<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify; "><span style="text-align: justify; ">வரலாறு</span></h3> <p style="text-align: justify; ">மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic voting machine) சில நாடுகளில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் வாக்கைப் பதிவு செய்ய நடைமுறையில் இருக்கும் கருவியாகும். பதிவான தகவல்களைச் சேமித்து வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வெளிக்காட்டும் இயந்திரமாகும். தற்போது இந்தியா, பிரேசில் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.</p> <p style="text-align: justify; "><span>சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் ஓட்டுச் சீட்டு முறையிலேயே, தேர்தல் நடைமுறைகள் நடத்தப்பட்டு வந்தன. பின்பு தொழிற்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன் பட்டுக்கு வந்தன. இந்திய தேர்தலில் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களையும் கால விரயம், பண விரயம் ஆகியவற்றைத் குறைக்கவும், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையாகவும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. மத்திய அரசு நிறுவனங்களான பாரத் மின்னணு நிறுவனம், இந்திய மின்னணு கழகம் ஆகியவை இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயாரித்து தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகிவருகின்றன.</span></p> <p style="text-align: center; "><span><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/e-governance/baabafba9bc1bb3bcdbb3-b86ba4bbebb0b99bcdb95bb3bcd/voting.jpg" /></span></p> <h3 style="text-align: justify; ">பயன்பாடு</h3> <p style="text-align: justify; ">மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால், ஒரு ஓட்டுச் சாவடிக்கு மிகக்குறைவான அளவு ஓட்டுச்சீட்டுகளே தேவைப்படுவதால், காகிதம் மற்றும் அச்சிடும் செலவு வெகுவாகக் குறைந்தது. 1996ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 8,800 டன்னும், 1999ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 7,700 டன்னும் காகிதம் பயன்பாடு குறைக்கப்பட்டது.</p> <h3 style="text-align: justify; ">உபயோகிக்கும் முறை</h3> <ul> <li style="text-align: justify; "><span>இந்த இயந்திரம், கட்டுப் பாட்டு கருவி், ஓட்டுப்பதிவு கருவி என இரு பகுதிகளைக் கொண்டது. கட்டுப்பாட்டு கருவி மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலர் இருக்கும் இடத்திலும், ஓட்டுப்பதிவு கருவி வாக்காளர் ஓட்டளிக்கும் மறைவான இடத்திலும் இருக்கும்.</span></li> <li style="text-align: justify; "><span>இந்த இரு கருவிகளும் பத்து மீட்டர் நீளமுள்ள மின்னிணைப்பு வடம் (கேபிள்) மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.</span></li> <li style="text-align: justify; "><span>ஒரு வாக்காளர் வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தியதும், அந்த வேட்பாளருக்கான ஓட்டுப்பதிவாகி விடும்.</span></li> <li style="text-align: justify; "><span>அதன்பின் கட்டுப்பாட்டு பிரிவிலுள்ள ஓட்டு பொத்தானை மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலர் மீண்டும் அழுத்தினால் தான், இயந்திரம் அடுத்த ஓட்டை பதிவு செய்யத்தயாராகும்.</span></li> <li style="text-align: justify; "><span>இயந்திரத்தின் சாவி பதிவு செய்யப்படும்போது, தேதியும், நேரமும் பதிவாகி விடும். ஓட்டுப்பதிவு முடிந்ததும், மூடுவதற்கான பொத்தானை அழுத்திவிட்டால் இயந்திரம் எந்த புள்ளிவிவரத்தையும் ஏற்காது.</span></li> <li style="text-align: justify; "><span>மொத்தம் என்ற பொத்தானை அழுத்தினால், அதுவரை பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையை காட்டும். இதை 17-ஏ படிவத்தில் உள்ள வாக்காளர் பதிவு புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம்.</span></li> </ul> <h3 style="text-align: justify; ">சிறப்பு அம்சங்கள்</h3> <ul> <li style="text-align: justify; "><span>ஓட்டுப்பதிவின் போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், அதற்கு பதில் புதிய இயந்திரத்தை அப்பகுதிக்கான மண்டல அதிகாரி பொருத்துவார்.</span></li> <li style="text-align: justify; "><span>பழுதான இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் அதன் 'மெமரி'யில் அப்படியே இருக்கும் என்பதால், முதலில் இருந்து ஓட்டுப்பதிவை நடத்த வேண்டியதில்லை.</span></li> <li style="text-align: justify; "><span>இந்த இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு ஐந்து ஓட்டுகளுக்கு மேல் பதிவு செய்யாது. யாராவது ஓட்டுச் சாவடியை கைப்பற்ற முயன்றால், தலைமை அலுவலர் 'முடிவு' பொத்தானை அழுத்தி ஓட்டுப்பதிவை நிறுத்திவிட முடியும்.</span></li> <li style="text-align: justify; "><span>பார்லிமென்ட், சட்டசபை இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், இரண்டிற்கும் தனித்தனி இயந்திரம் பயன்படுத்தப்படும். 'முடிவு' பகுதி முத்திரையிடப்படா விட்டால், ஒரு குறிப்பிட்ட ஓட்டுச் சாவடியின் முடிவுகளை குறிப்பிட்ட நாளில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் முன்னரே தெரிந்து கொள்ள இயலும்.</span></li> <li style="text-align: justify; "><span>முத்திரை இடப்பட்ட பட்டையிலோ, காகித்திலோ தேர்தல் அதிகாரி மைய தலைவரின் முத்திரைகளுடன், வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி கையொப்பம் இடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்.</span></li> <li style="text-align: justify; "><span>ஓட்டு எண்ணும் மையத்தில், 'முடிவு' பொத்தானை அழுத்தியதும், அதன் திரையில் அந்த சாவடியில் பதிவான மொத்த ஓட்டுகள், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள் வரிசையாக தோன்றும்.</span></li> <li style="text-align: justify; "><span>ஓட்டு எண்ணும் மைய அலுவலர்களை தவிர, வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் இதை குறித்துக் கொள்வர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அந்தச் சுற்றின் முடிவுகளும், மொத்த கூட்டுத் தொகையும் அறிவிக்கப்படும்.</span></li> <li style="text-align: justify; "><span>சுற்று அடிப்படையிலான முடிவுகளை மொத்தமாக கூட்டி, இறுதி முடிவு அறிவிக்கப்படும்.</span></li> </ul> <p style="text-align: justify; "><strong>ஆதாரம் : </strong>இந்திய தேர்தல் ஆணையம்</p> </div>