<h3 style="text-align: justify; "><strong><span>காசோலை ஊடுகதிர்படம் மூலம் தீர்வு</span></strong><strong><span> </span></strong><strong><span> என்றால் என்ன?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>காசோலை ஒன்று வரைபவரிடமிருந்து, வரையப்படும் வங்கிக்கு காகித வடிவில் பயணம் செய்வது தடுக்கப்பட்டு, அதன் மின்னணு பிம்பத்தை ஊடுகதிர்படம் மூலம்</span><span> </span><span> வரையப்படும் வங்கிக்கு</span><span> </span><span> அனுப்பி தீர்வு செய்யப்படும் தீர்வுமுறைக்கு காசோலை ஊடுகதிர்படம் மூலம் தீர்வு எனப்படும்.</span><span> </span><span> மின்னணு முறையில் அதன் பிரதிபிம்பம் வரையப்படும் வங்கிக்குஅனுப்பப்படுகிறது. இத்துடன் MICR பட்டை பற்றிய விவரம், சமர்ப்பிக்கப்பட்ட தேதி, சமர்ப்பிக்கும் வங்கி ஆகிய தகவல்கள் அனுப்பிவைக்கப்படும். </span><span> </span><span>காசோலை ஊடுகதிர்படம் மூலம் தீர்வு முறையில், தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்கள் தவிர மற்ற நேரங்களில் வங்கியின் கிளைகளுக்கிடையே காகித வடிவிலான காசோலை பரிவர்த்தனைகளை தவிர்க்கப்படுகிறது.</span><span> </span><span> இதனால் காசோலை காகித வடிவில் செல்லுவதற்கு ஆகும் செலவுகள் தவிர்க்கப்படுகின்றன.</span><span> </span><span> மேலும் அதனை காசாக்குவதற்கு ஆகும் நேரம் குறைகிறது.</span></p> <h3><strong><span>இந்தியாவில் ஊடுகதிர்படம் மூலம் காசோலை தீர்வு ஏன்?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>மேலே குறிப்பிட்டவாறு காசோலை ஊடுகதிர்படம் மூலம் தீர்வு முறை விரைவான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.</span><span> </span><span> மேலும் காசோலை</span><span> </span><span> தொடர்பான மோசடிகள் நடக்காமலும் ஓரிடத்திலிருந்து மற்றொர் இடத்திற்கு அனுப்பப்படும்பொழுது காணாமல் போகாமலும், தீர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை</span><span> </span><span> தவிர்த்தும் சிறப்பாக செயல்பட வழிவகுக்கிறது. மேலும் இதர பிரதான சேவைகள் RTGS மற்றும் NEFT வடிவில் அளிக்கப்படுவதால், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கிடையே வாடிக்கையாளர் பண அளிப்பை இணையதளத்தின் மூலமாக அதே நேரத்தில் சென்றடையுமாறு செய்யமுடிகிறது.</span><span> </span><span> எனினும் பணம் செலுத்தும் வழிகளில் காசோலைகள்</span><span> </span><span> மிகவும் பிரபலம் என்பதால், ரிசர்வ் வங்கி, அவற்றின் திறனை மேம்படுத்த முடிவு செய்தது.</span><span> </span><span> ஊடுகதிர்படம் மூலம்</span><span> </span><span> காசோலை தீர்வு என்பது மேற்கண்டவற்றில் மாற்றுமுறை வழியாகும்.</span><span> </span><span> காகித வடிவிலான ஆவணங்களை மாற்றுவதைவிட ஊடுகதிர்படம் மூலம்</span><span> </span><span> (Cheque Truncation System –CTS) அனுப்புவது பாதுகாப்பானது.</span></p> <p style="text-align: justify; "><span>செயல் முறைத் திறனோடுகூட CTS, வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளுக்கும் மனித வளசக்தியை நெறிப்படுத்துதல், குறைந்த செலவு, வர்த்தக சுழற்சி, திறம்மிக்க சேவை, நவீன தொழில் நுட்பம் பயன்படுத்துதல் போன்ற நன்மைகளை அளிக்கிறது.</span><span> </span><span> கொடுப்பு முறைகளில் ரிசர்வ் வங்கியில் ஏற்படுத்தப்பட்ட திறன் மேம்படுத்தும் முன்முயற்சியாக CTS திகழ்கிறது.</span></p> <h3><strong><span>நாட்டில் CTS அமலாக்கத்தின் தற்போதைய தகுதிநிலை என்ன?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>ரிசர்வ் வங்கி, CTSஐ ஒரு முன்னோடி திட்டமாக 2008 பிப்ரவரி 1லிருந்து புதுதில்லி, தேசிய தலைநகர் பகுதியில் அமல்படுத்தியது.</span><span> </span><span> MICR முறைமையிலிருந்து காசோலை CTSமுறைமைக்கு 2009 ஜூலை 1லிருந்து முழுமையாக மாறிய பிறகு NCR ல் பாரம்பரிய MICR அடிப்படையிலான காசோலை தீர்வுமுறை தொடர்வது நிறுத்தப்பட்டது.</span><span> </span><span> CTS ஏற்படுத்திய நன்மைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், நாடெங்கிலும் CTS நடைமுறை அமலுக்குவந்தது.</span></p> <p style="text-align: justify; "><span>தொகுப்பு அமைப்பு அடிப்படையில் இதுதிட்டமிடப்பட்டது.</span><span> </span><span> இந்தமுறையில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெறும் காசோலை தீர்வுகளை 5 அல்லது 6 தொகுப்பு அமைப்புகளில் அடக்கிவிடலாம்.</span><span> </span><span> ஒவ்வொரு தொகுப்புஅமைப்பும் தனது ஆதிக்கத்தில் உள்ள மையங்களுக்கு பரிசீலினை மற்றும் தீர்வு சேவைகளை அளிக்கின்றன.</span><span> </span><span> ஒரு தொகுப்பு அமைப்பில் சிறிய/தொலைதூர இடங்கள் மிகுந்த பயனடையும்.</span><span> </span><span> அங்கு முறையான காசோலை தீர்வு ஏற்பாடுகள் இருக்கின்றனவா இல்லையா என்பது ஒரு பிரச்சனையில்லை.</span></p> <p style="text-align: justify; "><span>இதை அமலாக்கம் செய்ய அடுத்தக்கட்டத்தில்சென்னை ஒரு முக்கிய மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. </span><span> </span><span>சென்னை தொகுப்பு அமைப்பு முழுவதுமாக இயங்கத்தொடங்கும்பொழுது அது சென்னை நகருக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா ஆகிய மாநிலங்களிலும் உள்ள 17 MICR மையங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.</span></p> <h3 style="text-align: justify; "><span>CTS செயல்முறையை சுருக்கமாகக் கூறமுடியுமா?</span></h3> <p style="text-align: justify; "><span>ஆம்.</span><span> </span><span> CTS ஏற்பாட்டில் சமர்ப்பிக்கும் வங்கி (அல்லது அதன் கிளை) காசோலை குறித்த விவரங்களை</span><span> </span><span> MICR பேன்டில் பொறித்து,</span><span> </span><span> அதன் பிம்பத்தையும் படமெடுக்கிறது.</span><span> </span><span> இதற்கென வங்கியின் உள்ளக ஏற்பாடாக ஒரு ஊடுகதிர் படமெடுக்கும் எந்திரம் கோர்பேங்கிங்(Core Banking) அமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி சமர்ப்பிக்கும் வங்கி இதைச் செய்கிறது. ஆனால் இவ்வாறு தரப்படும் தகவல்கள் படம் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் தர அளவீடுகள் உடையதாக அமைந்திருக்க வேண்டும்.</span></p> <p style="text-align: justify; "><span>தகவல்கள் மற்றும் பிம்பங்கள் பாதுகாப்பாக அனுப்பப்படுவது உறுதி செய்யப் படுகிறது.</span><span> </span><span> காசோலையை</span><span> </span><span> ஏற்கும்வங்கி (காசோலை வழங்கும் வங்கி) பொறிக்கப் பட்ட தகவல்கள் மற்றும் பிம்பங்களை</span><span> </span><span> கையொப்பமிட்டு தேவையான முறையில் தீர்வு மையத்தின் மைய செயல்முறைப்பகுதிக்கு அனுப்புகிறது.</span><span> </span><span> அங்கிருந்து அவை குறிப்பிட்ட கடைசிகட்ட வங்கி அல்லது காசோலை வரையப்பட்ட வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும்.</span><span> </span><span> தீர்வு மையத்தில் இவை ஒருவருக்கொருவர் பாதுகாப்புடன் தொடர்பு கொள்ள வசதியாக ஒரு தீர்வுத் தொடர்பு மையம் (CHI) அமைக்கப்பட்டுள்ளது.</span><span> </span><span> தீர்வு மையம் அந்த தகவல்களை முறையாகப் பரிசீலித்து, கணக்கெடுத்து தீர்வுக்குரிய தொகையையும் கண்டபின் பிம்பங்களையும் தேவையான தகவல்களையும் வரையப்படும் வங்கிக்கு அனுப்புகிறது.</span><span> </span><span> இது சமர்ப்பிக்கும் தீர்வு என்று அழைக்கப்படுகிறது.</span><span> </span><span> வரையப்பட்ட வங்கிகள் CHIலிருந்து தகவல்களைப் பிரித்து பரிசீலித்து, பணம் அளித்திட தீர்வினைத் தொடர்கிறது.</span><span> </span><span> பண அளிப்பு மறுக்கப்பட்டவைகளுக்கு திரும்பும் கோப்புகளை வரையப்படும் வங்கியின் CHIக்கள் தயாரிக்கும் இந்த கோப்புகளும் பரிசீலினை செய்யப்பட்டு, சமர்ப்பித்த வங்கிக்குத் திருப்பு அனுப்பப்படும்.</span><span> </span><span> சமர்ப்பிக்கும் தீர்வு பின்னர் தொடர்ந்து மறுக்கப்பட்ட காசோலைக்கான கோப்பு இரண்டும் முடிக்கப்படுகையில் தீர்வு சுழற்சி வட்டம் முடிவடைந்ததாகக் கருதலாம்.</span><span> </span><span> காகித வடிவிலான</span><span> </span><span> காசோலைகள் அனுப்பப்படாமல் அவற்றின் பிம்பம் மூலம் தீர்வு நடத்தப்படுவது CTSன் முக்கிய அம்சமாகும்.</span></p> <h3><strong><span>எந்தவிதமான காசோலைகளை கட்ஸ் மூலம் தீர்வுக்கு அனுப்பவேண்டும்?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>எல்லாவிதமான காசோலைகளும் CTS மூலம் தீர்விற்கு அனுப்பலாம்.</span><span> </span><span> காகிதவடிவிலான காசோலைகள் மூலம் செய்யப்படும் பாரம்பரிய தீர்வுமுறை செயல்பாட்டிலிருந்து பெருத்த அளவில் வேறுபாடு இல்லை.</span><span> </span><span> விரைவுத் தீர்வுக்கு அளிக்கப்படும் காசோலைகளும் கூட CTSமூலம் அனுப்பப்படுகின்றன.</span><span> </span><span> (விரைவுத் தீர்வு சம்பந்தமான விவரங்களுக்கு ஐயங்களும் தீர்வுகளும்(FAQ) பகுதியை பார்க்கவும்).</span><span> </span><span> காசோலை சமர்ப்பிக்கும் வங்கி மற்றும் வரையப்படும் வங்கி ஒரே வங்கியாக இருப்பதை CTS அனுமதிப்பதில்லை.</span><span> </span><span> தீர்வு மையத்தின் முதல் நிலையிலேயே அவைகள் தடுக்கப்படுகின்றன.</span></p> <p style="text-align: justify; "><span>காகிதவடிவில் இல்லாமல் பிம்பங்கள் வடிவில் காசோலைகள் அனுப்பப்படுவதால் CTSல், பூகோள எல்லைப் பிரச்சனைகள் இல்லை.</span><span> </span><span> இம்மாதிரி நன்மையைப் பெற CTS தீர்வு அமைப்பு (Grid CTS) மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</span><span> </span><span> அமைப்பு மையங்களின் கீழ் செயல்படும் தீர்வு மையங்களில் செய்யப்படும் தீர்வுகள் உள்ளூர் தீர்வின் ஒரு பகுதியாகும்.</span><span> </span><span> புதுதில்லியில் தற்போது செயல்படும் CTS விரிவாக்கி, புதுதில்லி CTS தீர்வு அமைப்பு மையங்களின் அங்கமாக செயல்பட வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</span></p> <h3><strong><span>வாடிக்கையாளர்களுக்கு நடைமுறையில் ஏதேனும் மாற்றம் உண்டா?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>இல்லை.</span><span> </span><span> வாடிக்கையாளர்கள், தற்போது உள்ளதுபோலவே சரியான மை கொண்டு எழுதி காசோலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.</span><span> </span><span> எனினும் அரசுத் துறையிலிருந்து பணம் அளிக்கப்பட்ட காசோலைகள் பெறும் வாடிக்கையாளர்கள் வெறும் பிம்பங்களை மட்டுமே பெறுவர்.</span><span> </span><span> முக்கிய அம்சங்களில் திருத்தங்கள் உள்ள </span><span> </span><span>(பின்னர் விரிவாக விளக்கப்படும்) காசோலைகள் CTS சூழலில் பரிசீலிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.</span></p> <h3><strong><span>வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு CTSன் நன்மைகள் என்ன?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>பல்வேறு நன்மைகள் உள்ளன.</span><span> </span><span> காசோலையை படம் எடுத்து அதன் பிம்பத்தை பயன்படுத்துவதால் காகித வடிவிலான காசோலைகளின் போக்குவரத்து நிறுத்தப் படுகிறது.</span><span> </span><span> காசோலைகளின் பிம்பங்கள் மின்னணு ஊடகத்தின் மூலம் பயணம் செய்வதால் காசோலைத் தீர்வுகளின் வேகம் அதிகரிக்கிறது.</span><span> </span><span> தீர்வுச் சுழற்சிகளும் பெருமளவு குறைகிறது.</span><span> </span><span> மேலும் புழக்கத்தின்போது காசோலைகள் தொலைந்து போகாமல் இருக்கும்.</span><span> </span><span> எல்லைகள் கடந்தும் பூகோள பரப்பு கடந்தும் காசோலைகளின் பிம்பங்கள் செல்கின்றன.</span><span> </span><span> வெவ்வேறு வகை பல்நோக்கு தீர்வு இடங்கள் ஒன்றாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.</span><span> </span><span> தேசிய அளவில் ஒரு சமச்சீரான முறைகளையும் நடைமுறைகளையும் ஏற்படுத்துகிறது.</span></p> <p style="text-align: justify; "><span>CTS காசோலைகளை அளிப்போருக்கும் பயன்களை அளிக்கிறது.</span><span> </span><span> காகித வடிவிலான காசோலைக்களுக்கான எதிர்காலம் வெகுவாக குறைகிறது.</span><span> </span><span> நிறுவனங்களுக்கு அவர்களது உள்ளக தேவைகளுக்கு, வங்கிகள் காசோலைகளின் பிம்பங்களைத் தருகிறது.</span><span> </span><span> </span><span> </span><span>காகித வடிவிலான உபகரணங்களில் மோசடிகளுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.</span><span> </span><span> இம்முறையில் அவை பெருமளவு குறைகின்றது.</span><span> </span><span> பிம்பங்கள் மட்டுமே செல்வதால் பணம் அளிக்கப்பட்ட காசோலைகள் திரும்பும் நேரம் வெகுவாகக் குறைகிறது.</span><span> </span><span> இதனால் ஏதேனும் திருத்தங்கள் அல்லது முறைகேடுகள் நிகழ்ந்திருந்தால் உடனுக்குடன் கண்டுபிடிக்க ஏதுவாகிறது.</span></p> <p style="text-align: justify; "><span>CTS மொத்தத்தில் ஒரு மேம்பட்ட முறைமையை அளிக்கிறது.</span><span> </span><span> காசோலை மோசடிகள், கீழ்க்கண்ட முன்னேற்றங்களுக்குப் பிறகு பெரிதும் குறைந்துள்ளது.</span><span> </span><span> பார்கோட்</span><span> </span><span> (bar-code)போன்ற பொறிக்கப்பட்ட அம்சங்கள், சின்னங்கள், பளபளக்கும் வில்லைகள், நீர்க்குறியீடுகள் ஆகிய புதிய தொழில் நுட்ப யுக்திகளைக் கொண்டு போலி/ திருத்தப்பட்ட உபகரணங்கள் எளிதாக கண்டுபிடிக்கப்படுகின்றன.</span></p> <p style="text-align: justify; "><span>CTSன் நன்மைகளை கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.</span></p> <p style="text-align: justify; "><span>• குறுகிய தீர்வு சுழற்சி<br /> • சிறந்த </span><span> </span><span>சரிபார்க்கும் மற்றும் சரிசெய்யும் நடைமுறை<br /> • பரப்பெல்லை வரைமுறை கிடையாது<br /> • வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் திறமையான செயல்பாடு உள்ளது<br /> • காகித வடிவிலான </span><span> </span><span>தீர்வு முறையில் உள்ள இடர்வரவுகள் மற்றும் செயல்முறை இடர்வரவு பெருமளவு குறைகின்றன</span></p> <h3><strong><span>ஒரு வாடிக்கையாளர் தான் வெளியிட்ட காசோலையை காகித வடிவில் பார்க்க விரும்பினால் அதற்கு வாய்ப்பு உண்டா?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>காகித வடிவிலான</span><span> </span><span> காசோலைகள் சமர்ப்பிக்கும் வங்கியிடமே இருக்கும் அவை பணம் அளிக்கும் வங்கியிடம் செல்வதில்லை.</span><span> </span><span> ஒருவேளை வாடிக்கையாளர் விருப்பப்பட்டால், வங்கிகள் சான்றளிக்கப்பட்ட காசோலை படங்களை அளிக்கலாம்.</span><span> </span><span> எனினும் வாடிக்கையாளர் கண்டிப்பாக காகித வடிவிலான</span><span> </span><span> காசோலையை பார்க்க ஆசைப்பட்டால், சமர்ப்பிக்கும் வங்கியிடம் விண்ணப்பித்து பெறவேண்டும்.</span><span> </span><span> இதற்கு கட்டணமும் செலுத்தவேண்டும்.</span><span> </span><span> சட்டபூர்வ தேவைகளுக்காக வங்கிகள் காகித வடிவில் உள்ள காசோலைகள் மற்றும் உபகரணங்களை 10 ஆண்டுகளுக்கு வைத்திருக்கவேண்டும்.</span></p> <h3 style="text-align: justify; "><strong><span>காகித வடிவிலான</span></strong><strong><span> </span></strong><strong><span> காசோலையின் தனித்தன்மை எவ்வாறு படம் பிடிக்கப் படுகிறது மற்றும் அது எவ்வாறு காசோலை படத்திற்கு மாற்றப்படுகிறது?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>இந்தியாவில் CTS பரிந்துரைக்கப்பட்ட வடிவ அளவீடுகளை வலியுறுத்துகிறது.</span><span> </span><span> இத்தகைய அளவீடுகளை பூர்த்தி செய்யாத வடிவங்கள் நிராகரிக்கப்படுகின்றன.</span><span> </span><span> வடிவங்களின் அடிப்படையில் பணம் அளிக்கப்படுவதால்,</span><span> </span><span> வடிவங்களின் தரத்தை பராமரித்திட CTS தீர்வு , சூழற்சியில் தரக்கட்டுப்பாடு மிகக் கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.</span><span> </span><span> பல்வேறு நிலைகளில், வடிவத்தின் தரம் மதிப்பீடு (Image Quality Assessment-IQA) செய்யப்படுகிறது.</span><span> </span><span> காசோலையை சமர்ப்பிக்கும் பொழுது வடிவத்தை படம் பிடிக்கும் நிலையிலேயே,</span><span> </span><span> </span><span> </span><span>வடிவ தரம் மதிப்பீடு சமர்ப்பிக்கும் வங்கியால் செய்யப்பட வேண்டும்.</span><span> </span><span> சமர்ப்பிக்கும் வங்கியின் மின்னணு கையெழுத்துகளுடன் வடிவங்கள் படம் பிடிக்கப்பட்டு, அதன்பின்பு தீர்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு, </span><span> </span><span>அதன்பின் பணம் அளிக்கும் வங்கிகளை சென்று சேரும்.</span><span> </span><span> மேலும் வடிவ தர மதிப்பீடு நுழைவாயிலிலேயே செய்யப்பட்டு, அதன் பின்னர் தீர்வு மையத்திற்கு அனுப்பப்படும்.</span><span> </span><span> பணம் அளிக்கும் வங்கிகள் ஏதேனும் காரணத்தால் வடிவத்தின் தரத்தில்</span><span> </span><span> திருப்தி அடையவில்லையென்றால், பணம் அளிக்கும் நடைமுறைக்காக காகித வடிவிலான</span><span> </span><span> உபகரணத்தைக் கேட்கலாம். மேலும் புதிய காசோலை தரம் CTS 2010 பரிந்துரைப்பது என்னவென்றால் கட்டாய மற்றும் விருப்ப பாதுகாப்பு அம்சங்கள் காசோலைகளில் உள்ளதா என அதன் தனித்தன்மையை காட்டுகிறதா என்றும் பார்க்கப்படுகிறது.</span></p> <h3><strong><span>இந்தியச் சூழலில் CTSல் காசோலைக்கான மின்பிம்ப வரையறைகள் என்னென்ன?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>காசோலைகளின் வடிவங்களை படம்பிடித்தல் என்பது பல்வேறு தொழில்நுட்ப அடிப்படையில் நடக்கின்றது.</span><span> </span><span> காசோலை மின்பிம்ப வடிவங்கள் கருப்பு மற்றும் வெள்ளை, சாம்பல் நிறம் அல்லது வண்ணமயமாக இருக்கும்.</span><span> </span><span> இவைகள் அனுகூலங்கள்</span><span> </span><span> மற்றும் பிரதிகூலங்கள் என்ற இரண்டையும் கொண்டதாக இருக்கும். கருப்பு மற்றும் வெள்ளை வடிவங்கள் வடிவ அளவில் இலகுவாகவும், ஆனால் காசோலைகளில் உள்ள நுண்ணிய அம்சங்கள் வெளிக்காட்டப்படாமலும்</span><span> </span><span> உள்ளது.</span><span> </span><span> வண்ணமயமான வடிவங்கள் மிகவும் பொருத்தமானதாக இருந்தாலும் இதற்கு அகண்ட வரிசை தேவைகலும் சேமிப்பு கொள்ளளவும் அதிகம் தேவைப்படுகிறது.</span><span> </span><span> </span><span> </span><span>சாம்பல் நிற வடிவங்கள் இடைப்பட்ட நிலையில் உள்ளன.</span><span> </span><span> இந்தியாவில் CTS சாம்பல் நிற மற்றும் கருப்பு மற்றும் வெள்ளையின் கலவையான வடிவங்களில் இருக்கும்.</span><span> </span><span> ஒவ்வொரு காசோலைக்கும் மூன்று விதமான வடிவங்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். – முன்பகுதி சாம்பல் நிறம், முன்பகுதி கருப்பு மற்றும் வெள்ளை மற்றும் பின்பகுதி கருப்பு மற்றும் வெள்ளை.</span></p> <h3><strong><span>காசோலைகளின் மின்னணு பிம்பங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>ஊடுகதிர்படக்கருவி மூலம் காசோலைகளின் வடிவங்கள் படம் எடுக்கப் படுகின்றன.</span><span> </span><span> ஊடுகதிர்பட கருவிகள், புகைப்பட நகல் எடுக்கும் கருவிகள் போல், ஆவணத்தின் மீது குறுகிய வழியில் ஒளியை படர விடுகின்றன.</span><span> </span><span> சிறிய அளவிலான நுண்ணறி கருவிகள் ஒளிவீச்சுப்பாதையில் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் வரும் பிரதிபலிப்பை அளிக்கின்றன.</span><span> </span><span> ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் வரும் பிரதிபலிப்பு அளவீடுகள் பிக்ஸல்(pixel) என்று அழைக்கப்படும்.</span><span> </span><span> வடிவங்கள் கருப்பு வெள்ளை, சாம்பல் அல்லது வண்ணங்கள் அடிப்படையில் பிக்ஸல்கள் மாற்றப்படும்.</span><span> </span><span> சாம்பல்நிற பிக்ஸல்கள் பெற, பிக்ஸல்கள் சாம்பல் நிறத்தில் உள்ளவை போன்று ஒன்றாக அடுக்கப்பட்டு கருப்பு வெள்ளைக்கு இடையே பொருத்தப்படும்.</span><span> </span><span> மூல ஆவணத்தின் மொத்த வடிவமும், சாம்பல் நிற, வெளிர் நிறத்திலோ, அடர் நிறத்திலோ அந்தந்த வண்ணத்தைப் பொறுத்து அமைந்துவிடும்.</span><span> </span><span> கருப்பு மற்றும் வெள்ளை வடிவங்களைப் பொறுத்தவரை, இரண்டு வண்ணங்களில் வேறுபடுத்திக் காட்டும்.</span><span> </span><span> கருப்பு வெள்ளை வடிவம் இரத்டை நிற பிம்ப வடிவம் என்றும் அழைக்கப்படும்.</span></p> <h3><strong><span>இணைப்பு வலைமூலம் எவ்வாறு வடிவம் மற்றும் தகவல் அனுப்பப்படுகிறது?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>பொது திறவு கட்டமைப்பு(Public Key Infrastructure - PKI) பயன்படுத்தி, பாதுகாப்பு, உண்மைத்தன்மை மற்றும் புள்ளி விவரத்தின் நம்பகத்தன்மை மற்றும் வடிவம் ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன.</span><span> </span><span> அதனால் பணம் கொடுக்கும் வங்கி(paying bank)யிலிருந்து பணம் பெறும் வங்கி(payee bank)க்கு பாதுகாப்பாக இவை அனுப்பி வைக்கப்படும்.</span><span> </span><span> தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000த்தின் தேவைகளுக்கு கட்டுப்பட்டதாக, CTS உள்ளது.</span><span> </span><span> தோற்றுவிக்கும் இடத்திலேயே</span><span> </span><span> தகவல்கள் மற்றும் வடிவங்களில் கையெழுத்திடவேண்டுமென்பது சமர்ப்பிக்கும் வங்கிக்கு கட்டாயமாகிறது.</span><span> </span><span> சமர்ப்பிக்கும் வங்கி, தீர்வு மையம், பெறும்வங்கி ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்த முறைமைக்கும் PKI பயன்படுகிறது.</span><span> </span><span> PKI தர அளவுகள் பொருத்தமான இந்திய சட்டங்களுக்கு இணக்கமாக உள்ளது.</span><span> </span><span> மற்றும் வங்கி தொழில் நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டு பயிலகத்தின் (Institute for Development and Research in Banking Technology – IDRBT) நடைமுறைகளுக்கும் ஏற்றவகையில் உள்ளது.</span></p> <h3><strong><span>காசோலை தரமயமாக்குதல் மற்றும் CTS 2010 தரம் என்றால் என்ன?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>காசோலை தாள்களின் அளவு, MICR பட்டை, காகிதத்தின் தரம் போன்றவற்றில் நல்ல தரமயமாக்கலை ஏற்படுத்துவது காசோலை தீர்வு முறையில் இயந்திர மயமாக்கலை அமல்படுத்த உதவுகிறது.</span><span> </span><span> காலப்போக்கில் வங்கிகள் புதிய வடிவங்கள் கொண்ட காசோலை வகைகளை அறிமுகப்படுத்தின.</span><span> </span><span> புதிய பாதுகாப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்தின. இதன்மூலம் காசோலையை தவறாகப் பயன்படுத்துதல், மோசடி செய்தல் மற்றும் திருத்தங்கள் செய்தல் போன்ற சம்பவங்கள் குறைகின்றன.</span><span> </span><span> நகரங்களுக்கிடையே வளர்ந்துவரும் புழக்கம் உடனுக்குடன் பணம் தரப்படும் காசோலைகள், எந்தக்கிளையிலும் பணமாக்கும் காசோலைகள், CTSன் அறிமுகம், விரைவு தீர்வின் அதிகரிக்கும் பிரபல்யம் போன்றவைகள் சில குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள் காசோலைகளுக்கு பரிந்துரைக்கப்படக்காரணமாயின.</span><span> </span><span> ரிசர்வ் வங்கியால் ஒரு செயற்குழு ஏற்படுத்தப்பட்டு, காசோலைகள் தரமயமாக்கலை மேலும் மேம்படுத்தி அதன்மூலம் காசோலை தீர்வு முறையில் சிறப்புத்தன்மையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.</span><span> </span><span> அதன்படி சில அளவுகோல்களை காசோலைகள் தரமயமாக்கலுக்காக வங்கிகள் நாடுமுழுமைக்கும் பரிந்துரைத்துள்ளன.</span><span> </span><span> அவை காகிதத்தின் தரம், நீர்க்குறியீடு, வங்கியின் முத்திரையை கண்ணுக்குத் தெரியாத மையிலும் மற்றும் காசோலைகளை கள நிலை நிறுத்தலுக்கான தரமயமாக்கலும் ஆகும்.</span><span> </span><span> இதனோடு சில விரும்பத்தக்க அம்சங்களும் தேவை மற்றும் இடர்வரவு எதிர்பார்ப்பின் அடிப்படையில் சேர்க்கப் படுகின்றன. குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள் வெளியிடும் காசோலைகளுக்கும் சமச்சீரான தன்மையை அளிப்பதோடு, காசோலைகளை பரிசீலித்திடவும்/ அறிந்திடவும் சமர்ப்பிக்கும் வங்கிகளுக்கு உதவுகிறது.</span><span> </span><span> பாதுகாப்பு அம்சங்களின் சீரான ஒருமுகத் தன்மை, காசோலை மோசடிகளுக்குத் தடுப்பாக அமைகிறது.</span><span> </span><span> குறைந்தபட்ச அளவீட்டு பரிந்துரைகள் மொத்தமாக ‘CTS 2010 தரம்’ என்று அழைக்கப்பட்டது.</span><span> </span><span> இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் இந்திய தேசிய பணம் அளிப்பு கழகம் (National Payment Corporation of India –NPCI) ஆகியவை இணைந்து புதிய தரத்தின் அமலாக்க விஷயத்தில் வங்கிகளுக்கு உதவுகின்றன.</span></p> <h3><strong><span>காசோலைபடிவங்களில் மாற்றங்கள்/திருத்தங்கள் குறித்த பரிந்துரைகள் யாவை?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் காசோலை மோசடி விஷயத்தில் பாதுகாப்பு தரும்விதமாக, காசோலைகளில் மாற்றங்கள்/திருத்தங்களைத் தடுப்பது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</span><span> </span><span> காசோலைகளில் (தேவைப்பட்டால் மதிப்பளிக்கும் தேதிதவிர) எந்தவித மாற்றங்களையும்/திருத்தங்களையும் செய்யக் கூடாது.</span><span> </span><span> பணம் அளிக்கப்படுபவரின் பெயரில் மாற்றம் இருந்தாலோ, எண்களில் எழுதப்படும் தொகையில் மாற்றம் இருந்தாலோ, வாடிக்கையாளர்கள் புதிய காசோலைத்தாள்களை </span><span> </span><span>பயன்படுத்த வேண்டும்.</span><span> </span><span> இதனால் வங்கிகள் மோசடியான திருத்தங்களைக் கண்டுபிடித்துத் தடுக்க உதவுகிறது.</span><span> </span><span> 2010 டிசம்பர் 1லிருந்து CTS தீர்வுமுறைக்கு உள்ளாகும் காசோலைகளுக்கு மேற்கண்ட பாதுகாப்பு உண்டு.</span><span> </span><span> எனினும் தற்போது மற்ற முறைகளில் தீர்வு செய்யப்படும் காசோலைகளுக்கு இது பொருந்தாது.</span></p> <h3><strong><span>மோசடிகளைத் தவிர்க்க வங்கிகள்/வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>வங்கிகள்/வாடிக்கையாளர்கள் CTS2010 காசோலைகளை பயன்படுத்த வேண்டும். இது வடிவத்தில் எளிமையானதாகவும் அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகவும்</span><span> </span><span> உள்ளது. CTS 2010 தரத்தை பூர்த்தி செய்யும் காசோலை படிவங்களைக் கொடுக்குமாறு வாடிக்கையாளர்கள் வங்கிகளைக் கேட்க வேண்டும்.</span><span> </span><span> நல்ல தரமான நன்கு தெரியும் மை கொண்டு வாடிக்கையாளர்கள் காசோலைகளில் எழுதவேண்டும்.</span><span> </span><span> இதனால் தேதி, பணம் பெறுபவரின் பெயர், தொகை மற்றும் கையெழுத்து</span><span> </span><span> இவற்றில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.</span><span> </span><span> ரப்பர் ஸ்டாம்புகள் பயன்படுத்துவதால் அடிப்படையான மேற்கண்ட அம்சங்கள் மறைக்கப் படக்கூடாது.</span><span> </span><span> ஊடுகதிர் பட முறையில் ஒரு காசோலையின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் படம் பிடிக்கப்படுவதை வங்கிகளும்/ வாடிக்கையாளர்களும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.</span></p> <h3><strong><span>எந்தெந்த விதங்களில் CTSல் வங்கிகள் பங்கேற்கலாம்?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>CTSல் வங்கிகள் இரண்டு விதங்களில் பங்கேற்கலாம்.</span></p> <p style="text-align: justify; "><span><span>அ.</span></span><span><span> </span></span><span><span> நேரடி அங்கத்தினர்:</span></span><span> </span><span> தீர்வு செய்யும் வங்கிகளிடம் தீர்வு செய்யும் கணக்குகள் கொண்ட வங்கிகள், CTSல் பங்குகொள்ள கட்டமைப்புகள் இருக்கும்பட்சத்தில் நேரடியாக அங்கத்தினராக பங்கு கொள்ளலாம்.</span></p> <p style="text-align: justify; "><span><span>ஆ. நேரடியாக அல்லாத/துணை அங்கத்தினர்:</span></span><span><span> </span></span><span> </span><span>வங்கிகள் சில நேரடி அங்கத்தினர்களின் துணை அங்கத்தினர்களாக CTS கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி தீர்வு சேவைகளைப் பெறலாம்.</span><span> </span><span> இத்தகு</span><span> </span><span> துணை அங்கத்தினர் வங்கிகளுக்கு தீர்வுக்கணக்கு இருக்குமானால், அந்த கணக்கின் மூலம் தீர்வு செய்யப்படும் அல்லது நேரடி அங்கத்தினரின் கணக்கு மூலமாகவும் தீர்வு செய்யப்படும்.</span></p> <h3><strong><span>CTSல் பங்குபெறும் வங்கிகளுக்கான கட்டமைப்புத் தேவைகள் எல்லா வங்கிகளுக்கு ஒரே மாதிரி இருக்குமா?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>CTSஐ நடைமுறைப்படுத்த தேவையான வன்பொருள், மென்பொருள் கட்டமைப்பு அவசியமாகும்.</span><span> </span><span> அது வங்கி தீர்வு மையத்துடன் தொடர்பு கொள்ளத் தேவையான வசதியை அளிக்கும்.</span><span> </span><span> இது CTSல் வங்கி பங்கேற்கத் தேவையான கட்டமைப்பாகும்.</span><span> </span><span> இதற்கான தொடர்பு மென்பொருள் வசதியை பயன்பாட்டு முறைமை, தகவல் அடித்தளம், மூன்றாம் பயன்பாட்டுக்கான மென்பொருள் RBI அங்கத்தினர் வங்கிகளுக்கு அளிக்கிறது.</span></p> <p style="text-align: justify; "><span>இவற்றோடு அனைத்தையும் படம்பிடிக்கத் தேவையான மென்பொருளை வங்கிகள் தாங்களே வாங்கி அமல்படுத்திட வேண்டும்.</span></p> <p style="text-align: justify; "><span>ஒவ்வொரு வங்கியின் பட்டைத் தேவையளவு என்பது பலவிஷயங்களைப் பொறுத்து கணக்கெடுக்கப்படும் காசோலைகளின் போக்குவரத்து அளவு, மின்னணு பிம்பத்தின் சராசரி வடிவ அளவு, தொடர்பு வசதிகளின் திறன் ஆகிய பலவற்றைப் பொறுத்து ஒவ்வொரு வங்கியின் பட்டைத் தேவையளவு தீர்மானிக்கப்படும்.</span></p> <h3><strong><span>மேலும் இது குறித்து விளக்கங்கள் Applicant தேவைப்பட்டால் வழிகாட்டுதலுக்கு யாரை அணுகலாம்?</span></strong><span></span></h3> <p style="text-align: justify; "><span>துணைப் பொதுமேலாளர், தேசிய தீர்வு மையம், இந்திய ரிசர்வ் வங்கி, 7வது மாடி, கட்டிடம்1, ஜீவன் பாரதி கட்டிடம், கன்னாட் சதுக்கம், புதுதில்லி 110 001.</span></p> <p style="text-align: justify; "><strong>ஆதாரம் : </strong>இந்திய ரிசர்வ் வங்கி</p>