இச்சட்டப்படி பெறக்கூடிய நிவாரணங்கள் என்ன? நுகர்வோர் நீதிமன்றங்கள் கீழ்கண்ட நிவாரணங்களை வழங்கி உத்தரவிடலாம். (1) விற்கப்பட்ட பொருளில் உள்ள குறைகளை அகற்றுதல் (2) மாற்றுப் பொருள் தருதல் (3) பொருளின் விலையை வட்டியுடன் திருப்பித் தருதல் (4) ஏற்பட்ட கஷ்டத்துக்கும் நஷ்ட்டத்துக்கும் ஈடு செய்தல் (5) சேவையில் காணப்பட்ட குறைபாடுகளை அகற்றுதல் (6) முறைகெட்ட/தடை செய்யும் வர்த்தக செயல்களைத் தடுத்தல் மற்றும் மேலும் தொடராதிருக்க உத்தரவிட (7) ஆபத்தான பொருட்களின் விற்பனையை நிறுத்துதல் (8) போதுமான செலவுத் தொகை வழங்கி உத்தரவிடல். மேல் முறையீடு செய்வதற்கான கால வரையறைகள் (1) மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தீர்ப்பை பெற்றதிலிருந்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும். (2) மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராக தீர்ப்பை பெற்ற 30 நாட்களுக்குள் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும். (3) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பை பெற்ற 30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். புகாரை பதிவு செய்யும் முறை முதல் கட்டம்:- எதிர் தரப்புக்கு நோட்டிஸ் அனுப்பவேண்டும். 2ஆம் கட்டம்:- புகாரை அதற்குண்டான படிவத்தின் படி தயார் செய்து நுகர்வோர் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும். 3-ஆம் கட்டம்:- பிரமாண வாக்கு மூலம் அதற்குண்டான படிவத்தின் படி தயார் செய்து அனுப்பிய நோட்டிஸ், பில், ரசீது நகல்களோடு நுகர்வோர் நீதிமன்றத்துக்கு சமர்பிக்க வேண்டும். 4-ஆம் கட்டம்:- தீர்ப்பு வழங்கப்பட்ட பின் எதிர்தரப்பு தீர்ப்பை நடைமுறைப்படுத்த தவறினால், அதற்குண்டான விண்ணப்பத்தை தயார் செய்து நுகர்வோர் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். 5-ஆம் கட்டம்:- தீர்ப்பு உங்களுக்கு நிறைவளிக்காவிட்டால், நியாயம் மறுக்கப்பட்டதென்று கருதினால் அதற்குண்டான படிவத்தின்படி மேல்முறையீடு செய்யலாம். புகாரில் கொடுக்கப்பட வேண்டிய விவரங்கள் (1) புகார் செய்பவரின் பெயரும், முழுவிலாசமும், (2) எதிர் தரப்பினர் பெயரும், முழு விலாசமும், (3) பொருளை வாங்கிய அல்லது சேவையைப் பெற்ற தேதி, அதற்காக கொடுக்கப்பட்ட தொகை/விலை, (4) வாங்கிய பொருளின் பெயர், செயல் அல்லது பயன், அளவு போன்ற விவரங்கள், (5) முறையில்லா வர்த்தகர் செயலைப் பற்றியோ, குறையுள்ள பொருளைப் பற்றியோ, சேவையில் குறைபாடு பற்றியோ அல்லது அதிக விலை வசூலிக்கப்பட்டது குறித்தோ அல்லது வேறு எதற்காக என்ற விவரம், (6) பில்கள், ரசீதுகள், வவுச்சர்கள், கடிதங்கள் போன்றவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டுளளதா என்ற விவரம், (7) செயல்படுத்தும் விண்ணப்பங்களில் (Executive Petition Documents) எதிர் தரப்பின் பெயர்கள் கொடுக்கப்படவேண்டும். எதிர்த்தரப்புக்கு அனுப்பப்பட வேண்டிய நோட்டிஸின் மாதிரி படிவம்:- (இது நுகர்வோர் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான முதல் செயலாகும். இந்த நோட்டிஸ் எதிர்தரப்புக்கு உங்களால் பதிவுத் தபாலில் அனுப்பப்படவேண்டும்) அனுப்புனர்:- உங்கள் பெயரும், முகவரியும் தேதி…….. பெறுனர்:- எதிர்தரப்பினரின் பெயரும் முகவரியும். ஐயா, பார்வை:……………… பெற்றதற்கு உங்கள்……………….. தேதியிட்ட பில் எண்……………… (1) எனக்கு ……………..பொருள்/சேவை அளித்தீர்கள், அதில் உள்ள குறைபாடுகளை இதன் கீழ் கொடுக்கிறேன் (விவரமாக எழுதவும்) (2) ஏற்கனவே நீங்கள் ஏதேனும் அவருக்கு கடிதம் எழுதியிருந்தால் அதை நினைவுப்படுத்தவும். (3) (அவர்கள் 15 நாட்களுக்குள்) குறையைச் சரிசெய்ய வேண்டும் அல்லது புதிய பொருள் கொடுக்கவேண்டும், அல்லது அதன் விலையைத் திருப்பித் தரவேண்டும் என்றும் அப்படி அவர்கள் செய்யத் தவறினால் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய உள்ளேன் என்பதையும் தெரிவிக்கவும். இப்படிக்கு உங்கள் கையொப்பம். நுகர்வோர் புகார் ஆதாரம் : லோக்சத்தா கட்சி, தமிழ்நாடு