<p style="text-align: justify;">இந்திய தேசத்தின் சின்னங்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.</p> <h3 style="text-align: justify;">சின்னங்கள்</h3> <p style="text-align: justify;">நுழைவாயிலாக அமைந்துள்ள இந்தப் பகுதி இந்திய நாட்டின் அடையாளப் பொருட்களைப் பற்றிப் பேசுகிறது. இந்தச் சின்னங்கள் இந்திய நாட்டின் அடையாளம், மரபுரிமை ஆகியவற்றின் உள்ளார்ந்த வெளிப்பாடாகும். உலகம் முழுதும் உள்ள பல்வேறுபட்ட பின்னணியின் மாதிரிகளாக உள்ள இந்தியர்களின் பெருமைக்கு உரியதாக இத்தேசியச் சின்னங்கள் விளங்குகின்றன. இவை ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் பெருமிதத்தையும் நாட்டுப்பற்றையும் உண்டாக்குவதாக உள்ளன.</p> <h3 style="text-align: justify;">தேசியக் கொடி</h3> <p style="text-align: justify;">இந்தியத் தேசியக் கொடி நீள்வாக்கில் மூன்று வண்ணங்களை உடையதாக அமைந்தது. மேலே காவி வண்ணமும், இடையில் வெள்ளை வண்ணமும், அடியில் அடர் பச்சை வண்ணமும் சம அளவில் அமைந்துள்ளன. நீளம் மூன்று பங்கு, அகலம் இரண்டு பங்கு என்னும் விகிதத்தில் கொடியின் அளவு அமைந்துள்ளது. வெள்ளைப் பட்டையின் நடுவில் சக்கரம் கடல் நீல வண்ணத்தில் (navy blue) அமைந்து உள்ளது. அசோக மன்னரின் தலை நகரான சாரனாத்தில் அமைந்துள்ள சிங்கத்தில் காணப்படும் மணிச்சட்டத்தில் இச்சக்கரம் காணப்படுகிறது. இச்சக்கரத்தின் விட்டம் ஏரக்குறைய வெள்ளைப் பட்டையின் அகலத்திற்குச் சமமானது. இதில் 24 ஆரங்கள் உள்ளன. இத்தேசியக் கொடியின் வடிவமைப்பு, இந்திய நாடாளுமன்றத்தால் 1947 ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசு அவ்வப்போது வெளியிடும் சட்டத்திற்கு உட்பட்ட ஆணைகளுக்கு அப்பாற்பட்டு அடையாளச் சின்னங்கள் பெயர்கள் ஆகியவற்றிற்கான சட்டப் பகுதிகள் இந்தியத் தேசியக் கொடியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவுசெய்கின்றன. (முறையில்லாமல் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டவரைவு - 1950 (எண் 12/1950) மற்றும் தேசிய மரியாதைக்குரியவற்றை இழிவு செய்தல் தடைச் செய்யும் சட்டவரைவு - 1971 (எண் 69/1971). தேசியக் கொடிச் சட்டம் 2002, என்பது இதுதொடர்பான வழிகாட்டுதல் பயன்கள் ஆகியவற்றின் எல்லா விதிகள், நடைமுறைகள், மரபுகள், ஆணைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான ஒரு முயற்சியாகும்.</p> <p style="text-align: justify;">தேசியக் கொடிச் சட்டம் 2002 என்பது 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது. இது மற்றைய தேசிய கொடிச் சட்டங்களையெல்லாம் உள்ளடக்கியதாக இருந்தது. 2002 தேசியக் கொடிச் சட்டப் பிரிவின்படி பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தனியார் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் முதலிவை ஆகியவை பயன்படுத்துவதில் தடையேதுமில்லை. ஆனால், அடையாளச் சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையின்றி பயன்படுத்துவதைத் தடைசெய்யும்) சட்டம் -1950, தேசிய மதியாதைக்குரியவற்றை இழிவுபடுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் - 1971, இவை போன்ற வேறு சட்டங்களின் அத்துமீறக்கூடாது.</p> <p style="text-align: justify;"><img class="image-inline" title="" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/NationalFlag.jpeg" alt="" /></p> <p style="text-align: justify;"><strong>Source</strong>: <a class="ext-link-icon" href="http://www.india.gov.in/" target="_blank" rel="noopener">Indiagov</a></p> <h3 style="text-align: justify;">தேசியப் பறவை</h3> <p style="text-align: justify;">இந்திய மயில், பவோ கிரிஸ்டேடஸ் (Pavo cristatus) என்னும் அறிவியல் பெயர் பெற்றது. இதுவே இந்தியாவின் தேசியப் பறவையாகும். இது அன்னம் அளவிலான பறவையாகும். இதற்கு விசிறி போன்ற இறகுகளை உடைய கொண்டை தலையில் அமைந்திருக்கும். கண்ணுக்கு அடியில் வெள்ளைநிறப் பட்டை ஒன்று காணப்படும். இது நீண்டு மெலிந்த கழுத்தை உடையது. இதன் ஆண் இனம் பெண் இனத்தைவிட வண்ணமயமாகக் காணப்படும். ஆண் இனத்தின் மார்பும் கழுத்தும் சற்று ஒளிரும் நீல நிறத்தில் இருக்கும். வெண்கல நிறமும் பச்சையும் கலந்தாற் போன்ற வண்ணத்தில் சுமார் 200 நீண்ட தோகைகளைக் கொண்டதாக இதன் வால் பகுதி இருக்கும். பெண் இனம் பழுப்பு நிறத்தில் ஆண் இனத்தைவிடச் சற்றுச் சிறியதாகவும், வால் பகுதி குறைந்ததாகவும் இருக்கும். ஆண் இனம் பெண் இனத்தோடு இணை சேர்வதற்கு முன் நீண்ட நேரத்திற்கு தோகை விரித்தாடும் நடனமும், இறகுகளைக் கோதித் தன்னைத் தூய்மை செய்தலும் பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாகும்.</p> <p style="text-align: justify;"><img class="image-inline" title="" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/NationalBird.gif" alt="" /></p> <h3 style="text-align: justify;">தேசியப் பூ</h3> <p style="text-align: justify;">தாமரையே (Nelumbo Nucipera Gaertn) இந்தியாவின் தேசியப் பூவாகும். இது புனிதமான பூவாகும். இந்தியாவின் தொன்மையான புராணங்களில் ஈடுஇணையற்ற இடத்தை இது பெற்றுள்ளது. நினைவிற்கு எட்டாக் காலம் முதல் இந்தியப் பண்பாட்டில் வெற்றியின் குறியீடாக இது இருந்துவருகிறது. இந்தியா ஏராளமான தாவர இனங்களைக் கொண்ட நாடு. தற்போது கிடைக்கும் தகவலின்படி, பல்வேறுபட்ட தாவர வகைகளை மிகுதியாகக் கொண்ட நாடுகளில் உலகத்தில் பத்தாவது இடத்திலும் ஆசியக் கண்டத்தில் நான்காவது இடத்திலும் இந்தியா உள்ளது. இதுவரை 70% நிலப் பகுதியை நில அளவை செய்யப்பட்டுள்ளது. அதில் 47,000 வகைத் தாவரங்களை இந்தியத் தாவரவியல் அளவீட்டு நிறுவனம் (BSI)கண்டறிந்து விளக்கியுள்ளது.</p> <p style="text-align: justify;"><img class="image-inline" title="" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/nationalflowerlotus.gif" alt="" /></p> <h3 style="text-align: justify;">தேசிய மரம்</h3> <p style="text-align: justify;">இந்தியாவின் மிகப் பெரிய மரமான பிகஸ் பெங்காலெனிசிஸ் (Ficus bengalensis) என்னும் அறிவியல் பெயர் பெற்ற ஆல மரமே இந்தியாவின் தேசிய மரமாகும். இதன் கிளைகளிலிருந்து வேர்கள் நிலத்தில் ஊன்றி, மிகப் பெரிய நிலப் பரப்பில் புதிய மரம் போல வளர்ந்து நிற்கும். அதன் வேர்கள் மேலும் புதிய கிளைகளையும் விழுதுகளையும் உருவாக்கும். இத்தகைய பண்பினாலும் நீண்ட வாழ்நாளினாலும் இம்மரம் அழியாத ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தியாவின் புராணங்களிலும் பழங்கதைகளிலும் ஒன்றிணைந்த ஒரு பகுதியாகவும் இது விளங்குகிறது. இந்த ஆல மரம் இன்றும் கிராம வாழ்க்கையின் மையப் புள்ளியாக உள்ளது. கிராமக் கூட்டங்கள் இந்த மரத்தின் நிழலிலேயே நடைபெறுகின்றன.</p> <h3 style="text-align: justify;">தேசிய கீதம்</h3> <p style="text-align: justify;">இந்திய தேசிய கீதம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாட அல்லது ஒலிபரப்பப்படுகிறது. தேகிய கீதத்தின் சரியான வடிவத்தைப் பற்றி அவ்வப்பொழுது ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. எப்பொழுது பாட அல்லது ஒலிபரப்ப வேண்டும், அப்படிப்பட்ட சமயங்களில் எத்தகைய மரியாதை செலுத்தப்படவேண்டும் என்பனவற்றையும் அவை குறிப்பிடுகின்றன. பொதுவான தகவலுக்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் அத்தகைய ஆணைகளின் சாராம்சம் இத்தகவல் ஏட்டில் அதன் சிறப்பியல்பு கருதி கொடுக்கப்பட்டுள்ளன.</p> <p style="text-align: justify;">தேசிய கீதத்தின் முழுமையான, சுருங்கிய வடிவங்கள்</p> <p style="text-align: justify;">கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வடிவமைத்த பாடலின் முதல் பத்தியின் சொற்களும் இசையும் 'ஜன கண மன' என்பதாகும். இதுவே இந்தியாவின் தேசிய கீதமாகும். அப்பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>ஜன கண மன அதிநாயக ஜய ஹே<br />பாரத பாக்ய விதாதா<br />திராவிட உத்கல பங்கா<br />விந்திய ஹிமாசல யமுனா கங்கா<br />உச்சல ஜலதி தரங்கா<br />தவ சுப நாமே ஜாகே<br />தவ சுப ஆசிஸ மாகே<br />காஹே தவ ஜய காதா<br />ஜன கண மங்கள தாயக ஜய ஹே<br />பாரத பாக்ய விதாதா<br />ஜய ஹே ஜய ஹே ஜய ஹே<br />ஜய ஜய ஜய ஜய ஜய ஹே</strong><br /><br />இச்சுருங்கிய வடிவப் பாடலை சுமார் 20 வினாடிகளில் பாடவேண்டும்.ம ேலே உள்ளது தேசிய கீதத்தின் முழுவடிவம். இதை ஏறக்குறைய 52 வினாடிகளில் பாடவேண்டும். இத்தேசிய கீதத்தின் சுருங்கிய வடிவம், முழுப்பாடலின் முதல் அடியையும் கடைசி அடியையும் கொண்டது.<br /><br /><strong>ஜன கண மன அதிநாயக ஜய ஹே<br />பாரத பாக்ய விதாதா<br />ஜய ஹே ஜய ஹே ஜய ஹே<br />ஜய ஜய ஜய ஜய ஜய ஹே<br /></strong></p> <h3 style="text-align: justify;">தேசிய நதி</h3> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;">கங்கை அல்லது கேன்ஜஸ் இந்தியாவின் மிக நீண்ட நதியாகும். இது 2510 கி.மீ தூரத்திற்கு மலைகளின் மேல் ஓடிவருகிறது. இது, பகீரதி நதியாக, இமய மலையில் கங்கோத்திரி எனும் உருகும் பனிப்பாறைகள் நிறைந்த பனிப் பகுதியில் உருவாகிறது. இது பின்னர் அலகானந்தா, யமுனா, சன், கௌதமி, கோசி, காஹரா ஆகிய நதிகளோடு இணைந்து கொள்கிறது. உலகிலேயே வளமான விவசாய நிலத்தையும் நெருக்கமான மக்கள் தொகையையும் கொண்டது, கங்கை நதிப் படுகையே ஆகும்,. இது, ஒரு கோடி சதுரப் பரப்பளவை உள்ளடக்கியது. இதன் மேல் இரண்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ஹரித்துவாரில் உள்ளது. மற்றொன்று பராக்காவில் உள்ளது. இந்த ஆற்றில் மட்டுமே வாழும் கங்கை நதி டால்பின் என்னும் நீர்வாழ் உயிரினம் மிகவும் ஆபத்தான விலங்கினமாகும். கங்கையை, இந்துக்கள், இந்நிலஉலகின் மிகவும் புனிதமான ஆறாகப் கருதுகின்றனர். ஹரித்துவார், வாரனாசி, அலகாபாத் போன்ற கங்கையாற்றின் கரையில் அமைந்துள்ள பெருநகரங்களில் முக்கியமான சமயச் சடங்குகள் இதன் கரையிலேயே நடத்தப்படுகின்றன. இதன் பயணம் வங்காள விரிகுடாக் கடலில் சென்று முடிவடைவதற்கு முன்பாகப் பங்ளாதேஷில் உள்ள சுந்தரவனச் சதுப்புநிலத்தின் கழிமுகப் பகுதியில் இது அகன்று விரிவடைந்து காணப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><img class="image-inline" title="" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/national_river.gif" alt="" /></p> <h3 style="text-align: justify;">தேசிய அடையாளச் சின்னம்</h3> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;">அசோகரின் சாரனாத் சிங்கத் தலைநகரில் இருந்து தழுவப்பட்டதாக இந்தத் தேசிய அடையாளச் சின்னம் உள்ளது. இதன் மூல வடிவத்தில் நான்கு சிங்கங்கள் எதிர் எதிர் திசையைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கும். இது அலங்கார வேலைப்பாடமைந்த ஓரப் பகுதியை உடைய ஒரு மணிச்சட்டத்தின் மேல் நிறுவப்பட்டிருக்கும். அவ்வேலைப்பாட்டு ஓரப் பகுதியைச் சுற்றி அமைந்த பட்டையில் ஒரு யானை, ஒரு விரைந்தோடும் குதிரை, ஒரு காளை, ஒரு சிங்கம் ஆகியவற்றை மணி வடிவில் அமைந்த தாமரைப் பூவின் மேல் உள்ள சக்கரங்கள் இடை இடையே அமைந்து பிரித்துக் காட்டும். மெருகேற்றிய வழுவழுப்பான ஒரே பாறையில் இவைகள் செதுக்கப்பட்டுள்ளன. தலைநகரம் தர்ம சக்கரம் என்னும் சக்கர விதியினால் முடிசூடப்பட்டிருக்கும்.</p> <p style="text-align: justify;">1950 ஜனவரி 26இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசின் அடையாளச் சின்னத்தில் மூன்று சிங்கங்கள் மட்டுமே பார்க்கும்படியாக இருக்கும். நான்காவது ஒன்று பார்வைக்குப் படாமல் மறைந்திருக்கும். மணிச்சட்டத்தின் நடுவில் உள்ள வேலைப்பாடமைந்த பட்டையில் வலப்பக்கம் காளையும் இடப்பக்கம் குதிரையும் வல, இடக் கடைக்கோடியில் அமைந்த சக்கரங்களின் வெளிச்சுற்றும் காணப்படும். மணி வடிவில் அமைந்த தாமரை விடப்பட்டிருக்கும். முண்டக உபநிடதத்திலிருந்து, வாய்மை மட்டுமே வெல்லும் என்னும் பொருளுடைய 'சத்தியமேவ ஜயதே' என்னும் சொற்கள் மணிச் சட்டத்தின் கீழ் தேவநாகரி வரிவடிவத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.</p> <p style="text-align: justify;"><img class="image-inline" title="" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/Stateemblem.gif" alt="" /></p> <h3 style="text-align: justify;">தேசிய நாள்காட்டி</h3> <p style="text-align: justify;">தேசிய காலக் கணக்கீட்டு முறை சக ஆண்டை அடிப்படையாகக் கொண்டது. இதன் முதல் மாதம் சைத்திரா எனப்படும். ஓர் ஆண்டு சாதாரணமாக 365 நாட்கள் கொண்டது. இது 1957 மார்ச்சு 22 முதல் பின்பற்றப்படுகிறது. இதனோடு கீழ்வரும் அலுவலகக் காரணங்களுக்காக கிரிக்கோரியன் நாள்காட்டி முறையும் பின்பற்றப்படுகிறது.</p> <ol style="text-align: justify;"> <li>இந்திய அரசிதழ்</li> <li>அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்படும் செய்திகள்</li> <li>இந்திய அரசால் வெளியிடப்படும் நாள்காட்டிகள் மற்றும்</li> <li>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடனான அரசின் தகவல் தொடர்பு</li> </ol> <p style="text-align: justify;">தேசிய நாள்காட்டியின் நாட்களோடு நிரந்தரமான தொடர்புடைய கிரிக்கோரியன் நாள்காட்டியின் நாள்களும் உள்ளன. சைத்திரா மாதத்தில் முதல் நாள் என்பது பொதுவாக மார்ச்சு 22ஆம் நாளில் வரும். லீப் வருடத்தில் மட்டும் மார்ச்சு 21இல் வரும்.</p> <h3 style="text-align: justify;">தேசிய விலங்கு</h3> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;">பந்தேரா டைகிரிஸ் என்னும் அறிவியல் பெயரை உடைய பேராற்றல் பெற்ற புலி மேலே பட்டை பட்டையான கோடுகளை உடைய விலங்கு. இதன் மேல் உள்ள மஞ்சள் வண்ண மென்மயிர் தோலில் கருப்புப் பட்டைகள் காணப்படும். அதன் இனிய தோற்றம், வலிமை, விரைந்தோடும் இயல்பு, பேராற்றல் ஆகியவை இந்தியத் தேசிய விலங்கு என்னும் பெருமையைப் பெற்றுத் தந்தன. இதில் எட்டு வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இந்திய வகை என்னும் ராயல் பெங்கால் புலி, வடமேற்குப் பகுதியைத் தவிர இந்தியா முழுமையிலும் காணப்படுகிறது. மேலும் அண்டை நாடுகளான நேப்பாளம், பூட்டான், பங்களாதேஷ் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. இந்த இனம் விரைவாகக் குறைந்து வருவதால் 'புலிச் செயல்திட்டம்' என்பது 1973 ஏப்ரலில் கொண்டுவரப்பட்டது. இதுவரை 27 புலிக் காப்பகங்கள் இச்செயல்திட்டத்தின் கீழ் 37,761 சதுர மைல் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளன.</p> <p style="text-align: justify;"><img class="image-inline" title="" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/nationalAnimal.gif" alt="" /></p> <h3 style="text-align: justify;">தேசியப் பாடல்</h3> <p style="text-align: justify;">பக்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்ட பாடலான வந்தே மாதரம் என்பது விடுதலைப் போராட்டத்தில் மக்களை உற்சாகத்துடன் ஈடுபடுத்துவதாக இருந்தது. ஜன கண மன என்னும் பாடலுக்கு இணையான மதிப்பு இதற்கு அளிக்கப்படுகிறது. 1896இல் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் கூட்டத்தில் இது பாடப்பட்டது. இதன் முதல் பத்தி கீழ்வருமாறு அமைந்துள்ளது.</p> <p style="text-align: justify;">வந்தே மாதரம்!<br />சுஜலாம், சுபஹலாம், மலையஜ ஷிதலாம்,<br />ஷஷ்யஷியாமலம், மந்தரம்!<br />வந்தே மாதரம்!<br />ஷுப்பரஜ்யோச்ன புலகிட்யமினிம்<br />புல்லக்குசுமித துரமதல ஷோப்கினிம்<br />சுகாசினிம் சுமதுர பாஷினிம்,<br />சுகதம் வரதம் மந்தரம்!<br />வந்தே மாதரம், வந்தே மாதரம்!<br /><br />இதனை ஆங்கில உரைநடையில் ஸ்ரீ அரவிந்தர் மொழிபெயர்த்துள்ளார். அப்பகுதி:<br /><br />I bow to thee, Mother,<br />richly-watered, richly-fruited,<br />cool with the winds of the south,<br />dark with the crops of the harvests,<br />The Mother!<br />Her nights rejoicing in the glory of the moonlight,<br />her lands clothed beautifully with her trees in flowering bloom,<br />sweet of laughter, sweet of speech,<br />The Mother, giver of boons, giver of bliss.</p> <h3 style="text-align: justify;">தேசியக் கனி</h3> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;">இது சதைப் பற்றான பழம். பழத்தபின் உண்ணலாம். காயாக இருக்கையில் ஊறுகாயாகப் பயன்படுத்தலாம். இதன் அறிவியல் பெயர் மங்கிபெரா இண்டிகா (Mangifera indica). இத்தகைய மாப் பழம் உலகின் வெப்பப் பகுதிகளில் ஏராளமாகப் பயிரடப்படும் முக்கியமான பழவகைகளில் ஒன்று. சாறு நிறைந்த இந்தப் பழத்தில் A, C, D ஆகிய விட்டமின்கள் பெருமளவில் உள்ளன. இந்தியாவில் வெவ்வேறு உருவத்தில், அளவில், நிறத்தில் 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. நினைவுக்கு எட்டாக் காலத்திலிருந்து இந்தியாவில் மாம்பழம் விளைவிக்கப்படுகிறது. இதன் பெருமையைக் கவி காளிதாசர் தம் கவிதைகளில் புகழ்ந்துள்ளார். மாவீரர் அலக்ஸாண்டரும் சீனப் பயணி யுவான் சுவாங்கும் இதனைச் சுவைத்துள்ளனர். மொகலாயப் பேரரசர் அக்பர் 100,000 மாமரங்களை தர்பங்காவில் வளர்த்தார். இந்த இடம் இப்பொழுது பீகாரில் லாகி பாஹ் என அழைக்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><img class="image-inline" title="" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/NationalFruit.gif" alt="" /></p> <h3 style="text-align: justify;">தேசிய விளையாட்டு</h3> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;">இந்தியா, ஹாக்கி விளையாட்டில் நுழைந்த போது அதுவே வெற்றிவாகை சூடியது. இந்தியா எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. 1928 முதல் 1956 வரை ஹாக்கியில் இந்தியாவின் பொற்காலமாகத் திகழ்ந்தது. இச்சமயத்தில் தொடர்ச்சியாக ஆறு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றது. இந்திய ஹாக்கிக் குழு 1975இல் உலகக் கோப்பையையும் அதனோடு வெள்ளி, வெங்கலப் பதக்கங்களையும் வென்றது. இந்தியன் ஹாக்கி பெட்ரேஷன் 1927இல் உலக அங்கீகாரத்தைப் பெற்று அனைத்துலக ஹாக்கி பெட்ரேஷனில் சேர்ந்தது. அது முதல் இந்தியாவின் ஹாக்கி வரலாறு தொடங்கியது. இந்தியா ஒலிம்பிக்கில் பங்கேற்றுத் தன் பொற்கால வரலாற்றைப் படைத்தது. இந்தியாவின் ஹாக்கிப் பயணம் பெறும் வெற்றியை ஈட்டித் தந்தது. இது விளையாடிய 21 போட்டிகளில் 18 வெற்றிகளைப் பெற்றது. பிரசித்தி பெற்ற தயான் சந் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கண்கொட்டாமல் பார்க்கச் செய்யும் வகையில் இந்திய அணி போட்ட 192 கோல்களில் 100 கோல்களைப் போட்டார். இந்தப் போட்டி 1928இல் ஆம்ஸ்டர்டாமில் தொடங்கியது. குறுகிய காலத்தில் வெற்றியைக் குவிப்பது தொடர்ந்தது. 1932இல் லாஸ் ஏன்ஜல்ஸ் நகரிலும் 1932இல் பெர்லினிலும் இவ்வெற்றி தொடர்ந்தது. இதன் விளைவாக இந்தியா ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக மூன்று முறை (hat-trick) தங்கப் பதக்கம் பெற்றது.</p> <p style="text-align: justify;">இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியக் குழு மற்றும் ஒரு ஹாட்ரிக் சாதனையை 1948இல் லண்டன் ஒலிம்பிக்கிலும் 1952இல் ஹல்சினிக் விளையாட்டுக்களிலும் மெல்பேர்ன் ஒலிம்பிக்கிலும் நிகழ்த்திக் காட்டியது. இப்பொற்காலத்தில் இந்தியா 24 ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடியது. 24இல் வென்றது. 178 கோல்களைப் போட்டது (சராசரியாக ஒவ்வொரு போட்டியிலும் 7.43 கோல்கள்). 7 கோல்களையே விட்டுக்கொடுத்தது. மற்ற இரண்டு தங்கப்பதக்கங்களை டோகியோவில் 1964இல் நடந்த ஒலிம்பிக்கிலும், 1980இல் மாஸ்கோ ஒலிம்பிக்கிலும் இந்தியா வென்றது.</p> <p style="text-align: justify;"><img class="image-inline" title="" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/NationalGame.gif" alt="" /></p>