<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;"><strong>1. வங்கிகள் பங்குகள் கடனீட்டுப் பத்திரங்களின் அடிப்படையில் பொறுப்பாண்மை அமைப்புகள் (டிரஸ்டஸ்)மற்றும் அறக்கட்டளைகளுக்கு (எண்டோவ்மெண்ட்) கடன் வழங்கலாமா?</strong></p> <p style="text-align: justify;">வழங்க முடியாது.</p> <p style="text-align: justify;"><strong>2. வங்கிகள் ஒரு வங்கிக் குழுமத்தின் பங்குகளின் அடிப்படையில் அக்குழும இயக்குநர்களுக்குக் கடன் வழங்கலாமா?</strong></p> <p style="text-align: justify;">வழங்க முடியாது.</p> <p style="text-align: justify;"><strong>3. முதலீட்டுச் சந்தையில் வங்கிகளின் பங்கேற்றலுக்கு உச்சவரம்பு ஏதும் விதிக்கப்பட்டுள்ளதா?</strong></p> <p style="text-align: justify;">மூலதனச்சந்தை நடவடிக்கைகளில் பண அளிப்புள்ள மற்றும் பண அளிப்பு இல்லாத வகைகளில் கீழ்க்கண்ட வகையான நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபடலாம். பங்குகளில்(Equity) நேரடி முதலீடு, வேறுவகைக்கு மாற்றவல்ல பத்திரங்கள் (Convertible bonds), கடனீட்டுப்பத்திரங்கள் (Debentures) மற்றும் பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளில் நேரடி முதலீடு, பொதுமக்களுக்கான துவக்கநிலை பங்குகள் அளிப்பில் (IPO) முதலீடு செய்ய விழைவோருக்கு, பங்குகளின் பேரில் கடனளித்தல், முதலீட்டு பரஸ்பர நிதி நிறுவனங்கள் இவற்றில் முதலீடு செய்வோருக்கு மற்றும் புரோக்கர்களுக்கு பிணைப்பொருட்களுடன் கூடிய மற்றும் பிணைப்பொருளற்ற கடன் வழங்குதல், அவர்களின் இத்தகு நிதி நடவடிக்கைகளுக்கு கடனுறுதி அளித்தல் ஆகிய வகைகளில் மூலதனச்சந்தை நடவடிக்கைகளில் வங்கிகள் பங்கேற்கலாம். இவ்வகையில் அமையும் நடவடிக்கைகளின் மொத்த தொகையானது கடந்த மார்ச் 31 முடிய உள்ள நிதியாண்டின் மொத்தக்கடன் தொகையில் (வணிக ஆவணங்கள் உட்பட) 5%ற்கு அதிகமாக இருக்கக்கூடாது. இக்குறிப்பிட்ட வரம்பிற்குள் அமையும் இத்தொகையானது வங்கியின் நிகரமதிப்பில் (Networth) 20% ற்கு அதிகமாக இருத்தல் கூடாது. இவ்வாறு மூலதனச்சந்தை நடவடிக்கையில் வங்கியின் பங்கேற்புத்தொகையை கணக்கிடும்போது, பங்குச்சந்தை முதலீட்டு பங்குகளின் கொலள்விலையையே அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>4. வங்கிகள் தம்வசமில்லாப் பங்குகளின் விற்பனையை (Shortsales) மேற்கொள்ளலாமா?</strong></p> <p style="text-align: justify;">வங்கிகள் இத்தகைய விற்பனையை மேற்கொள்ளக் கூடாது.</p> <p style="text-align: justify;"><strong>5. எவ்வகையான பில்களுக்கு வங்கிகள் தள்ளுபடி செய்யக்கூடாது?</strong></p> <p style="text-align: justify;">மின் விசைக்கட்டணங்கள், ஏற்றுமதி இறக்குமதி வரிகள், தவணை முறைக் கொள்முதல், குத்தகை வாடகைத் தவணைகள், பத்திரங்கள் விற்பனை, இதுபோன்ற இன்னபிற நிதிசார் கடனுதவிகள் ஆகியவற்றின் பில்களுக்கு தள்ளுபடி செய்யக்கூடாது.</p> <p style="text-align: justify;"><strong>6. நிதிசாராக் குழுமங்களின் குறிப்பிட்ட காலவைப்புக்கணக்குகளில் வங்கிகள் முதலீடு செய்யலாமா?</strong></p> <p style="text-align: justify;">வங்கிகளல்லாத நிதி சாராக் குழுமங்களில் வங்கிகள் முதலீடு செய்வது அவர்களது பொதுவைப்புச் செயல்திட்டத்தில் தடை செய்யப்படவில்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட குழுமங்களில் வங்கிகள் பொதுவைப்புச் செயல்திட்டத்தின்கீழ் முதலீடு செய்யும்போது, இந்நடவடிக்கைகள் அனைத்தும் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 மற்றும் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 ஆகியவற்றின் அறிவுறுத்தல்படி சமர்ப்பிக்கப்படும் இருப்பு நிலை அறிக்கைகளில் முதலீட்டுக்கடன்கள் என வகைப்படுத்திக் குறிப்பிடவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>7. வங்கிகள் பொதுத்துறை நிறுவன அமைப்புகளின் (PSU) பங்கு அளிப்புக் கடிதங்களை விலைக்கு வாங்கலாமா?</strong></p> <p style="text-align: justify;">வங்கிகள் பொதுத்துறை நிறுவனப் பங்கு அளிப்புக் கடிதங்களை கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு கொள்முதல் செய்யலாம்.</p> <p style="text-align: justify;">(1) வங்கிகளுக்கிடையேயான பரிமாற்றம் தவிர ஏனைய நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தை மற்றும் பதிவு செய்து கொண்ட தரகர் மூலம் மட்டுமே செய்யப்படவேண்டும்</p> <p style="text-align: justify;">(2) பத்திரங்களை வாங்கும்போது வங்கி அப்பங்குரிமைப் பத்திரம் குறித்த வில்லங்கமில்லா உடைமையுரிமையையும் பங்குரிமைப் பத்திரச் சந்தையில் அதனை விற்பனை செய்ய முடியும் என்பதனையும் உறுதி செய்யவேண்டும்.</p> <p style="text-align: justify;">(3) வங்கி, அதன் மன்றக்குழுவின் (Board இன்) ஒப்புதலோடு அத்தகைய பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்குத் தேவையான அலுவலக வழிகாட்டும் செயல்முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>8. பங்குகள், கடனீட்டுப்பத்திரங்கள், பத்திரங்கள் ஆகியவற்றின் பேரில் கடன் வழங்குவதற்குப் பின்பற்றப்படும் மதிப்பீட்டு முறை என்ன?</strong></p> <p style="text-align: justify;">பங்குகள் கடனீட்டுப் பத்திரங்கள், பத்திரங்கள் ஆகியவற்றை வங்கிகள் ஈடாக ஏற்கும்போது அப்போதைய சந்தைவிலை நிலவரப்படி பங்குகளின் மதிப்பைக் கணக்கிட வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>9. வங்கிகள் குழுமங்களுக்கு இடைப்படுகால உதவிக் கடன் (Bridge Loan) வழங்கலாமா?</strong></p> <p style="text-align: justify;">வழங்கலாம். வங்கிகள், குழுமங்களுக்கு ஓராண்டு காலத்திற்கு மிகாமல் இடைப்படு கால உதவிக் கடன்களை வழங்கலாம். எதிர்பார்க்கும் பங்கு வரவுகள் (Equity Flows), பங்குகளாக மாற்ற இயலா கடனீட்டுப் பத்திரங்களின்வழி எதிர்பார்க்கும் வருமானம், வெளியேயிருந்து வணிகமுறையில் கடன்வாங்கல், உலகளாவிய வைப்புமுறை வரவுகள், வெளிநாட்டிலிருந்து நேரடி முதலீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இச்செயல்பாடு நிகழவேண்டும். கடன் பெறும் குழுமம் மேற்குறிப்பிட்ட நிதி ஆதாரங்களைப் பெறத் திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்பதில் வங்கி திருப்தி அடைந்திருக்கவேண்டும். மூலதனச் சந்தையில் வங்கிகள் பங்கேற்க விதித்துள்ள உச்சவரம்பான மொத்தக் கடனில் 5% என்பது இந்த இடைப்பட்ட கால உதவிக் கடன்களையும் உள்ளடக்கியே இருக்கவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>10. பங்குகள், கடனீட்டுப் பத்திரங்கள் பொதுத்துறை நிறுவனப் பத்திரவடிவில்லா பத்திரங்கள் ஆகியவற்றைப் பிணையாக வைத்துக் கடன் பெறும் தனிநபர்களின் கடனுக்கான உச்சவரம்பு என்ன?</strong></p> <p style="text-align: justify;">பங்குகள், கடனீட்டுப் பத்திரங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பத்திரங்கள் ஆகியவற்றைப் பிணையாக வைத்து கடன் பெறும் தனி நபர்களுக்கு மேற்குறிப்பிட்டவை ஆவணங்களாக இருந்தால் அதிகபட்சம் ரூ.10 இலட்சமும், வடிவில்லா பத்திர நிலையிலிருந்தால் ரூ.20 இலட்சமும் கடன் வழங்கலாம். வங்கி ஒரு தனிநபருக்கு IPO வில் முதலீடு செய்ய அதிகபட்சமாக ரூ. 10 இலட்சம் கடன் வழங்கலாம். குழுமங்கள் இதரகுழுமங்களின் IPO வில் முதலீடு செய்யக்கடன் வழங்கலாகாது. ஊழியர்களுக்கு அவர்களது குழுமங்களின் பங்குகளை வாங்கப் பணியாளர் சங்கப் பங்கு விருப்பத் திட்டத்தின்(ESOP ன்) கீழ் பங்குகளின் கொள்முதல் விலையில் 90 விழுக்காடு தொகை அல்லது ரூ.20 இலட்சம், இதில் எது குறைவோ அதனை வழங்கலாம்.</p> <p style="text-align: justify;">வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தனி நபர்களுக்கு IPO வில் பங்கேற்கக் கடன் கொடுக்கக் கூடாது. அத்தகைய செயல்களுக்காக வங்கிகள் கொடுக்கும் கடன்கள் பங்குச் சந்தை முதலீட்டுக்கு அளிக்கப்படும் கடன்களுல் அடங்கும்.</p> <p style="text-align: justify;"><strong>11. ஆவணவடிவிலான / பத்திரவடிவில்லா நிலையிலுள்ள பங்குகளுக்கு கடனளிக்கும்போது ஒதுக்க அளவு எவ்வளவு?</strong></p> <p style="text-align: justify;">பங்குகளின் மேல் வழங்கப்படும் எல்லா கடன்களுக்கும் மற்றும் உறுதிச்சான்றிதழ்களுக்கும் ஒதுக்க அளவு வேறுபாடின்றி 50 விழுக்காடாகப் பின்பற்றப்படுகிறது. இந்த 50 விழுக்காடு ஒதுக்க அளவில் குறைந்த பட்சம் 25 விழுக்காடு முதலீட்டுச் சந்தை செயலாக்கத்திற்காக வங்கியால் வழங்கப்படும் சான்றுறிதிக்காக பராமரிக்கப்பட வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி</p> </div>