<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify; ">வாக்காளர் தகவல்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீடு வீடாக வாக்குச்சாவடி அதிகாரிகள் வருகின்றனர் என்றும் வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்</p> <h3 style="text-align: justify; ">வீடு வீடாக வருகை</h3> <p style="text-align: justify; ">வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் பிழையில்லாமல் இருப்பதற்காக 3-ந்தேதியில் இருந்து தேசிய அளவில் என்.இ.ஆர்.பி.ஏ.பி. என்ற திட்டத்தை இந்திய தேர்தல் கமிஷன் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின்படி, வாக்காளர்களின் ஆதார் எண், தொலைபேசி, செல்போன் எண்கள், இ-மெயில் முகவரி ஆகியவை பெறப்பட்டு, வாக்காளர்களின் அடையாள விவரங்களுடன் சேர்க்கப்படும்.</p> <p style="text-align: justify; ">இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு வீட்டுக்கும் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் வருகைதர உள்ளனர். 25-ந்தேதியில் (நேற்று) இருந்து வரும் ஏப்ரல் 6-ந்தேதிவரை வீடுகளுக்கு வந்து அந்த விவரங்களை சேகரிப்பார்கள்.</p> <h3 style="text-align: justify; ">பொதுசேவை மையங்கள்</h3> <p style="text-align: justify; ">அடுத்ததாக, ஏப்ரல் 12, 26 மற்றும் மே 10, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடத்தப்படவுள்ளன. மேலும் ஏப்ரல் 13-ந்தேதியில் இருந்து மே 31-ந்தேதி வரைக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி அதிகாரிகளிடம், தாலுகா அலுவலகம் போன்ற குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்களில், வாரத்தில் இரண்டு நாட்கள் பிற்பகலுக்கு மேல் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்கலாம்.</p> <p style="text-align: justify; ">வாக்குச்சாவடி அதிகாரிகளை நேரில் சந்திக்க முடியாதவர்கள், சிறப்பு முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் நடத்தப்படும் பொது சேவை மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட 1,383 கம்ப்யூட்டர் மையங்களுக்குச் சென்றாலும், இதற்கான ஆன்லைன் சேவைகளை பெறுவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.</p> <p style="text-align: justify; ">மேலும், தமிழகத்தில் 254 தாலுகா அலுவலகங்களில் தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் பல மையங்கள் தொடங்கப்படவுள்ளன. அவற்றையும் வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக இரண்டு ‘‘கவுண்ட்டர்’’ ஒதுக்கப்பட்டிருக்கும்.</p> <h3 style="text-align: justify; ">இ.ஐ.டி. எண்</h3> <p style="text-align: justify; ">இந்த பொது சேவை மையங்கள், கம்ப்யூட்டர் மையங்களில் ரூ.10 கொடுத்து விண்ணப்பபாரங்களை வாங்க வேண்டும். அச்சிட்ட நகலைப் பெற ரூ.3-ம், இணையதளத்தில் விவரங்களைத் தேடும் சேவைக்காக ரூ.2-ம், புகார் பதிவுக்காக ரூ.10-ம் கொடுக்க வேண்டும்.</p> <p style="text-align: justify; ">ஆதார் எண்ணுக்காக விண்ணப்பிக்கும் வாக்காளர்களுக்கு இ.ஐ.டி. என்ற ‘‘என்ரோல்மெண்ட் ஐடெண்டிட்டி நம்பர்’’ தரப்படும். அந்த நம்பரை வாக்காளர்கள் கொடுக்கலாம். பொதுசேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலம், அவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்த தகவலும், அதன் தொடர்புடைய தகவல்களும் அனுப்பப்படும்.</p> <h3 style="text-align: justify; ">வாய்ப்பை விடாதீர்கள்</h3> <p style="text-align: justify; ">இவை மட்டுமல்லாமல் தேவையான தகவல்களை தேர்தல் கமிஷனுக்கு அளிப்பதற்கு வாக்காளர்களுக்கு வெவ்வேறு வழிகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. அதன்படி, இந்திய தேர்தல் கமிஷனின் இணையதளத்துக்குச் சென்று என்.வி.எஸ்.பி. என்ற சேவையைப் பெறலாம்.</p> <p style="text-align: justify; ">51969 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். கொடுக்கலாம். இ-மெயிலுக்கு அனுப்பலாம். மொபைல் ஆப் என்ற சேவையை செல்போனில் டவுண்லோடு செய்துகொண்டு அதை பயன்படுத்தலாம். 1950, 1077 என்ற இலவச எண்களுக்கு போன் செய்யலாம்.</p> <p style="text-align: justify; ">இப்படி ஏதாவது ஒரு சேவையை பயன்படுத்தி, அனைத்து விவரங்களையும் சரிப்படுத்திக்கொள்ள வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடப்படுகிறது. இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்.</p> <p style="text-align: justify; ">இந்திய தேர்தல் கமிஷனின் என்.இ.ஆர்.பி.ஏ.பி. திட்டத்தை செயல்படுத்துவதை கண்காணிப்பதற்காக 3 மாவட்டங்களுக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிறப்புப் பார்வையாளராக நியமிக்கப்படுகிறார்.</p> <p style="text-align: justify; "><strong>ஆதாரம் : </strong>மாநில தலைமைத் தேர்தல் ஆணையம்</p> </div>