<p style="text-align: justify;">நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.</p> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">நீலகிரி பல்லுயிர் வலயம் அல்லது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் (Nilgiri Biosphere Reserve) தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரிப் பகுதியில் அமைந்துள்ளது. இது உலக உயிர்க்கோளக் காப்பகங்களில் ஒன்றாகும். இந்திய அரசால் 1986 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிவிக்கப்பட்ட, யுனெஸ்கோவின் உயிர்க்கோளக் காப்பகமாகும். இந்த பல்லுயிர் வலயத்துடன் இணைந்த மேற்கு தொடர்ச்சி மலையின் நீலகிரி உள்ளமைப்பை (6,000 கிமீ²) யுனெசுகோ நிறுவனத்தின் உலக பாரம்பரியக் குழுவால் உலக பாரம்பரியக் களமாக 2012 இல் அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;">அமைவிடம்</h3> <p style="text-align: justify;">இந்தியாவில் காணப்படும் 10 உயிர்புவியியல் மண்டலங்களில் 2 மண்டலங்களை உள்ளடக்கி மேற்கு தொடர்ச்சி மலையில் (6,000கி.மீ²) அமைந்துள்ளது. இக்காப்பகத்தில் பலவித சூழலமைப்புகளும் பல்லுயிர் வளமும் நிறைந்து காணப்படுகிறது. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் 5520 ச.கிமீ. பரப்பளவில் இது அமைந்துள்ளது. இக்காப்பகத்திற்குள் முதுமலை மற்றும் வயநாடு வனவிலங்கு சரணாலயங்கள், பந்திப்பூர், நாகர்ஹோலே மற்றும் முக்குர்த்தி தேசியப்பூங்காக்கள் மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு போன்ற தேசியப் பூங்காக்கள் உள்ளன. தமிழ்நாட்டில் (2537.6 கிமீ²), கர்நாடகாவில் (1527.4 கிமீ²) மற்றும் கேரளாவில் (1455.4 கிமீ²) பரவியுள்ள இந்த பல்லுயிர் வலயத்தின் மொத்தப் பரப்பளவு 5,520 கிமீ² ஆகும். நீலகிரி மேட்டுநிலத்தினை முழுமையாக அடக்கியுள்ளது. இதன் அமைவிடம் 11 36' லிருந்து 12 15' N நிலநேர்க்கோட்டுக்குள்ளும் மற்றும் 76 லிருந்து 77 15' E நிலக்கிடைக்கோட்டுக்குள்ளும் உள்ளது.</p> <h3 style="text-align: justify;">முதல் உயிர்க்கோள் காப்பகம்</h3> <p style="text-align: justify;">நாம் வாழும் பூமியில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வகைகளில் நுண்ணுயிர்கள் முதல் பிரமாண்ட யானை வரையிலான உயிரினங்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில் மனித இனமும் ஒன்றாகும். உயிர்க்கோளத்தில் உயிர் வாழ தேவையான சூழலை உருவாக்கித்தரும் அரிய இயற்கை அமைப்புகள் சில இடங்களில் மட்டுமே இருக்கும். இந்த இடங்களே உயிர்க் கோளத்தில் தேவையான சூழலை உருவாக்கித்தரும் என்பதால், அத்தகைய இடங்கள் உயிர்க்கோள் காப்பகங்கள் என ‘யுனெஸ்கோ’ அமைப்பாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1986 செப்டம்பர் 1ம் தேதி யுனெஸ்கோ அங்கீகாரம் நீலகிரி மலைக்கு கிடைத்துள்ளது. யுனெஸ்கோவால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள் காப்பகம் நீலகிரி.</p> <h3 style="text-align: justify;">உயிர்க்கோள் மண்டலம்</h3> <p style="text-align: justify;">தமிழகம், கேரளம், கர்நாடகம் என 3 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது இந்த உயிர்க்கோள மண்டலம். இதில், சுமார் 5,560 ச.கி.மீ., பரப்பளவை உள்ளடக்கியுள்ள இந்த மண்டலத்தில் தமிழகத்தில் கோவை, நீலகிரி, சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் 2,537 ச.கி.மீ, பரப்பளவையும், கர்நாடகத்தில் பந்திப்பூர், நாகர்ஹோலே உள்ளிட்ட வனப்பகுதகளில் 1527 ச.கி.மீ. பரப்பளவையும், கேரளத்தில் வயநாடு, அமைதிப்பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் 14,55 ச.கி.மீ., பரப்பளவையும் உள்ளடக்கியதுதான் இந்த நீலகிரி உயிர்க்கோள் மண்டலம். இங்கு மழையளவு 500 மி.மீ முதல் 7000 மி. மீ வரையாகும். முட்புதர்க்காடு, வறண்ட இலையுதிர்க்காடு, இலையுதிர்க்காடு, பசுமைமாறாக்காடு, மலைக்காடுகள், சோலைவனம், புல்வெளிகள் மற்றும் ஈரப்புலங்கள் என பல்வகைக் காடுகள் இங்குக் காணப்படுகின்றன. இவ்வுயிர்க்கோளக் காப்பகம் தெற்கு மேற்குத்தொடர்ச்சிமலை ஈரப்புலக் காடுகள், தெற்கு மேற்குத் தொடர்ச்சிமலை வறண்ட இலையுதிர்க்காடுகள், தெற்கு தக்கணப் பீடபூமி மழைக்காடுகள் என மூன்று சூழலியல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">கோவை மாவட்டத்தில் உள்ள ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு ஆய்வு நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் ஆய்வில், "இந்த உயிர்க்கோள மண்டலத்தில் 100 வகையான பாலூட்டிகள், 50 வகையான பறவைகள், 80 வகையான ஊர்வனங்கள், 39 வகையான மீன்கள், 316 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. அதேபோல 3300 வகையான பூக்கும் தாவரங்களும் உள்ளன. இவற்றில் 1232 வகையான நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் மட்டும் காண கிடைப்பவை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;">உயிரினங்களின் வாழ்விடம்</h3> <p style="text-align: justify;">ஈரப்பதம் நிறைந்த பசுமை மாறா காடுகள், சோலை புல்வெளிகள், இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகள், "சவானா' புல்வெளி காடுகள் இங்கு உள்ளன. உலகில் உள்ள 3238 பூக்கும் இனங்களில், சுமார் 135 இனங்கள் இங்கு உள்ளன. பூச்சியுண்ணும் தாவரங்களான, "டொசீரா', "பெல்டேட்டா' போன்றவை, இமயமலைக்கு அடுத்தப்படியாக இங்கு உள்ளன. இந்தியாவின் தேசிய விலங்கான புலி இனம் அனைத்து பகுதிகளிலும் குறைந்து வரும் சூழலில், நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் முதுமலை, பந்திப்பூர் மற்றும் நாகர்ஹோலே பகுதிகளில் மட்டும் அதிகமாக உள்ளது. அத்துடன் ஒரே வாழ்விடத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகள் வாழ்ந்துவரும் ஒரே பகுதி நீலகிரி உயிர்க்கோள மண்டலம். ஆசிய யானைகளும், புலிகளும் உலகம் முழுவதும் அழிந்தாலும், நீலகிரி உயிர்க்கோள மண்டலம் மட்டுமே அதன் கடைசி வாழ்விடமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த உயிர்க்கோள மண்டலத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே இங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து.</p> <p style="text-align: justify;"><strong>விலங்கினங்கள்</strong></p> <p style="text-align: justify;">விலங்கினங்களைப் பொறுத்தவரையில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரித்தான 100 வகையான பாலூட்டிகள், 350 வகையான பறவைகள், 80 வகையான இரு வாழ்விகள், 39 வகையான மீன்கள், 31 வகையான ஊர்வன, 316 வகையான வண்ணத்துப்பூச்சியினங்கள் மற்றும் எண்ணிலடங்கா முதுகெலும்பற்ற விலங்கினங்கள் இக்காப்பகத்தில் காணப்படுகின்றன. டேனியோ, ஹிப்செலோபார்பஸ் மற்றும் புந்தியஸ் போன்ற நன்னீர் மீன் இனங்கள் இக்காப்பகத்தில் மட்டுமே காணப்படுகின்றன. நீலகிரி வரையாடு, நீலகிரிக்குரங்கு, தேவாங்கு, வெளிமான், புலி, காட்டெருமை மற்றும் ஆசிய யானை போன்றவை இங்கு பொதுவாக காணப்படும் விலங்கினங்களாகும். எண்ணிலடங்கா பூச்சி வகைகளும் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள அரிதாகி வரும் விலங்குகள் புலி, ஆசிய யானை, வரையாடு ஆகியன.</p> <p style="text-align: justify;"><strong>தாவர இனங்கள்</strong></p> <p style="text-align: justify;">நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் தாவர உயிர்ப்பரவல் மிகுந்து காணப்படுகிறது. ஏறத்தாழ 3300 க்கும் மேற்பட்ட பூக்கும் தாவர வகைகள் உள்ளன. இதில் 1232 தாவர வகைகள் இவ்விடத்திற்கே உரித்தனவாக உள்ளன. பேயேலெப்சிஸ் என்ற தாவரப்பேரினம் உலகில் இங்கு மட்டும்தான் காணப்படுகிறது. இங்கு காணப்படும் 125 ஆர்க்கிட் இனங்களில் 8 இனங்கள் இவ்விடத்திற்கே உரித்தனவாகும். வாண்டா, லிபாரிஸ், பல்போஃபைலம், ஸ்பைராந்தஸ் மற்றும் திரிக்ஸ்பெர்மம் போன்றன இவ்விடத்திற்கே உரித்த மற்றும் அழிந்து வரும் முக்கிய இனங்களாகும்.</p> <p style="text-align: justify;">பெருநெல்லி, சிலைவாகை, நாவல், பலா, தோதகத்தி, ரோடோடென்ட்ரான் மற்றும் சந்தனம் போன்றவை இங்கு பொதுவாக காணப்படும் மரவகைகளாகும். நீலகிரி என்ற பெயர் வரக்காரணமான, நீல நிறத்தில் பூப்பூக்கும் குறிஞ்சி என்ற ஒரு சிறந்த தாவர இனம் இங்கு காணப்படுவது இக்காப்பகத்தின் தனிச் சிறப்பாகும். மேலும் பல மூலிகைகளும் மிளகு போன்ற கொடியினங்களும் மிகுந்து காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சிமலையின் 80% பூக்கும் தாவரங்கள் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தைச் சேர்ந்தவையாகும்.</p> <h3 style="text-align: justify;">பாதுகாக்கப்பட்டப் பகுதிகள்</h3> <p style="text-align: justify;"><strong>நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்</strong></p> <p style="text-align: justify;">நீலகிரி மலைகளில் பசுமையான வனப்பகுதியில் ஓடும் சிற்றாறுமுதுமலை வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்கா (321.1 கிமீ²), வயநாடு வனவிலங்கு உய்வகம்( 344கிமீ²), பந்திப்பூர் தேசியப்பூங்கா(874கிமீ²), நாகரஹோளே தேசியப் பூங்கா (643 கிமீ²), நுகு வனவிலங்கு உய்வகம், முக்கூர்த்தி தேசியப் பூங்கா (78 கிமீ²) மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (89.52கிமீ²) ஆகியன இந்த வலயத்தினுள் அடங்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாகும். தவிர சுற்றுலா மற்றும் வனத்துறைக்குட்பட்ட தமிழக நீலகிரி மாவட்டம் (வடக்கு(448.3 கிமீ²) தெற்கு (198.8 கிமீ²)), ஈரோடு மாவட்டம் (சத்தியமங்கலம் வனப்பகுதியும் (745.9 கிமீ²) ஈரோடு(49.3 கிமீ²)) மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் (696.2 கிமீ²) வனப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.</p> <p style="text-align: justify;">இந்த வலயத்தின் மேற்குச்சரிவுகளில் கூடுதலாக மழை பெய்து பசுமையான ஈரக்காடுகளும் மற்றும் கிழக்குச்சரிவுகளில் குறைந்த மழை பெறும் உலர்காடுகளும் உள்ளன. ஆண்டுக்கு 500 மிமி முதல் 7000 மிமி வரை மழை பெய்கிறது. இந்த வலயத்தினை மூன்று சுற்றுசூழல் பகுதிகளாகப் பிரிக்கலாம்:</p> <ul> <li style="text-align: justify;">தென்மேற்குத் தொடரின் ஈர இலையுதிர்க் காடுகள்</li> <li style="text-align: justify;">தென்மேற்குத் தொடரின் மான்ட்டேன் மழைக்காடுகள்</li> <li style="text-align: justify;">தென் தக்காண மேட்டுநில உலர் இலையுதிர் காடுகள்</li> </ul> <p style="text-align: justify;">இக்காடுகளில் மான்ட்டேன் மழைக்காட்டு மரங்கள்,பசும் ஈரக் காட்டுமரங்கள், முள்மரங்கள்/முற்செடிகள், மான்ட்டேன் புல்வெளிகள், மலையுச்சி ஷோலா காட்டு மரங்களைக் காணலாம்.</p> <p style="text-align: justify;"><strong>மைய</strong><strong> </strong><strong>மற்றும்</strong><strong> </strong><strong>தாங்கல்</strong><strong> </strong><strong>மண்டலங்கள்</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">1986 இல் இந்திய அரசாங்கம் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் மைய மற்றும் தாங்கல் மண்டலங்களை அமைத்தது. அதன் படி</p> <p style="text-align: justify;">மையப் பரப்ப்ளவு: 1240.3 கி.மீ² (701.8 கி.மீ² கர்நாடகா, 264.5 கி.மீ² கேரளா 274 கி.மீ² தமிழ்நாடு)</p> <p style="text-align: justify;">தாங்கல் பரப்பளவு: 4280 கி.மீ²</p> <p style="text-align: justify;">காடுகள் பகுதி 3238.7 கி.மீ² (212.2 கி.மீ² கர்நாடகா, 945.0 கி.மீ² கேரளா, 2081.5 கி.மீ² தமிழ்நாடு)</p> <p style="text-align: justify;">சுற்றுலாப்பகுதி 335.0 கி.மீ² (269.2 கி.மீ² கர்நாடகா, 0 கி.மீ² கேரளா, 65.8 கி.மீ² தமிழ்நாடு) Restoration zone: 706.4 கி.மீ² (344.2 கி.மீ² கர்நாடகா, 245.9 கி.மீ² கேரளா, 116.3 கி.மீ² தமிழ்நாடு) மேலும் இவ்வுயிர்க்கோளக் காப்பகம்</p> <ul style="text-align: justify;"> <li>பந்திப்பூர் தேசியப் பூங்கா, கர்நாடகா</li> <li>முதுமலை தேசியப் பூங்கா, தமிழ்நாடு</li> <li>முக்கூர்த்தி தேசியப் பூங்கா, தமிழ்நாடு</li> <li>சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் , தமிழ்நாடு</li> <li>நாகர்ஹோலே தேசியப் பூங்கா, கர்நாடகா</li> <li>அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப்பூங்கா, கேரளா</li> <li>வயநாடு வனவிலங்கு சரணாலயம், கேரளா</li> </ul> <p style="text-align: justify;">ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும்.</p> <p style="text-align: justify;"><strong>பழங்குடிகள்</strong></p> <p style="text-align: justify;">தோடா, கோட்டா, குறும்பா, பனியா, இருளா, ஆதியா, எடநாடன், போன்ற பழங்குடியின மக்களுக்கு இக்காப்பகம் தாயிடமாக விளங்குகிறது. இவர்கள் பாரம்பரிய வேளாண் முறைகளை இன்றளவும் பின்பற்றி வருகின்றார்கள்.</p> <p style="text-align: justify;"><strong>அச்சுறுத்தல்</strong></p> <p style="text-align: justify;">திட்டமிடா சுற்றுலா, காட்டுத்தீ, மேய்ச்சல், ஓரின பயிர்சாகுபடி, தீவிர காடழிப்பு, தோட்டப் பயிர்கள் வேளாண்மை, கட்டுமானப் பணிகள் மற்றும் நீர்மின் சக்தி திட்டங்கள் போன்ற மனிதனின் செயல்பாடுகள் இக்காப்பகத்தின் அச்சுறுத்தல்களாகும்.</p> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் : </strong>தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை</p>