<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் உள்ள நுண்ணுயிரிகள் நூற்புழுக்கள்தான். நூற்புழுக்கள் இல்லாத இடமே உலகில் இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. வேளாண்மையில் நூற்புழுக்கள் மிகவும் பங்கு வகிக்கின்றன. நூற்புழுக்களால் தாக்கப்படாத பயிர்களே இல்லை எனலாம். இந்நூற்புழுக்களின் தாக்குதலால் பயிர்களின் வளர்ச்சி குன்றி, வெளிர்நிறமடைந்து இலைகள் மற்றும் காய்கள் சிறுத்து விளைச்சல் வெகுவாகக் குறைகிறது. உருளைக்கிழங்கு, காரட் போன்ற பயிர்களில் கிழங்குகளின் தோற்றம் சிதைந்நு அவற்றின் சந்தை மதிப்பைக் குறைக்கின்றன. பொதுவாக நூற்புழுக்களால் தாக்கப்பட்ட பயிர்கள் சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது போல் தோன்றும்.</p> <p style="text-align: justify;">நம் மாநிலத்தில், இதுவரை 90க்கும் மேற்பட்ட நூற்புழுக்கள் பயிர்களைத் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. பயிர் நூற்புழுக்களைக் கட்டுபடுத்த பல ஆண்டுகளாக அங்கக நூற்புழுக்கொல்லிகள் பரிந்துரை செய்யப்பட்டு வந்தன. இவை பயிரில் தங்கி இதன் நஞ்சு மனிதர்களுக்குத் தீங்கு விளைவிப்பதுடன் மண்ணின் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கிச் சுற்றுபுறச் சூழலுக்குப் பெருத்த கேடு விளைவிக்கின்றன. அண்மைக் காலத்தில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிலும் உயிரியல் முறைகள் மற்றும் தாவர புச்சிக் கொல்லிகள் போன்றவற்றின் மூலம் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு இம்முறைகள் மூலம் நூற்புழுக்களை வெகுவாகக் கட்டுப்படுத்த முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p> <h3>உயிரியல் முறைகள்</h3> <p style="text-align: justify;"><strong>நெல்</strong></p> <p style="text-align: justify;">விதைகளை கிலோ ஒன்றுக்கு 10 கிராம் பயிர் வளர்ச்சி ஊக்கி பாக்டீரியாவான சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் உடன் விதை நேர்த்தி செய்து நாற்றங்காலில் விதைத்தல், நடவு வயலில் இந்த பாக்டீரியாவை எக்டர் ஒன்றுக்கு ஒரு கிலோ என்ற அளவில் தேவையான நீருடன் கலந்து நாற்றுநட்ட 45, 55, மற்றும் 65 – ஆம் நாட்களில் தெளித்தல்.</p> <p style="text-align: justify;"><strong>பயறு வகைகள்</strong></p> <p style="text-align: justify;">சூடோமோனஸ் ப்ளுரசன்ஸ் (பாக்டீரியா) அல்லது டிரைக்கோ டெர்மா விரிடி (பூசணம்) யை விதைகளை விதைக்கும் முன்பு ஒரு எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் மண்ணில் இடுதல்.</p> <p style="text-align: justify;"><strong>காய்கறிகள்</strong></p> <p style="text-align: justify;">விதைப்புக்கு முன்பு நாற்றங்காலில் வேர் உட்பூசணம் ( 2 கிலோ ஒரு சதுர மீட்டருக்கு) (அ)சூடோமோனஸ் ப்ளுரசன்ஸ் பாக்டீரியா (10 கிராம் ஒரு சதுர மீட்டருக்கு) இடுதல்.</p> <p style="text-align: justify;"><strong>திராட்சை</strong></p> <p style="text-align: justify;">சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் பாக்டீரியாவைக் கவாத்து செய்த பின்பு கொடி ஒன்றுக்கு 4 கிராம் வீதம் இடுதல்.</p> <p style="text-align: justify;"><strong>எலுமிச்சை</strong></p> <p style="text-align: justify;">மரம் ஒன்றுக்கு சூடோமோனஸ் பாக்டீரியாவை 20 கிராம் வீதம் மரத்தைச் சுற்றி 15 செ.மீ ஆழத்தில் மரத்திலிருந்து 50 செ. மீ. இடைவெளியில் மணலுடன் கலந்து நான்கு மாதத்திற்கு ஒரு முறை இடுதல்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: <a class="ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி இணையதளம்" href="https://agritech.tnau.ac.in/ta/" target="_blank" rel="noopener">தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்</a></p> </div>