<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக்கின்றன. அதுவும் சில நோய்களுக்குள், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழை களுக்காகக் கொண்டு வரப்பட்டது முதலைமைசரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் .</p> <h3>முதலைமைசரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்பது என்ன?</h3> <p style="text-align: justify;">நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.</p> <h3>தகுதிகள்</h3> <p style="text-align: justify;">இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருவானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.</p> <h3>தேவையான ஆவணங்கள்</h3> <ul> <li style="text-align: justify;">கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில் தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கவேண்டும்.</li> <li style="text-align: justify;">குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.</li> </ul> <h3>எங்கே விண்ணப்பிப்பது?</h3> <p style="text-align: justify;">ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மையம் இயங்கி வருகிறது. அந்த மைய்யத்திற்குச் சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும். பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.</p> <h3>பயனை எப்படி பெறுவது?</h3> <p style="text-align: justify;">இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும்.</p> <p style="text-align: justify;">இதன் மூலம் கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பெற முடியும். இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலம், கண் நோய் சிகிச்சை, இரைப்பை (ம) குடல் நோய்கள், ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைச் சிகிச்சைகள் , காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், கருப்பை நோய்கள், ரத்த நோய்கள்.</p> <h3>மருத்துவமனை செல்லும்போது கவனிக்க வேண்டியவை</h3> <p style="text-align: justify;">சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல் நாள் முதல் சிகிச்சைமுடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து அய்ந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இலவச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவமனையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரே சிகிச்சை வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.</p> <h3>மேலதிக விவரங்களுக்கு</h3> <p style="text-align: justify;">இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.</p> <p style="text-align: justify;"><a class="external-link ext-link-icon" href="http://www.cmchistn.com/" target="_blank" rel="noopener">http://www.cmchistn.com/</a> இத்தளத்திற்குச் செல்லலாம்.</p> <p style="text-align: justify;">1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.</p> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் :</strong> <a href="http://www.cmchistn.com/circular/FAQ_tamil.pdf" target="_blank" rel="noopener">தமிழ்நாடு அரசு</a>.</p> </div>