கல்லணையின் நிரந்தர அஞ்சல் முத்திரை வெளியீடு கல்லணை அணையின் வரலாற்று சிறப்பைப் பிரதிபலிக்கும் நிரந்தர அஞ்சல் முத்திரையினை (Permanent Pictorial Cancellation) மத்திய மண்டல அஞ்சல் துறை, தஞ்சாவூர் மாவட்டம், தோகூர் துணை அஞ்சலகத்தில் 15.08.2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கலைமிகு நிரந்தர அஞ்சல் முத்திரை, உலகின் பழமையான மற்றும் இன்னும் செயல்பாட்டிலுள்ள நீர்ப்பாசன அணைகளில் ஒன்றாகக் கருதப்படும் கல்லணையின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டில், புகழ்பெற்ற சோழ மன்னன் கரிகால சோழன் காவிரி நதியின் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தவும், வளமான காவிரி டெல்டா பகுதிக்கு நீர்ப்பாசனத்தை வழங்கவும் கல்லணையை கட்டியுள்ளார். முழுக்க முழுக்க பெரிய கற்கள் கொண்டு கட்டப்பட்ட இந்த அணை, சுமார் 329 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்டது. காலத்தின் தேவைக்கு ஏற்ப சில நவீனப்படுத்தல்கள் மற்றும் முன்னேற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், இன்று வரை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அதே வலிமையுடன் காவிரி நதியின் ஓட்டத்தை வழிநடத்தி வருகிறது. கல்லணை, தமிழரின் பொறியியல் திறமை, நீர்ப்பாசன அறிவு மற்றும் நிலைத்த வள மேலாண்மையின் சான்றாக விளங்குகிறது. சோழர்கள், விவசாயத்தையே பொருளாதார அடித்தளமாகக் கொண்டவர்கள் என்பதால், தங்கள் ஆட்சிக் காலத்தில் நீர்ப்பாசனத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். கல்லணையின் மூலம் காவிரி டெல்டா பிரதேசம் ‘தென்னிந்தியாவின் அரிசிக் களஞ்சியம்’ எனப் போற்றப்பட்டது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்