உரமிடலாம் அல்லது ஏக்கருக்கு 10 கிலோ தழைச்சத்து (22 கிலோ யூரியா), 16 கிலோ மணிச்சத்து (100 கிலோ சூப்பர் பாஸ்பேட்) மற்றும் 8 கிலோ சாம்பல்சத்து (14 கிலோ பொட்டாசு) உரங்களை அடியுரமாக இட வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>பயிர் இடைவெளி</strong></p> <p style="text-align: justify;">வரிசைக்கு வரிசை 50 செ.மீ, செடிக்கு செடி 20 செ.மீ</p> <p style="text-align: justify;"><strong>விதையளவு</strong></p> <p style="text-align: justify;">ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள்</p> <h3 style="text-align: justify;">விதை நேர்த்தி</h3> <p style="text-align: justify;">ஒரு கிலோ விஹைக்கு 200 மி.லி என்ற அளவில் அடர் கந்தக அமிலத்துடன் கலந்து 15 நிமிடங்கள் வரை கலக்கும்போது உராய்வு ஏற்பட்டு விதையின் கடினத் தன்மை நீங்கி அதிக முளைப்புத்திறன் கிடைக்கும். விதைகளை 80<sup>0</sup> சென்டிகிரேடு வெப்பநிலையுடைய வெந்நீரில் 5 நிமிடங்கள் இட்டு பின்னர் குளிர்ந்த நீரில் 10 மணி நேரம் ஊறவத்து பின்பு உலர வைத்து விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் விதைகளுடன் 1 பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் உரத்தினை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதைநேர்த்தி செய்து 30 நிமிடங்கள் நிழலில் உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">களை நிர்வாகம்</h3> <p style="text-align: justify;">விதைத்த 30 நாட்களுக்குள் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும். பின்பு களைகள் அதிகமாக தென்பட்டால் மீண்டும் ஒரு முறை கைக்களை எடுக்கலாம்.</p> <h3 style="text-align: justify;">நீர் நிர்வாகம்</h3> <p style="text-align: justify;">விதைத்தவுடன் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு 3வது நாளில் ஒரு முறை உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பிறகு 7 -10 நாட்களுக்கு ஒரு முறை என்ற இடைவெளியில் மண் மற்றும் காலநிலையைப் பொறுத்து நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.</p> <h3 style="text-align: justify;">இலைவழி தெளிப்பு உரமிடுதல்</h3> <p style="text-align: justify;">விதை உற்பத்திக்காக வேலி மசாலைப் பயிரிட்டால் 50 சதவீத பூக்கும் தருணத்தில் 200 பி.பி.எம் சாலிசிலிக் அமிலத்தை 10 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து மூன்று முறை தெளிக்க வேண்டும். இதனால் தரமான நல்ல விதைகள் கிடைக்கும்.</p> <h3 style="text-align: justify;">பயிர் பாதுகாப்பு</h3> <p style="text-align: justify;">பொதுவாக வேலி மசால் பயிரினை பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. எனவே பயிர் பாதுகாப்பு தேவைப்படாது.</p> <h3 style="text-align: justify;">அறுவடை</h3> <p style="text-align: justify;">விதைத்த 90 நாட்கள் கழித்து, தரைமட்ட்த்திலிருந்து 50 செ.மீ உயரத்தில் வெட்டி அறுவடை செய்யலாம். பிறகு 40 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து அறுவடைகள் செய்யலாம். கலப்புப் பயிராக இருந்தால் விதைத்த 60 நாட்கள் கழித்து தரையிலிருந்து 50 செ.மீ உயரம் வரை வெட்டி முதல் அறுவடையும் பிறகு 45 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்த அறுவடைகளும் செய்யலாம். விதை உற்பத்திக்கு பூ மலர்ந்த 35 நாட்கள் கழித்து காய்கள் பழுப்பு நிறமான பின் விதைகள் மிளிர் பழுப்பு நிறமான பிறகு அறுவடை செய்ய வேண்டும். சரியான நேரத்தில் காய்கள் பறிக்காவிட்டால் காய்கள் வெடித்து சிதறி மகசூல் பாதிக்கப்படும்.</p> <p style="text-align: justify;"><strong>மகசூல்</strong></p> <p style="text-align: justify;">ஏக்கருக்கு ஒரு வருடத்திற்கு 50 டன் வரை பசுந்தீவன மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு 200 முதல் 250 கிலோ வரை விதை மகசூல் கிடைக்கும்.</p> <p style="text-align: justify;"><strong>விதை சுத்திகரிப்பு</strong></p> <p style="text-align: justify;">விதைகளை 14 * 14 சதுர கன அளவு கொண்ட பி.எஸ்.எஸ். சல்லடை கொண்டு சலித்து நல்ல தரமான விதைகளை பிரித்து எடுக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">விதை சேமிப்பு</h3> <p style="text-align: justify;">விதைகளின் ஈரப்பதத்தினை 8 – 10 சதம் மற்றும் 8 சதத்திற்கும் குறைவாக உலர்த்தி முறையே 8 – 9 மாதங்கள் வரை துணிப்பைகளிலும், 12 – 15 மாதங்கள் வரை உள்ளுறை கொண்ட சாக்கு பைகளிலும் மற்றும் 15 மாதங்கள் வரை 700 காஜ் அடர் பாலித்தின் பைகளிலும் சேமித்து வைக்கலாம்.</p> <iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/JyqUNDcKCEo" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe> <p style="text-align: justify;">வேலி மசால்</p> <p style="text-align: justify;">ஆதாரம்: கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி</p> </div>