<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">சொட்டு நீர் பாசனம்</h3> <p style="text-align: justify;">இன்றைய நாளில் நீரின் தேவை மிக மிக அதிகமாக ஒவ்வொரு துறைகளுக்கும் தேவைப்படுகின்றது. நீரின் ஆதாரம் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக வேளாண்மைத் துறைக்கு மிகுந்த அளவு நீர் உபயோகப்படுத்தப்படுகிறது. நீர் ஆதாயத்தை பாதுகாக்கவும், வளப்படுத்தவும் நீர் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மரபு வழியிலான முறையில் நீர்பாசனம் மிகுந்த அளவில் வீணாக்கப்பட்டது.</p> <p style="text-align: justify;">இதை மாற்றியமைக்க நவீன நீர்பாசன முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அவை சொட்டுநீர்ப்பாசனம், தெளிப்பு நீர் பாசனம் முதலியனவாகும். இந்த முறையில் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் ஆதாயங்கள் சிறந்த முறையில் வீணாக்கப்படாமல் பராமரிக்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;">இந்த சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தினால், பாசன செலவு குறைவு, 50 முதல் 65 சதவீதம் தண்ணீர் சிக்கனம், 50 முதல் 60 சதவீதம் வரை உரம் சிக்கனம், களைக் கட்டுப்பாடு செலவு 40 சதவீதம் குறைவு. மண்ணில் காற்றோட்டம், அதனால் சீரான வேர்களின் வளர்ச்சி, ஒரே சீரான பயிர் வளர்ச்சி, பயிர்களுக்கு இடையே குறைவான ஈரப்பதம் காரணமாக பூச்சி, நோய் கட்டுப்பாடு, தரமான விளைபொருள்கள், ஆண்டு பயிர்களில் 15 முதல் 52 சதவீதம் வரை கூடுதல் மகசூல், தரம் குறைந்த நீரையும் பாசனத்துக்காக பயன்படுத்தலாம் என்பன உள்ளிட்ட பயன்கள் இதில் உள்ளன.</p> <p style="text-align: justify;">காய்கறி பயிர்களான கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பூசணி வகைகள், வெங்காயம் போன்ற பயிற்களுக்கு பாரம்பரய முறைப்படி தேவைப்படும் 3 முதல் 8 லிட்டர் நீருக்கு பதிலாக 1 முதல் 2 லிட்டர் நீர் வரை நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு செடிக்கும் அளித்து நீர்பாசனம் செய்வதால் 39 முதல் 62 சதவீதம் நீர்சேமிப்பும், 14 முதல் 50 சதவீதத்துக்கு கூடுதலான மகசூலும் கிடைக்கிறது.</p> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <ul style="text-align: justify;"> <li style="text-align: justify;">சொட்டுநீர்ப்பாசனம் ஆப்கானிஸ்தானில் ஆராய்ச்சியாக மேற்க்கொள்ளப்பட்டு இஸ்ரேல் தேசத்தில் தொடங்கப்பட்டது.</li> <li style="text-align: justify;">தண்ணீரின் அளவு குறைவாக உள்ள இடங்களுக்கு சொட்டு நீர்ப் பாசனம் ஏற்ற முறையாகும்.</li> <li style="text-align: justify;">இதில் தண்ணீரானது மெதுவாகவும் குறைந்த அழுத்தத்திலும் செடியின் வேர்ப் பகுதியில் நேரடியாக அளிக்கப்படும்.</li> <li style="text-align: justify;">இவ்வாறு தண்ணீர் செடிகளுக்கு, பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் செலுத்தப்படுகிறது.</li> <li style="text-align: justify;">இந்த முறையில் பயிருக்கு செலுத்தப்படும் தண்ணீருடன் சேர்த்து செடியின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் உரங்களையும் அளிக்கும் முறை ஃபெர்ட்டிகேஷன் (Fertigation) என்று சொல்லப்படும்.</li> </ul> <h3 style="text-align: justify;">நன்மைகள்</h3> <ul style="text-align: justify;"> <li style="text-align: justify;">குறைந்த நீரைக் கொண்டு அதிகப் பரப்பில் பயிர் செய்யலாம்.</li> <li style="text-align: justify;">75% நீரை இப்பாசனத்தின் மூலம் சேமிக்கலாம்.</li> <li style="text-align: justify;">சாகுபடி செலவு குறைந்து அதிக வருமானம் கிடைக்கும்.</li> <li style="text-align: justify;">பயிர் திடமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும்</li> <li style="text-align: justify;">தண்ணீரில் கரையும் உரங்களை நேரடியாகப் பயிருக்கு வேர்ப் பகுதியிலேயே வழங்கலாம்.</li> <li style="text-align: justify;">களை எடுக்க வேண்டியதில்லை.</li> <li style="text-align: justify;">ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும்.</li> <li style="text-align: justify;">தரமான விளை பொருள்களுடன் அதிக விளைச்சல் கிடைக்கும்.</li> <li>உரங்கள் வீணாக்கப்படுவது குறைவு</li> <li>தண்ணீர் வீணாக்கப்படுவது குறைவு</li> <li>நிலங்களை சமன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.</li> <li>எப்படிப்பட்ட வடிவத்தில் உள்ள நிலங்களிலும் பாசனம் செய்யலாம்.</li> <li>வேர்ப்பகுதியில் ஈரப்பதம் நிலை நிறுத்தப்படுகிறது. •மிகக் குறைந்த மணல் அரிப்பு.</li> <li>எல்லா இடங்களிலும் ஒரே அளவிளான தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.</li> <li>குறைந்த பணியாளர் ஊதியம் அளித்தால் போதும்.</li> <li>மிகக் குறைந்த மின்சார அளவே போதுமானது.</li> <li>சருகுகள் காய்ந்த நிலையிலேயே இருப்பதால் நோய் ஏற்ப்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.</li> <li>தண்ணீர் குறைந்த அளவில் செலுத்தப்படுவதால் ஆவியாதல், வழிந்தோடுதல் போன்ற பிரச்சனைகள் இல்லை.</li> </ul> <h3 style="text-align: justify;">சொட்டு நீர் பாசனத்தின் பாதகங்கள்</h3> <ul> <li style="text-align: justify;">ஆரம்பச்செலவு மிகவும் அதிகம்.</li> <li style="text-align: justify;">தண்ணீர் சரியாக வடிக்கப்படாத நிலையில் நீர் அடைப்பு ஏற்படுவது அதிகம்</li> <li style="text-align: justify;">குழாய்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.</li> <li style="text-align: justify;">ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் குழாய்கள் சரியாக பாதுகாக்கப்பட வேண்டும்.</li> <li style="text-align: justify;">குழாய்கள் சரியாகப் பராமரிக்கப்படாவிட்டால் தண்ணீர், நேரம் ஆகியவை வீணாகலாம்.</li> <li style="text-align: justify;">உப்பு அளவு அதிகமாக இருக்கும் பொழுது தண்ணீர் அடைப்பு அதிகமாக காணப்படும்.</li> <li style="text-align: justify;">அணில், எலி போன்ற ஜந்துக்கள் நுண்நீர்க்குழாய்களை கடித்து சேதப்படுத்துவதால் மிகுந்த விரயம்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>பிரச்சனைகளுக்கான தீர்வுகள்</strong></p> <ul> <li style="text-align: justify;">சல்பேட், பாஸ்பேட், போன்ற உரங்களின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது குழாய்களில் உப்பு தேங்கி அடைப்பை ஏற்படுத்தும். இப்பிரச்சனைக்கு தீர்வாக, மாதம் ஒரு முறை குழாய்களில் "குளோரின்" செலுத்தப்படுவதனால் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கலாம்.</li> <li style="text-align: justify;">மழைக்காலங்களில் பாசி அதிகமாகப் படியும் என்பதால், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை "குளோரின்" செலுத்தப்பட வேண்டும்.</li> <li style="text-align: justify;">மேலும் கால்சியம் கார்பனேட் அடைப்பு ஏற்படும்போது, அதனை நீக்க ஹைட்ரோகுளோரிக் அமிலம் பைப்புகளில் செலுத்தப்பட வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: மலரும் வேளாண்மை</p> </div>