இ-சரிபார்ப்புத் திட்டம் தன்னார்வ வரி இணக்கம் மற்றும் வரி நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஊக்கப்படுத்த வருமான வரித்துறை பல முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகையை முன்முயற்சிகளில் ஒன்றாக இ-சரிபார்ப்புத் திட்டம் (e-Verification Scheme) உள்ளது. இது குறித்து 2021, டிசம்பர் 13 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. வரி செலுத்துவோரால் தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்குகளில் பதிவு செய்யப்படாத அல்லது குறைவாக பதிவு செய்யப்பட்ட நிதி பரிவர்த்தனை தகவலை வரி செலுத்துவோருடன் பகிர்ந்து கொள்வதையும், சரிபார்ப்பதையும் நோக்கமாக கொண்ட இந்தத் திட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது. இ-சரிபார்ப்பு தொடர்பான அனைத்து நடைமுறைகளும் டிஜிட்டல் வழியாக நடைபெறுகின்றன. மின்னணு முறையில் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வரி செலுத்துவோரின் பதில்களும், மின்னணு முறையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. விசாரணை நிறைவடைந்த பின், சரிபார்ப்பு அறிக்கையும், மின்னணு முறையில் தயாரிக்கப்பட்டு நேரடியான தலையீடு இல்லாமல், வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படுகிறது. இந்த வகையில், முன்னோட்டமாக 2019-20 நிதியாண்டில், 68 ஆயிரம் கணக்குகளில் இ-சரிபார்ப்புக்காக நிதிப்பரிமாற்ற தகவல் பெறப்பட்டன. இதுவரை சம்பந்தப்பட்ட இயக்ககத்தின் மூலம் 35 ஆயிரம் கணக்குகளில் இ-சரிபார்ப்பு முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் குறித்து நன்கு புரிந்துகொள்ளவும், இதில் செயல்படுத்தப்படும் பல்வேறு நடைமுறைகளை அறிந்துகொள்ளவும் அடிக்கடி கேட்கப்படும் பல்வேறு கேள்விகளுக்கு www.incometaxindia.gov என்ற இணையதளத்தில் விளக்கங்கள் உள்ளன. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்