20 பழங்குடியின சுதந்திர போராளிகளுடைய கதைகள் குறித்த 3-வது படக்கதை புத்தகத்தை, ஆகஸ்ட் 2-ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற திரங்கா உத்சவ கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது. நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திரு. அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் திருமதி. மீனாட்சி லேகி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தத் தொகுப்பு, பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராட தங்கள் உயிரை தியாகம் செய்த துணிச்சலான ஆண், மற்றும் பெண்களின் தியாகங்களை நினைவுப்படுத்துகிறது. சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, கலாச்சார அமைச்சகம், அமர் சித்ரா கதையுடன் இணைந்து, அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, 75 சுதந்திர போராட்ட வீரர்களின் படக்கதை புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் அறியப்படாத 20 பெண்கள் பற்றிய முதல் படக்கதை புத்தகம் மற்றும் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பெண்கள் பற்றிய இரண்டாவது படக்கதை புத்தகம் முன்னதாக வெளியிடப்பட்டது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்