<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify; ">சொந்த வீடு வாங்க நினைக்கும் நடுத்தர மக்கள் பலருக்கும் பலரும் வீட்டுக் கடனையே நம்பியிருப் பார்கள். வங்கிகளும் இப்போது தாரளமாகக் கடன் கொடுக்க முன் வருகின்றன.</p> <h3><span>வங்கிக் கடனை வாங்குவதில் கவனிக்கத்தக்க விஷயங்கள்</span></h3> <ul> <li style="text-align: justify; "><span>மற்ற வங்கிக் கடனைப் போல் அல்லாமல் வீட்டுக் கடனை கூடுதல் கால அவகாசத்தில திருப்பிச் செலுத்த முடியும். அதாவது பொதுவாக 5 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 30 ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தக்கூடிய வசதி இருக்கிறது. கடனைத் திருப்பிக் கட்டுவதற்குப் போதிய அவகாசம் கொடுத்தாலும், சில நிபந்தனைகள் உண்டு.</span></li> <li style="text-align: justify; "><span>கடன் பெறும் நபர், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் இ.எம்.ஐ. முடிந்துவிடுமா என்பதை வங்கிகள் முக்கியமாகப் பார்க்கின்றன. ஒருவேளை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான வருமானம் இருக்குமேயானால், அதிகபட்சம் 70 வயது வரைகூடக் கடனை அடைக்க அவகாசம் தரப்படுகிறது.</span></li> <li style="text-align: justify; "><span>ஆனால் கடன் பெறும் நபர், 60 வயதைக் கடந்த நபர்கள் வீட்டுக் கடன் வேண்டி விண்ணப்பிக்கும்போது அவர்களுடைய கடன் அடைக்கும் கால அவகாசம் கூடுதலாகத் தர வங்கிகள் பொதுவாக முன் வருவதில்லை. இல்லையெனில் அவருடைய வாரிசுகள் இந்தக் கடனுக்கு எழுத்துபூர்வமாக உத்திரவாதம் கொடுக்க முன்வந்தால் 60 வயதைக் கடந்தவர்களுக்கு வங்கிகள் கால அவகாசம் அளிக்கும். அல்லது கோ-ஃபாலோயர் எனப்படும் கடன்தாரருக்கு இணையாகப் பொறுப்பை ஏற்கும் நபர், அதற்கான உத்திரவாதத்தை வங்கிக்குக் கொடுக்க வேண்டும்.</span></li> <li style="text-align: justify; "><span>கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான அளவு நமது வருமானம் இருக்கிறதா என்பதையும் வங்கிகள் பரிசீலிக்கின்றன. நமது மாதச் சம்பளத்தில் அல்லது மாத வருமானத்தில் இருந்து உத்தேச வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ., பி.எஃப். உள்ளிட்ட அனைத்து வகை பிடித்தங்களும் போக, நாம் நமது சம்பளத்தில் குறைந்தபட்சம் 45 சதவீதமாவது குடும்பச் செலவுகளுக்காக எடுத்துச் செல்கிறோமா என்பதை உறுதி செய்த பிறகே வீட்டுக் கடன் கொடுக்கப்படுகிறது. காரணம், இ.எம்.ஐ. கட்டுவதால் நமது அன்றாட குடும்பச் செலவுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது, குடும்பச் செலவுக்குக் கடன் வாங்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதுதான்.</span></li> </ul> <h3><span>வீட்டுக் கடன் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்</span></h3> <ol> <li style="text-align: justify; "><span>பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்</span></li> <li style="text-align: justify; "><span>விண்ணப்பதாரரின் ஒளிப்படம்</span></li> <li style="text-align: justify; "><span>ஒளிப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று</span></li> <li style="text-align: justify; "><span>முகவரிச் சான்று</span></li> <li style="text-align: justify; "><span>வருமானச் சான்று</span></li> <li style="text-align: justify; "><span>மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்)</span></li> <li style="text-align: justify; "><span>தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்)</span></li> <li style="text-align: justify; "><span>13 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி)</span></li> <li style="text-align: justify; "><span>விற்பனைப் பத்திரத்தின் நகல்</span></li> <li style="text-align: justify; "><span>சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்)</span></li> <li style="text-align: justify; "><span>உரிய அதிகாரியிடன் (சி.எம்.டி.ஏ அல்லது டிடிசிபி அதிகாரிகளிடம்) பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல்.</span></li> <li style="text-align: justify; "><span>கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்)</span></li> </ol> <p style="text-align: justify; "><span>இவற்றை வங்கிகளில் ஒரே நேரத்தில் தாக்கல் செய்துவிட்டால், வங்கியில் கடன் வாங்க ஆகும் காலத் தாமதத்தை நிச்சயமாகத் தவிர்க்கலாம். கடனை விரைவாக வாங்கி வீட்டைக் கட்டி முடிக்கலாம்.</span></p> <p style="text-align: center; "><span><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/e-governance/baabafba9bc1bb3bcdbb3-b86ba4bbebb0b99bcdb95bb3bcd/loan.jpg" /></span></p> <p style="text-align: justify; "><span>ஆதாரம் : தி-இந்து தமிழ் நாளிதழ்</span></p> </div>