<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;"><span style="text-align: justify;">கல்வி கடன் பெறும் வழிகளைப் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.</span></p> <h3 style="text-align: justify;"><span style="text-align: justify;">வழிமுறைகள்</span></h3> <p style="text-align: justify;">கல்வியே அழியாத செல்வம் என்பது தமிழில் ஒரு புகழ் பெற்ற முதுமொழி. ஆனால், நவீன காலத்தில் அந்த கல்வி செல்வத்தை அடைய நிறைய செல்வத்தை நாம் இழக்க வேண்டியுள்ளது.</p> <p style="text-align: justify;">வசதியான வாழ்வுக்கும், நல்ல பணி வாய்ப்பை பெறுவதற்கும், தரமான உயர்கல்வி என்பது மிகவும் முக்கியம். ஆனால், அதைப் பெறுவதற்கு ஒருவர் அதிகம் செலவு செய்ய வேண்டுமென்பதால், வங்கிக் கடனை நோக்கி பலரும் செல்கின்றனர்.</p> <p style="text-align: justify;">இந்தியாவை பொறுத்த வரை, புரபஷனல் படிப்புகள் அனைத்திற்கும் கல்வி கடன் பெறலாம். ஆனால், பல மாணவர்கள் சரியான வழிமுறை தெரியாமலும், வங்கிகளின் அலட்சியம் மற்றும் புறக்கணிப்பாலும் தங்களின் கல்வி கடன் வாய்ப்புகளை இழக்கின்றனர். எனவே, அவர்கள் எளிதான முறையில் வங்கியில் கல்வி கடனை பெறும் வழிமுறைகளை அறிந்து கொண்டால், அதன் மூலம் வீண் மன உளைச்சல் மற்றும் அலைச்சல் ஆகியவற்றை தவிர்க்க முடியும்.</p> <h3>தகுதி</h3> <p style="text-align: justify;">வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக, நீங்கள் அதற்கு தகுதியான நபரா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, வங்கிகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி அவர்கள் தகுதியானவர்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான வங்கிகள், 16 முதல் 26 வயது வரையிலான மாணவர்களுக்கு கல்வி கடன்களை வழங்குகின்றன. அதே சமயம், வங்கிகளுக்கு இடையில், கல்வி கடன் பெறுவதற்கான தகுதி விதிமுறைகளில் வேறுபாடுகளும் உண்டு.</p> <h3>வங்கிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இடையிலான ஒத்துழைப்பு</h3> <p style="text-align: justify;">பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், அவை தேசிய அல்லது சர்வதேச கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் சரி, வங்கிகள், நிதி அமைப்புகள் அல்லது கல்வி கடன் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளன. இதன் மூலம், குறைந்த வட்டி விகிதம் மற்றும் திருப்பி செலுத்துவதற்கான அதிக கால அவகாசம் போன்ற சலுகைகள் மாணவர்களுக்கு கிடைக்கின்றன. இத்தகைய சலுகைகள், மாணவர் சமூகத்தால் வரவேற்கப்படுபவைகளாக உள்ளன. ஏனெனில், அவர்கள் கடனை திரும்ப செலுத்துவதற்குள், ஒரு நல்ல பணி வாய்ப்பை பெறுவதற்கான அவகாசத்தைப் பெறுகின்றனர்.</p> <h3>தற்போதைய நிதி நிலை</h3> <p style="text-align: justify;">கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னதாக, உங்களின் தற்போதைய சொந்த நிதி நிலை எவ்வாறு உள்ளது என்பதை மதிப்பிட்டுக் கொள்வது முக்கியம். கல்வி உதவித்தொகையை பெறுவதன் மூலம், உங்களின் செலவின சுமையைக் குறைக்கலாம். நீங்கள் படிக்கவிருக்கும் கல்வி நிறுவனம் மற்றும் உங்களின் விருப்ப படிப்பு ஆகியவற்றை தேர்வு செய்தவுடன், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தை தொடர்பு கொண்டு, உங்களுக்கான கல்வி உதவித்தொகை வாய்ப்புகள் குறித்து விசாரிக்கலாம்.</p> <h3>கல்வி கடனை திரும்ப செலுத்துதல்</h3> <p style="text-align: justify;">நீங்கள் தேர்வு செய்யும் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு, உங்களுக்கான பணி வாய்ப்புகள் எப்படி மற்றும் அதில் கிடைக்கும் ஆரம்ப நிலை சம்பளம் ஆகியவை பற்றி ஆராய வேண்டும். கல்வி கடன் வழங்கும் பல வங்கிகள், கடனை திருப்பி செலுத்த 10 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கின்றன.</p> <p style="text-align: justify;">அதே சமயம், கல்வி கடனை எந்தளவிற்கு விரைவாக திருப்பி செலுத்துகிறோமோ, அந்தளவிற்கு ஒரு மாணவரின் நிதி ஆதாரம் சேமிக்கப்படுகிறது. ஏனெனில், அவர் கட்டும் தேவையற்ற வட்டியின் அளவு குறைகிறது. நீண்ட காலம் ஒரு கடனை திருப்பி செலுத்துகையில், நாம் அதிகளவு வட்டி கட்டியிருப்போம் என்பதையும் நினைவில் கொள்க.</p> <p style="text-align: justify;">மேலும், நீங்கள் படிப்பு முடிந்து ஆரம்ப கட்டத்தில் பெறுகின்ற பணி வாய்ப்பில் பெறுகின்ற சம்பளம் மற்றும் அடுத்தடுத்த காலகட்டங்களில் உங்களின் சம்பளம் எந்தளவு அதிகரிக்கும் என்பதை விசாரித்து தெரிந்து கொள்வது நல்லது. அப்போது தான், நீங்கள் கல்வி கடனை எப்படி திருப்பி செலுத்தலாம் என்பதை திட்டமிட முடியும்.</p> <h3>கடன் தரும் நிறுவனங்கள்</h3> <p style="text-align: justify;">தனக்கான கல்வி கடனை பெறும் முயற்சியில் ஒரு மாணவர் ஈடுபடுகையில், அவர் பலவிதமான வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் பற்றி கேள்விப்படுவார். அந்த பலவிதமான நிறுவனங்களில், தனக்கு ஒத்து வரக் கூடியது எது என்பதை நன்கு யோசித்து முடிவு செய்ய வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஏனெனில், இந்த முயற்சியில் மாணவர்கள் சில மோசடி நிறுவனங்களையும் சந்திக்க நேரலாம். குறைந்த வட்டி விகிதம் உள்ளிட்ட பல போலியான சலுகைகளை வழங்குவதாக கூறி, அவை மாணவர்களை ஏமாற்ற முயலலாம். எனவே, ஒரு மாணவருக்கான கல்வி கடன் பெறும் தகுதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்து பொதுவான நடைமுறையில் வங்கிகள் என்ன மாதிரியான சட்ட திட்டங்களைக் கொண்டுள்ளன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.</p> <h3>போதுமானதாக இருத்தல்</h3> <p style="text-align: justify;">நீங்கள் வாங்கும் கல்வி கடன் உங்களின் அவசியமான தேவைகளை நிறைவு செய்வதாக இருக்க வேண்டும். புத்தகங்கள், பயணச் செலவுகள், விடுதி கட்டணம், உணவு மற்றும் தனிப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட பல அத்தியாவசிய அம்சங்களுக்கான செலவினங்கள், உங்களின் கல்வி கடன் தொகைக்குள் அடங்க வேண்டும். அதே சமயம், உங்களுக்கு தேவைப்படும் தொகையை விட அதிகமாக, கல்வி கடனைப் பெற வேண்டாம். ஏனெனில், திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்படும்.</p> <h3>பொறுப்பாளர்</h3> <p style="text-align: justify;">ஒரு வங்கி அல்லது கல்வி கடன் தரும் ஒரு நிறுவனம், கல்வி கடன் கோரும் மாணவருடன் சேர்த்து, அவரின் தாய் அல்லது தந்தை அல்லது உடன் பிறந்தோர் ஆகிய யாரேனும் ஒருவரை co-applicant-ஆக இருக்க வலியுறுத்துகிறது. ஏனெனில், பெற்றோர் அல்லது உடன் பிறந்தோரின் தற்போதைய வருமானம் வங்கிகளால் கணக்கில் எடுக்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;">ஏனெனில், வங்கிக் கடன் பெற்ற மாணவரால், சரியான காலத்தில் பணி வாய்ப்பை பெற்று, கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்படும் போது, co-applicant அதற்கான பொறுப்பை ஏற்கும் நிலை ஏற்படும்.</p> <h3>பிணையம்</h3> <p style="text-align: justify;">ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கல்வி கடன் பெற விரும்புவோர், அதற்கேற்ப செக்யூரிட்டி (security) வைத்திருப்பது அவசியம். அதுவொரு சொத்தாகவோ, பங்குகளாகவோ அல்லது முதலீடாகவோ இருக்கலாம். இதன் மூலம், சிறப்பான வட்டி விகிதத்தில் கல்வி கடன் பெற முடியும்.</p> <h3>தேவையான ஆவணங்கள்</h3> <p style="text-align: justify;">கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னதாக, தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். கல்வி கடன் பெறுவதற்கு என்னென்ன ஆவணங்களை, விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிறுவனங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.</p> <p style="text-align: justify;">பொதுவாக, அடையாள சான்று, வயது மற்றும் முகவரி சான்று, co-applicant உறவு முறைக்கான அடையாளம், அவர்களின் முகவரி சான்று மற்றும் வருமான சான்று ஆகியவையே பெரும்பாலான இடங்களில் கோரப்படுகிறது. மேலும், நீங்கள் சேரப் போகும் கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட சேர்க்கை கடிதம் மற்றும் கட்டண விபரங்களும் இருக்க வேண்டும். நீங்கள் வெளிநாட்டிற்கு படிக்க செல்பவராக இருந்தால், visa approval papers மற்றும் GMAT, SAT, GRE ஆகிய தேர்வுகளின் மதிப்பெண்கள் போன்றவையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p> <h3>திருப்பி செலுத்துதல்</h3> <p style="text-align: justify;">கல்வி கடனை எந்த முறையில் திருப்பி செலுத்தலாம் என்பது குறித்து, உங்கள் குடும்பத்தினருடன் கலந்து பேசி முடிவு செய்யலாம். மாதாந்திர தவணையாகவா அல்லது சிறியளவிலான வட்டித் தொகையுடனா அல்லது நிறுத்தி வைப்பா என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.</p> <p style="text-align: justify;">சிறியளவிலான வட்டி தொகை செலுத்துதல் மாதாமாதம் ஒரு தொகை செலுத்துதல் ஆகிய முறைகள், நீங்கள் பட்டம் பெற்றவுடன் உங்களின் சுமையைக் குறைப்பதாக இருக்கும். ஆனால், நிறுத்தி வைப்பு என்ற நிலைக்கு செல்ல வேண்டாம் என்பதே பொதுவாக அறிவுரை.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: கல்விமலர்</p> </div>