<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">மத்திய அரசு ஊழியர்கள் வீடு கட்ட அல்லது பிளாட் வாங்க HBA (House Building Advance) என்ற திட்டத்தின்கீழ் முன்பணம் பெறும் திட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்து அரசு அறிவித்துள்ளது.</p> <p style="text-align: justify;">அதாவது, வீடு, பிளாட் ஆகியவற்றை வாங்க அல்லது வீடு கட்ட அளிக்கப்படும் முன் பணத்தின் அளவு அதிகபட்சம் ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகையை 20 ஆண்டுகளில் சுலப தவணை முறையில் திரும்ப செலுத்தலாம்.</p> <h3 style="text-align: justify;">வட்டி விகிதம்</h3> <p style="text-align: justify;">முன்னர் அளிக்கப்பட்ட முன் பணத்திற்கு 6 முதல் 9.5 சதவிகிதம் வரை கணக்கிடப்பட்ட வட்டி, இப்போது 8.5 சதவிகித அளவுக்கு தனி வட்டியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை பொறுத்து, 25 லட்சம் ரூபாய் வரை முன் பணம் பெற இயலும்.</p> <p style="text-align: justify;">வங்கியில் பெறும் வீட்டு வசதி கடனை விட, இத்திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிக்க இயலும். அதாவது, 8.35 சதவீத கூட்டு வட்டியில், ரூ.25 லட்சம் வீட்டு வசதி கடன் பெறுபவர், 20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும்போது வட்டி மற்றும் அசல் ஆகிய கணக்குகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட ரூ.51 லட்சத்துக்கும் அதிகமாக செலுத்த வேண்டியதாக இருக்கும்.</p> <h3 style="text-align: justify;">தனி வட்டி</h3> <p style="text-align: justify;">இப்போதைய திட்டமான எச்.பி.ஏ திட்டத்தில் 8.5 சதவீத தனி வட்டி அடிப்படையில் முன்பணம் பெற்று 20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும்போது, வட்டி மற்றும் அசல் ஆகியவற்றின் அடிப்படையில் கிட்டத்தட்ட ரூ.41 லட்சம் ரூபாய் அளவுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கும். மேற்கண்ட கணக்குகள் அடிப்படையில் ரூ.10 லட்சத்துக்கும் மேலாக சேமிக்க இயலும் என்பது கவனிக்கத்தக்கது.</p> <h3 style="text-align: justify;"><span style="text-align: justify;">மத்திய அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்</span></h3> <p style="text-align: justify;">குறிப்பாக, மத்திய அரசில் பணிபுரியும் கணவன், மனைவி ஆகிய இருவரில் ஒருவர் மட்டும் வீடு வாங்க முன்பணம் பெற இயலும் என்ற முறை மாற்றப்பட்டு, இருவரும் இணைந்து அல்லது தனிப்பட்ட முறையில் முன் பணம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, வீட்டை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு முன்பணம் ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, வீடு வாங்குவதற்கான வரம்பு தொகையும் ரூ.1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பெற்ற வீட்டு வசதி கடனை எச்.பி.ஏ திட்டத்திற்கு மாற்றக்கூடிய வசதியும் இருக்கிறது. அரசின் மேற்கண்ட திட்டம் கட்டுமானத்துறைக்கு சாதகமானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் : </strong>முற்றம் மாத இதழ்</p> </div>