முன்பள்ளியில் பாதுகாப்பு ஏற்படுத்தும் வழிகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. முன்பள்ளியில் பாதுகாப்பு ஏற்படுத்தும் வழிகள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குழந்தையின் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. கதவுகள் லேசானதாகவும், தானே பூட்டிக் கொள்வதாகவும், ஊசலாடாமலும் இருக்க வேண்டும். எல்லா ஜன்னலுக்கும் திரைச்சீலைகள் மற்றும் கம்பிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகளைத் தாக்கும் அல்லது ஆபத்து ஏற்படுத்தும் கருவிகள், இயந்திரங்கள், தீப்பெட்டிகள் குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைக்க வேண்டும். விளையாடும் இடப்பரப்பு குழந்தைக்கு பாதுகாப்பைத் தர வேண்டும். குழந்தைகள் ஒடும் போதும், விளையாடும் போது காயம் ஏற்படாமல் இருக்குமாறு இட அமைப்பு வேண்டும். கருவிகள் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கவும், மோதலை ஏற்படுத்தாததாகவும் அமைக்கப்பட்டிருந்தால் தான் குழந்தைகள் சுதந்திரமாக விளையாட ஏதுவாயிருக்கும். நச்சு கலந்த நிறம் அல்லது பெயின்ட்டை விளையாட்டுக் கருவிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. முன்பள்ளியின் போக்குவரத்து சாதனங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். முதலுதவி சாதனம் மற்றும் தீ விபத்தினைத் தடுக்கும் கருவிகள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். முன்பள்ளியின் வெளிப்புற சூழ்நிலையானது பெருமளவு குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் தரத்தையும் நிர்ணயிக்கிறது. சூழ்நிலையை நல்ல வழியில் பயன்படுத்தும் போது குழந்தைகளுக்கு அது அதிக பயனுாட்டக்கூடிய வகையிலுள்ளது. தற்கால ஆய்வுகள், தேவையான வசதிகள் மற்றும் கருவிகள் இருப்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிப்பதாகக் கூறுகிறது. முன்பள்ளியிலுள்ள வசதிகளை முறையான வழியில் பயன்படுத்தும்போது அது குழந்தைகளின் கற்றலுக்கு அதிக சந்தர்ப்பம் அளிப்பதாக உள்ளது. நன்றாகத் திட்டமிட்டு கட்டப்பட்ட அறைகள் கூட சரியாக சுத்தமாக பராமரிக்கப்படவில்லையெனில் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்த உதவாது. எனவே சுற்றுசூழலின் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துதல் அவசியம். ஏனெனில் அவையே ஒரு குழந்தையின் உடல், உள்ள, சமூக நலனை ஏற்படுத்தப் பெரிதும் உதவுகிறது. குழந்தைகள் தங்கள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சார்பாகக் கற்றதை நேரிடையாகப் பயன்படுத்தும் போது அதிக ஈடுபாட்டுடன் மிக சிறப்பாகக் கற்கிறார்கள். குழந்தைகள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்வதில் முன்பள்ளிக் கட்டிடம் முக்கிய பங்கேற்கிறது. ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை