<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">நோக்கம்</h3> <p style="text-align: justify;">வங்கியில் கடன் பெற்று தனி வீடு கட்ட வேண்டும் அல்லது அடுக்குமாடி வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நடுத்தர மக்களின் நிரந்தர லட்சியமாக உள்ளது. மாதாந்திர சம்பளம் பெறுபவர்கள் தங்கள் வீட்டுக்கடனை சரியான முறையில் பயன்படுத்தி, கடன் தொகைக்கு செலுத்தும் வட்டியை குறைப்பதற்கான வழியை நிதி ஆலோசகர்கள் காட்டுகிறார்கள். வீட்டுக்கடன் பெற்றவர்கள் செலுத்தும் வட்டிக்கு வரிச்சலுகைகள் கிடைப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு அவர்களது நிறுவனங்களுக்கேற்ப வீட்டு வாடகை ‘அலவன்ஸ்’ (ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ்) கிடைக்கும். வங்கியில் பெற்ற வீட்டுக்கடனுடன் வீட்டு வாடகை அலவன்சையும் இணைக்கும்போது கூடுதலான நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்று நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள்.</p> <h3 style="text-align: justify;">வேறு பிரிவுகள்</h3> <p style="text-align: justify;">எச்.ஆர்.ஏ எனப்படும் வீட்டு வாடகை ‘அலவன்ஸ்’ மற்றும் வீட்டுக்கடன் ஆகியவை வருமான வரி சட்டத்தின் கீழ் இரு வேறு பிரிவுகளில் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. வீட்டு வாடகை ‘அலவன்சுக்கான’ வரிச்சலுகை பிரிவு 10 (13ஏ), விதி 2 (ஏ) –விற்கு கீழ் வருகிறது. வீட்டுக்கடனுக்கான வரிச்சலுகை பிரிவு 80 (சி) (அசலை திருப்பி செலுத்துதல்) மற்றும் பிரிவு 24–க்கு (வீட்டுக்கடனுக்கான வட்டி செலுத்துதல்) கீழ் வருகிறது. வீட்டு வாடகை செலுத்துபவர்கள், வருமானவரிச் சட்டம் 10 (13ஏ) பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெறுகின்றனர். வீட்டு வாடகை ‘அலவன்ஸ்’ என்பது ஒருவரால் செலுத்தப்பட்ட வீட்டு வாடகை, சம்பளம் மற்றும் குடியிருக்கும் இடம் ஆகியவற்றை பொறுத்து நிர்ணயிக்கப்படும்.</p> <h3 style="text-align: justify;">சலுகை பெறும் முறைகள்</h3> <ol> <li style="text-align: justify;">எச்.ஆர்.ஏ எனப்படும் வீட்டு வாடகை ‘அலவன்ஸ்’ பெறுபவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கான வாடகை ஒப்பந்தத்தை அவசியம் வைத்திருக்கவேண்டும்.</li> <li style="text-align: justify;">வங்கி கடன் பெற்று கட்டப்பட்ட வீட்டிலேயே வசித்து வருபவர்களுக்கு எச்.ஆர்.ஏ மூலம் சலுகைகள் பெற இயலாது. ஆனால் அவர்களுக்கு பிரிவு 80 (சி)–யின் கீழ் கடனுக்கான அசல் செலுத்தப்படுவது, பிரிவு 24–ன் கீழ் கடனுக்கான வட்டியை கட்டுவது ஆகியவற்றின் வாயிலாக வரிச்சலுகைகள் பெறலாம்.</li> <li style="text-align: justify;">வங்கி கடன் பெற்று சொந்த ஊரில் வீடு வாங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், வேறொரு ஊரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில் சலுகைகள் உண்டு. அவருக்கு வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கான வரிச்சலுகையுடன், வீட்டு வாடகைக்கான வரிச்சலுகையும் கிடைக்கும்.</li> <li style="text-align: justify;">குடியிருக்கும் ஊரில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு வங்கி கடன் பெற்றிருந்தாலும், வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில், எச்.ஆர்.ஏ மற்றும் வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றுக்கு வரிச்சலுகை கிடைக்கும்.</li> <li style="text-align: justify;">வங்கி கடன் பெற்று கட்டப்படும் வீட்டு பணிகள் முடிவடையவில்லை எனும்பட்சத்தில் வீட்டின் கட்டுமானம் முடியும் வரையில் கடனுக்கான அசலுக்கு வரிச்சலுகை பெறலாம்.</li> <li style="text-align: justify;">வீட்டின் கட்டுமானம் முடிவடைந்திருந்தாலும் பல்வேறு காரணங்களால் அதில் குடியேற முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டு விட்டாலும், குடியிருக்கும் வாடகை வீட்டுக்கு மேற்கண்ட இரண்டு வகை வரிச்சலுகைகளும் கிடைக்கும்.</li> <li style="text-align: justify;">ஒருவர் கட்டிய சொந்த வீட்டில் இன்னொருவரை வாடகைக்கு அமர்த்திவிட்டு, வாடகை வீட்டில் அவர் குடியிருக்கும் பட்சத்தில் எச்.ஆர்ஏ மற்றும் வீட்டுக்கடனுக்கான பயன்களை பெறலாம். ஆனால், சொந்த வீட்டுக்காக அவர் பெறும் வாடகை ஒரு வருமானமாக கருதப்படுவதால் அதற்கான வரியை செலுத்த வேண்டியதாக இருக்கும்.</li> </ol> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் : </strong>சென்னை நலத்தகவல்கள் காலாண்டு இதழ்</p> </div>