சென்னை ஐஐடி வளாகத்தை 2026 ஜனவரி 2 முதல் 4-ம் தேதி வரை பார்வையிடலாம் சென்னை ஐஐடி 2026 ஜனவரி 2 முதல் 4-ம் தேதி வரை தமது கல்வி நிறுவனத்தை பொதுமக்கள் பார்வையிட வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இக்கல்வி நிறுவனம் தமது ஆராய்ச்சி ஆய்வகங்கள், புதுமை கண்டுபிடிப்பு மையங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிட அனுமதித்து, ஐஐடி சூழலின் நேரடி அனுபவத்தைப் பெறும் தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. சென்னை ஐஐடி-ல் நடைபெற்று வரும் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பு செயல்பாடுகளை அறிந்து கொள்ள ஆர்வமுடைய பள்ளி - கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை வல்லுநர்கள், பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் 2025 டிசம்பர் 5-ம் தேதிக்குள் https://shaastra.org/open-house என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ள சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, அனைவருக்கும் சென்னை ஐஐடி என்ற முக்கிய நோக்கத்துடன் தமது கல்வி நிறுவனம் திறந்தவெளி அரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் பார்வையிட்டதாகவும், இதனை கருத்தில் கொண்டு 2026-ம் ஆண்டு நிகழ்வைப் பார்வையிட வருமாறு நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்கள், ஆசிரியர்கள் தலைமையிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், நேரடி செயல் விளக்கங்கள். கண்டுபிடிப்புகள் அடங்கிய சுமார் 80 கண்காட்சி அரங்குகள் இடம்பெறுகின்றன. கல்வி நிறுவனத்தின் 18 துறைகளை உள்ளடக்கிய 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 கல்வி நிறுவன ஆராய்ச்சி மையங்கள், 15 உயர் சிறப்பு மையங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களைக் காண முடியும். இந்நிகழ்வில் 95,000-க்கும் மேற்பட்ட பதிவுதாரர்கள், 60,000 பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்