<p style="text-align: justify;">குழந்தைகள் கற்ற கருத்துக்களைத் தெளிவாக புரிந்துக் கொள்ளவும் நினைவில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் உதவும் மாதிரிகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.</p> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">மாதிரிகள் என்பது ஒரு முப்பரிமாணப் பொருள். அது உண்மையான பொருளின் மறு பதிப்பாக உள்ளது. மாதிரிகள் உண்மையான பொருளை விட சிறியதாக இருக்கும் (எடுத்துக்காட்டாக) பூமியின் உண்மையான பதிப்பான கோள வடிவம் அளவில் சிறியதாகவே இருக்கும் அல்லது அதே அளவிலிருக்கும், மனித இதயத்தின் பல்வேறு பாகங்களைக் குறிக்கும் மாதிரிகள் போன்றவை. மாதிரிகள் உண்மையான பொருளின் முக்கியமான அம்சங்களை மட்டுமே வெளிப்படுத்தும் எல்லாவற்றையும் கூறாது. மாதிரிகளை மாணவியரே தயார் செய்யும் போது அது மிகவும் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகிறது. இம்மாதிரி செய்யும் போது அவர்கள் தாங்கள் கற்ற கருத்துக்களைத் தெளிவாக புரிந்துக் கொள்ளவும் நினைவில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் முடிகிறது.</p> <h3 style="text-align: justify;">மாதிரியின் நன்மைகள்</h3> <ol style="text-align: justify;"> <li>உண்மைப் பொருளின் மறுபதிப்பாகக் கற்பிக்க மாதிரிகள் உதவுகின்றன.</li> <li>கடினமான ஒன்றைக் கூட மாதிரிகள் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைக்க உதவுகிறது.</li> <li>மாதிரிகள் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் குறைவான விலையிலேயே கிடைக்கிறது.</li> <li>வீணாகும் பொருட்களான மரச்சீவல்கள், துணிகள், டப்பாக்கள், காகிதங்கள், மரப்பலகைகள், பிளாஸ்டிக் கலன்கள், களிமண், மணல்துகள்கள், நார்ப் பொருட்கள் போன்ற உள்ளூரில் சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பொருட்களை மாதிரிகள் செய்ய பயன்படுத்தலாம்.</li> </ol> <h3>உண்மையான பொருட்கள்</h3> <p style="text-align: justify;">உண்மையான பொருட்களாக விலங்குகள், தாவரங்கள் மற்றும் வேறு சில கற்பிக்கும் சாதனங்கள் கற்கும் சூழலுக்கேற்ப பயன்படுத்துதல். எடுத்துக்காட்டாக தவளையைப் பற்றிக் கற்கும் போது படத்திலுள்ள தவளையை விட உண்மையான தவளையை காண்பித்து கற்பிக்கும் போது கற்றல் எளிதாகிறது.</p> <h4>உண்மையான பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்</h4> <ul> <li style="text-align: justify;">கற்பவர்களை ஊக்குவிப்பதற்கு உண்மையானப் பொருட்கள் உதவி புரிவதோடு கற்பதை எளிதாக்கவும் செய்கிறது.</li> <li style="text-align: justify;">கற்கும் போது ஒரு சில குறிப்புக்களையும் கருத்துக்களையும் தெளிவாகக் கற்பதால் கற்றல் செயல்திறன் மிக்கதாகிறது.</li> <li style="text-align: justify;">மாணவர்கள் தாங்கள் கற்றதிலிருந்தும், கூர்ந்து நோக்கியதிலிருந்தும் சொந்த கருத்துக்களை உருவாக்கவும், கற்பதில் முன்னேற்றமடையவும் உதவுகிறது.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை</p>