<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify; ">மத்திய அரசு திட்டங்கள்</h3> <h4 style="text-align: justify; ">பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித் திட்டம்</h4> <p style="text-align: justify; ">கிராமப்புற மற்றும் நகா்ப்புற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளில் விடுபட்ட பணிகளை முடிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலங்களவை உறுப்பினர்களும் தமது தொகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 கோடிக்கு பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கலாம். மாநிலங்களவை உறுப்பினர்களைப் பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்திற்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கலாம். மக்களவை மற்றும் மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் தாம் விரும்பிய பணிகளை இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தலாம். அப்பணிக்கான நிர்வாக அனுமதியினை மாவட்ட ஆட்சியர் வழங்குவார். இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் எடுத்துச் செய்யப்பட வேண்டிய பணிகளின் விபரம் மற்றும் எதிர்மறை பட்டியலில் இடம் பெற்ற பணிகளின் விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது. குளம், ஆறு, சிறு பாசனக்குளங்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாறும் பணிகள் பராமரிப்பு பணிகளாக கருதப்படுவதால் இத்திட்டத்தின் கீழ் செய்ய இயலாது. மாவட்ட ஆட்சியர் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகளுக்கான நிர்வாக அனுமதியினை வழங்குவதோடு செயல்படுத்தும் முகமையையும் கண்டறிவார்.</p> <h4 style="text-align: justify; ">பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்</h4> <p style="text-align: justify; ">மத்திய அரசால் பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம் 25.12.2000 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் 100 சதவிகிதம் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுவதாகும்.</p> <h4 style="text-align: justify; ">மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்</h4> <p style="text-align: justify; ">மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 01.04.2008 முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது.<br />மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் முக்கிய நோக்கம்</p> <ol style="text-align: justify; "> <li>வாழ்வாதாரத்தை உயா்த்துதல்</li> <li>ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாள் வேலை வாய்ப்பினை வழங்குதல்</li> <li>ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அளவில் அவர்கள் செய்த வேலையின் அளவுப்படி ரூ.205/- ஊதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாணை (நிலை) எண். 45 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (ம.அ.தி.1) துறை நாள் : 03.04.2017ன்படி 01.04.2017 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</li> </ol> <p style="text-align: justify; "><strong>பதிவேடுகள் பராமரித்தல் விபரங்கள்:</strong></p> <p style="text-align: justify; ">மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சரியான முறையில் பதிவேடுகளை பராமரிப்பதை உறுதி செய்ய கீழ் குறிப்பிடும் பதிவேடுகளை அரசு நிர்ணயித்த படிவத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையினால் மாவட்ட அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும் மற்றும் ஊராட்சி அளவிலும் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது.<br />கிராம ஊராட்சி :</p> <ol style="text-align: justify; "> <li>விண்ணப்ப பதிவேடு மற்று்ம அடையாள அட்டை வழங்கும் பதிவேடு</li> <li>கிராம சபா பதிவேடு</li> <li>வேலை கோருதல், வேலை ஒதுக்கீடு செய்தல் மற்றும் ஊதியம் பட்டுவாடா செய்தல் பதிவேடு</li> <li>வேலை பதிவேடு</li> <li>நிரந்தர சொத்துப் பதிவேடு</li> <li>புகார் பதிவேடு</li> <li>கட்டுமான இருப்புப் பதிவேடு</li> <li>வேலை அடையாள அட்டை இருப்புப் பதிவேடு</li> <li>வருகைப் பட்டியல் இருப்புப் பதிவேடு</li> </ol> <p style="text-align: justify; "><strong>ஊராட்சி ஒன்றிய அளவில் :</strong></p> <ol style="text-align: justify; "> <li>பட்டியல் அனுமதிக்கும் பதிவேடு</li> <li>ஊராட்சி வாரியாக நிதி விடுவிப்பு மற்றும் செலவு பதிவேடு</li> <li>வேலை அடையாள அட்டை இருப்புப் பதிவேடு</li> <li>வருகைப் பட்டியல் இருப்புப் பதிவேடு</li> <li>மதிப்பீடு மற்றும் ஒதுக்கீடுக்கான பதிவேடு</li> </ol> <p style="text-align: justify; "><strong>மாவட்ட அளவில்:</strong></p> <ol style="text-align: justify; "> <li>வாராந்திர செலவினப் பதிவேடு</li> <li>ஊராட்சி ஒன்றியம் வாரியாக நிதி விடுவிப்பு மற்றும் செலவு பதிவேடு</li> <li>வேலை அடையாள அட்டை இருப்புப் பதிவேடு</li> <li>வருகைப் பட்டியல் இருப்புப் பதிவேடு</li> <li>“1299” புகார் பதிவேடு</li> <li>வேலை அட்டைகள் மற்றும் வருகைப் பதிவேடு</li> </ol> <p style="text-align: justify; ">அரசினால் வழங்கப்பட்ட அறிவுரைப்படி வேலை அட்டைகள் மற்றும் வருகை பதிவேடுகள் தேவையினை கணக்கிட்டு அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify; ">ஊரக வளர்ச்சி இயக்குநரின் அறிவுரைப்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கீழ்க்குறிப்பிடும் முன்னுரிமைப்படி வேலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p> <ol style="text-align: justify; "> <li>ஒரு பொது வேலையின் மதிப்பு ரூ.3.00 இலட்சத்திற்கும் குறைவாக இருத்தல் கூடாது</li> <li>சுலபமாக செயல்படுத்துதல்</li> <li>மேலான கண்காணிப்பு</li> <li>பார்க்கக்கூடிய உறுதியான சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் துண்டு துண்டான வேலைகளை தேர்வு செய்யாமல் ஒட்டு மொத்தமாக வேலைகளை செயல்படுத்துதல்</li> </ol> <h4 style="text-align: justify; ">முழு சுகாதார இயக்கம் – தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) – (SWACCH BHARATH MISSION(G)</h4> <p style="text-align: justify; ">முழு சுகாதார இயக்கம் இந்திய அரசால் அனைத்து வீடுகளிலும் சுகாதார வசதிகளை உருவாக்கவும் சுத்தமான பழக்க வழக்கங்களை மேம்படுத்தவும் முதலில் 1999ஆம் ஆண்டு கடலூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் துவங்கப்பட்டு, 2004ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் விரிவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஊரகப் பகுதிகளில் விரைவாக செயல்படுத்த நிர்மல் பாரத் அபியான் (NBA) என்று மறு பெயரிடப்பட்Lது.<br />இதன் தொடர்ச்சியாக மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டினை முன்னிட்டு 2019ஆம் ஆண்டிற்குள் தூய்மையான பாரதத்தினை உருவாக்கிடும் பொருட்டு 2014ஆம் வருடம் அக்டோபர் 2ஆம் தேதி தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) -(SWACCH BHARATH MISSION(G)-ஐ இந்திய அரசு ஏற்படுத்தியது.</p> <h4 style="text-align: justify; ">தனிநபர் இல்லக் கழிப்பறை</h4> <p style="text-align: justify; ">தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் குறிப்பிட்ட வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள (தாழ்த்தப்பட்டவர் / பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள்) வீடுகளுக்கு ஒரு கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12000/- வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். இத்தொகை முழுவதுமாக தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் பயனாளிகளின் பங்குத் தொகை இல்லாமல் மத்திய அரசின் பங்குத் தொகையாக ரூ.9000/-ம் மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.3000/-ம் வழங்கப்படும். மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் கட்டப்படும் அனைத்து வீடுகளும் கழிப்பறையுடன் கட்டப்படும்.</p> <h3 style="text-align: justify; ">மாநில அரசு திட்டங்கள்</h3> <h4 style="text-align: justify; ">தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்</h4> <p style="text-align: justify; ">தாய் திட்டத்தின் கீழ் 2011-12 முதல் 2015-16ஆம் ஆண்டு வரை ஐந்து பகுதிகளாக குறைந்தபட்ச அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர் பணிகள், தெரு விளக்குகள், மயான மேம்பாடு மற்றும் கூடுதல் பணிகளான அங்கன்வாடி மையங்கள், பொது விநியோக கடை, சுய உதவிக்குழு கட்டிடம், கதிரடிக்கும் களம், விளையாட்டு மைதானம் மற்றும் இதர தேவையான பணிகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.<br />12524 கிராம பஞ்சாயத்துகளிலும் அடிப்படை தேவைகள் அதிக அளவில் முழுமையடைந்தமையால் தாய் – II திட்டத்தின் கீழ் கீழ்க்காணும் 3 வகைகளில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.</p> <ol style="text-align: justify; "> <li>சிறுபாசன குளங்களை மேம்படுத்துதல் (40%)</li> <li>சாலைப் பணிகள் (40%)</li> <li>உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை தேவைகள் (20%)</li> </ol> <p style="text-align: justify; "><strong>சிறு பாசன குளங்களை மேம்படுத்துதல்:</strong></p> <p style="text-align: justify; ">ஊராட்சி ஒன்றியங்களின் கீழுள்ள சிறுபாசன குளங்களை அதன் முழு அளவிற்கு மேம்படுத்துதல், நிலத்தடி நீரை அதிகரித்தல், அதிகப்படியான நீர் வீணாவதை தடுத்தல், நீர் ஆதாரங்களில் உடைப்புகள் ஏற்படுவதை தடுத்தல் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீரினை சேமிப்பதை முறைப்படுத்துதல் அவற்றின் மூலம் தேவையான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்தல், பாசன வசதி மூலம் தானிய உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.</p> <p style="text-align: justify; "><strong>சாலைகள் – அனுமதிக்கப்பட்ட பணிகள்:</strong></p> <ol style="text-align: justify; "> <li>மண்சாலைகளை தார்ச்சலைகளாக மாற்றுதல்</li> <li>பழுதடைந்துள்ள சாலைகளை பலப்படுத்துதல்</li> <li>பழுதடைந்துள்ள தார்ச் சாலைகளை புதுப்பித்தல்</li> </ol> <p style="text-align: justify; "><strong>அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகள்:</strong></p> <p style="text-align: justify; ">தாய் திட்டத்தின் கீழ் 2011-12 முதல் 2015-16 வரையில் அத்தியாவசியமான அடிப்படை வசதி பணிகளான குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகள், இணைப்பு சாலை, மயான மேம்பாடு மற்றும் மயான சாலைகள் போன்றவை அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுவி்ட்ட போதிலும், சில இடங்களில் குறிப்பாக மலைவாழ் மக்கள் குடியிருப்பு, ஆதிதிராவிடர் குடியிருப்பு, ஆதிதிராவிடர் காலனி குடியிருப்புகள் மற்றும் அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குடியிருப்புகளில் அடிப்படை தேவைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. சில அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான 55 LPCD தரத்தில் குடிநீர் வழங்கும் பணிகளை பராமரித்தல், புதிய குடியிருப்புகளுக்கு தெரு விளக்குகள் அமைத்தல், மயானம் மற்றும் மயான பாதை, குறிப்பாக ஆதிதிராவிட நலத்துறை உருவாக்கிய புதிய குடியிருப்புகளுக்கு மயானங்கள் மேம்படுத்துதல் புதிய குடியிருப்புகளில் சாலைகள் மேம்படுத்துதல் மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்துல் போன்ற விடுபட்ட பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு 2016-17 முதல் 2020-21 வரையிலான ஐந்து ஆண்டுகளில் தாய்-II தி்ட்டத்தின் கீழ் விடுபட்டுள்ள குடிநீர் வழங்கும் பணி, தெரு விளக்குகள் அமைக்கும் பணி, தெரு / பாதை மேம்படுத்துதல் மற்றும் மயான மேம்பாடு போன்ற பணிகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p> <h4 style="text-align: justify; ">அம்மா பூங்கா</h4> <p style="text-align: justify; "><strong>அம்மா பூங்காவின் நன்மைகள்:</strong></p> <ol style="text-align: justify; "> <li>உடல் உறுதியினை மேம்படுத்துகிறது</li> <li>குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களின் மன மகிழ்ச்சியினை உருவாக்குகிறது</li> <li>மனம் மற்றும் உடல் நலத்தினை மேம்படுத்துகிறது</li> <li>கிராமங்களை அழகுபடுத்துகிறது</li> <li>நடை பயிற்சிக்கு பாதை அமைக்கப்படுகிறது</li> </ol> <p style="text-align: justify; ">அம்மா பூங்கா தேர்வு செய்யும் முறை மற்றும் கூறுகள் :</p> <p style="text-align: justify; ">மாவட்ட ஆட்சியர் ரூ.20.00 இலட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் மற்றும் 14வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.20.00 இலட்சத்திற்கும் மேலான நிதியுதவி பெறும் கிராம ஊராட்சிகளில் குடியிருப்புக்கு மத்தியில் நில இருப்பைப் பொறுத்து அம்மா பூங்கா அமைக்க ஊராட்சியை தோ்ந்தெடுப்பார். இதில் குறைபாடு இருப்பின் அந்த ஊராட்சியின் பொது நிதி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிதிகள் ஒருங்கிணைக்கப்படும்.</p> <p style="text-align: justify; ">அம்மா பூங்கா அமைக்க எங்கு 15000 ச.அடி முதல் 20,000 ச.அடி வரையிலான பரப்பு உள்ளதோ அல்லது கிராம ஊராட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட திறந்த வெளி (Open Spaced Reserved – OSR) உள்ளதோ அக்கிராம ஊராட்சியில் பூங்கா அமைக்கப்படும்.</p> <p style="text-align: justify; ">அம்மா பூங்காவில் கீழ்க்காணும் வசதிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்</p> <ol style="text-align: justify; "> <li>சிமெண்ட் கான்கிரீட் அல்லது பேவர் பிளாக் நடைபாதை அமைத்தல்</li> <li>LED பல்பு மூலம் விளக்குகள் அமைத்தல்</li> <li>சிமெண்ட் / கிரானைட் மேடை பெஞ்சுகள் அல்லது துருப்பிடிக்காத இரும்பு பெஞ்சுகள்</li> <li>பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான கழிப்பிடங்கள்</li> <li>தோட்ட பராமரிப்பு மற்றும் கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுத்தல்</li> <li>குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களுடன் விளையாட்டு மைதானம் அமைத்தல்</li> <li>எவர்சில்வர் வரவேற்பு நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்வதற்கான வாயில்</li> <li>பாதுகாப்பு கம்பிகளுடன் கூடிய சுற்று சுவர்</li> <li>பூங்காவில் உடற்பயிற்சிக்கான உபகரணங்களை நிறுவுதல்</li> <li>தகவல் பலகைகள் மற்றும் அறிவிப்பு பலகைகளை நிறுவுதல்</li> <li>தேவைப்படும் இடங்களில் 8 வடிவ நடைபயிற்சி பாதை அமைத்தல்</li> </ol> <h4 style="text-align: justify; ">அம்மா உடற்பயிற்சி மையம்</h4> <p style="text-align: justify; ">மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழக சட்டப் பேரவையில் 29.08.2016 அன்று 110 விதியின் கீழ் கிராம ஊராட்சிகளில் ”ஊரகப் பகுதி இளைஞர்களுக்கு உடல் திறன் மற்றும் மனவளத்தினை மேம்படுத்த ஊரகப் பகுதிகளில், அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள்” அமைக்கப்படும். ஒவ்வொன்றும் 10 இலட்சம் ரூபாய் செலவினல் 500 அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.<br />ஒவ்வொரு உடற்பயிற்சி கூடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையான ரூ.10.00 இலட்சத்தில், உடற்பயிற்சி சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ.4.21 லட்சமும் மீதமுள்ள ரூ.5.79 இலட்சத்தில் கூரை, தரை, வண்ணமிட்ட கதவுடன் கூடிய 1161 ச.அடியில் மொத்த உடற்பயிற்சி கூட கட்டுமானத்திற்கு உபயோகப்படுத்த வேண்டும்.</p> <p style="text-align: justify; "><strong>அம்மா உடற்பயிற்சி கூட நன்மைகள்:</strong></p> <ol style="text-align: justify; "> <li>கிராமப்புற இளைஞர்களுக்கு உடற்பயிற்சிக்காகவும், உடல் உறுதியை பாதுகாக்கவும் உதவி புரிகிறது</li> <li>ஊரக மக்களின் உடல் நலம் காக்கவும், நோய்களை தடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கிறது</li> <li>இளைஞர்களி்ன மன வலிமையை அதிகரிக்கிறது</li> <li>இளைஞர்களை விளையாட்டு போட்டிகளுக்கு தயார் செய்ய உதவுகிறது</li> </ol> <p style="text-align: justify; ">அம்மா உடற்பயிற்சி கூடம் இடம் தேர்வு :-</p> <p style="text-align: justify; ">அம்மா பூங்காவில் இடம் உள்ள இடங்களில் அம்மா உடற்பயிற்சி கூடம் ஏற்படுத்தப்பட உள்ளது. கிராம ஊராட்சிகளினால் பராமரிக்கப்படுகிறது.</p> <h4 style="text-align: justify; ">சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்</h4> <p style="text-align: justify; ">சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளில் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளை உடனடியாக கண்டறிந்து அதனை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தோகுதி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் தனது சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளை கண்டறிந்து அப்பணியினை இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்திட பரிந்துரை செய்திடுவார்கள். இத்திட்டம் ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஆண்டுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி ரூ.1.75 கோடி தொகையானது 2011-12ஆம் ஆண்டு முதல் ரூ.2.00 கோடி தொகையாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.</p> <p style="text-align: justify; ">சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு நிதி ஒதுக்கீடான ரூ.2.00 கோடியில், கீழ்க்காணும் முன்னுாிமை பணிகளை கட்டாயமாக எடுத்துச் செய்ய ரூ.1.10 கோடி “வரையறுக்கப்பட்ட கூறு நிதியாக” ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மீதமுள்ள “வரையறுக்கப்படாத கூறு நிதியான” ரூ.90.00 இலட்சத்தில், தடை செய்யப்பட்ட பணிகளின் பட்டியலில் இடம் பெறாத பணிகள் அல்லது வரையறுக்கப்பட்ட கூறு நிதியில் அனுமதிக்கப்பட்ட பணிகளிலிருந்தும் அவர் தம் விருப்பத்தின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தேர்வு செய்யலாம்.</p> <h4 style="text-align: justify; ">முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்</h4> <p style="text-align: justify; "><strong>இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் ::</strong></p> <ol style="text-align: justify; "> <li>ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை மக்கள் அனைவரும் சூாிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவர்கள்</li> <li>சூரிய ஒளி முகப்புப் பலகை மற்றும் விளக்குகள் வழங்குதல், நிறுவுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை நெறிமுறைப்படுத்தப்பட்ட நடைமுறைகளின்படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளின் திட்ட இயக்குநர்களால் செயல்படுத்தப்படும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலருடன் கலந்தாலோசித்து சூரிய மின்சக்தி விளக்குகள் பொருத்துவதை செயல்படுத்துவதற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் அவர்கள் தகுதியானவர் ஆவார்</li> <li>ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில், ரூ.2.10 லட்சம் அலகுத் தொகையில் மாநில அரசின் முழுமையான நிதி உதவியுடன் கட்டப்படுகிறது</li> <li>ஒவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இவை தவிர மழைநீர் சேகரிப்பு அமைப்பும் கொண்டிருக்கும்</li> <li>ஒவ்வொரு வீட்டிலும் சூரிய ஒளி சக்தியில் எரியும் 5 ஒளி உமிழும் இருமுனையை (LED) விளக்குகள் அமைக்கப்படும். இவை படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு விளக்கு வீதம் அமைக்கப்படும். பயனாளிகளின் விருப்பத்தின்படி தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து மீட்டர் அளவீடுடன் கூடிய மின் இணைப்பு பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது</li> <li>ஒரு வீட்டிற்கான அலகுத் தொகையான ரூ.2.10 லட்சத்தில், ரூ.1.80 லட்சம் கட்டுமானத்திற்கு ஒதுக்கப்பட்டு, சூரிய சக்தி விளக்குகள் அமைப்பதற்கான நிதி தேவைக்கேற்ப ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் அவர்களால் விடுவிக்கப்படும்</li> <li>வீடுகள் கட்டும் பணி மற்றும் சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் செயல்படுத்தப்படும்</li> <li>பசுமை வீடுகள், பயனாளிகளின் குடியிருப்பு அமைந்துள்ள இடம் அல்லது கிராம ஊராட்சியின் பிற பகுதியில் அமைந்துள்ள பயனாளிக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட வேண்டும். மேலும், இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுவதற்கென நில எடுப்புகள் ஏதும் செய்யப்படமாட்டாது. வீட்டுமனைப்பட்டா உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர்</li> </ol> <p style="text-align: justify; "><strong>பயனாளிகளுக்கான தகுதிகள் :</strong></p> <ol style="text-align: justify; "> <li>ஒவ்வொரு பயனாளியும் கிராம ஊராட்சிக்குள்ளேயே வசிக்க வேண்டும்</li> <li>கிராம ஊராட்சியில் வறுமை கோட்டிற்குக் கீழ் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்று இருக்க வேண்டும்</li> <li>300 சதுர அடிக்கு குறைவில்லாத இடத்தினை உடையவராக இருக்க வேண்டும்</li> <li>குடும்ப தலைவர் பெயாரிலோ அல்லது வீட்டிலுள்ள ஏதாவது உறுப்பினர் பெயரிலோ இடம் / வீட்டிற்கான தெளிவான பட்டாவினை வைத்திருக்க வேண்டும்</li> <li>அந்த கிராமத்திலோ அல்லது வேறெங்கிலோ பக்கா கான்கிரீட் வீடு உடையவராக இருக்க கூடாது</li> <li>அரசின் வேறெந்த வீட்டு உதவி திட்டத்தின் கீழ் பயனடைந்தவராக இருத்தல் கூடாது</li> </ol> <h4 style="text-align: justify; ">பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (PMAY(Gramin))</h4> <p style="text-align: justify; ">மத்திய அரசின் “அனைவருக்கும் 2022ம் ஆண்டுக்குள் வீடு“ என்ற குறிக்கோளை முன்வைத்து மத்திய கேபினட் அமைச்சகம் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (கி) Pradhan Mantri Awaas Yojana (Gramin)-க்கு 23.03.2016 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.</p> <p style="text-align: justify; ">வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் அல்லாமல் மக்கள் தொகை அடிப்படையில், பயனாளிகள் சமூக பொருளாதார ஜாதிவாரியான கணக்கெடுப்பு (Socio Economic Caste Census) மூலமாக அடையாளம் காணப்பட்டு கிராம சபா கூட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டு தகுதியான நபர்கள் PMAY(G) திட்டத்திற்கு பயனாளிகளாக தேர்வு செய்தல் வேண்டும்.</p> <p style="text-align: justify; ">தாழ்த்தப்பட்டோர் (SC), பழங்குடியினர் (ST), சிறுபான்மையினர்(Minority) மற்றும் இதர பிரிவினர் (Others) கிராம ஊராட்சி அளவில் தனியாக பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.<br />கீழ்க்கண்ட நபர்கள் இத்திட்டத்தின் பயனாளிகள் ஆவதற்கு முன்னுரிமை பெறுகின்றனர்</p> <ol style="text-align: justify; "> <li>இருப்பிடம் இல்லாதவர்கள்</li> <li>ஆதரவற்ற நிலையில் உள்ளவர்கள்</li> <li>துப்புரவு பணியாளர்கள்</li> <li>ஆதி திராவிட மலை ஐாதியினர்</li> <li>கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள்</li> </ol> <p style="text-align: justify; ">சமூக பொருளாதார அடிப்படையில் முன்னுரிமை :-</p> <ol style="text-align: justify; "> <li>குடும்ப தம்பதியருக்கு ஆதரவாக 16 வயது முதல் 59 வயது வரையிலான நபர்கள் இல்லாது இருத்தல்</li> <li>பெண் குடும்பத்தலைவியாக உள்ள குடும்பத்தில் ஆதரவாக 16 வயது முதல் 59 வயது வரையிலான நபர்கள் இல்லாது இருத்தல்</li> <li>25 வயதுக்கு மேல் கல்வியறிவு அற்ற நபர்கள் உள்ள குடும்பத்தினர்</li> <li>ஊனமுற்றவர்கள் அல்லது உடல் முழுவதும் இயங்க இயலாத நிலையில் உள்ள நபர்கள்</li> <li>நிலமற்ற கூலி வேலை செய்பவர்கள்</li> </ol> <p style="text-align: justify; ">மேலும், கீழ்க்கண்ட நபர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்</p> <ol style="text-align: justify; "> <li>விதவைகள் மற்றும் பாதுகாப்பு / படைப்பிரிவு / காவல் துறையில் உயிரிழந்த குடும்பத்தினர்</li> <li>தொழுநோய் அல்லது புற்று நோய் அல்லது HIV பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்</li> <li>ஒரு பெண் குழந்தையுடன் மட்டும் வசிக்கும் குடும்பத்தினர்</li> <li>வன உரிமைச் சட்டத்தால் பயன்பெறும் குடும்பத்தினர்</li> <li>திருநங்கைகள்</li> </ol> <p style="text-align: justify; ">பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீடுகளுக்கான அளவு 210 சதுர அடியிலிருந்து 269 சதுர அடியாக உயா்த்தப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify; "><strong>நிதி விபரம்:</strong></p> <table class="grid listing" style="text-align: justify; "> <thead> <tr> <th>நிதி விபரம்</th><th>தொகை</th> </tr> </thead> <tbody> <tr> <td>மத்திய அரசின் பங்குத் தொகை (60%)</td> <td>Rs.72,000/-</td> </tr> <tr> <td>மாநில அரசின் பங்குத் தொகை (40%)</td> <td>Rs.48,000/-</td> </tr> <tr> <td>மத்திய அரசினால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு வீட்டிற்கான தொகை</td> <td>Rs.1,20,000/-</td> </tr> <tr> <td>கூரைமட்ட கான்கிரீட் நிலைக்கு தமிழ்நாடு அரசால் தற்போது வழங்கப்படும் தொகை</td> <td>Rs.50,000/-</td> </tr> <tr> <td>தமிழ்நாட்டில் ஒரு வீட்டிற்கு அனுமதிக்கப்படும் மொத்த தொகை</td> <td>1,70,000/-</td> </tr> </tbody> </table> <p style="text-align: justify; ">ஆதாரம் - <a class="ext-link-icon" href="https://thoothukudi.nic.in/" target="_blank">தூத்துக்குடி மாவட்டம்</a></p> </div>