<p style="text-align: justify;">கிண்டி தேசியப் பூங்கா பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.</p> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">சென்னை மாநகர் என்றாலே பரபரக்கும் சாலைகளில் சீறிப்பாயும் வாகனங்கள் ஓங்கி நிற்கும் கட்டடங்களும்தான் நினைவுக்கு வரும். அப்படியே நகர மக்கள் ஓய்வெடுக்க விரும்பினால், சுத்தக் காற்றை அனுபவிக்க விரும்பினால், விடுமுறை நாள்களில் மலைவாசத் தலங்களுக்கு பயணம் செய்வார்கள். ஆனால், நாள்தோறும் சென்னை மக்களுக்கு இந்தக் கடுமையான காற்றுமாசுகளை உள்வாங்கிக்கொண்டு சுத்தமான பிராண வாயுவை அளிக்கும் காட்டுப் பகுதி இருப்பது நகர மக்களுக்கு அதிகம் தெரியாது என்பதுதான் உண்மை.</p> <h3 style="text-align: justify;">சிறப்பம்சங்கள்</h3> <ul style="text-align: justify;"> <li>கிண்டி சிறுவர் பூங்காவின் பின்பக்கத்தில் பாதுகாக்கப்பட்ட ஒரு வனப்பகுதி உள்ளது.</li> <li>சென்னை மாநகரின் மத்தியில் உள்ள <span style="text-align: justify;">காட்டுப் பகுதிதான் கிண்டி தேசியப் பூங்கா. </span>காட்டின் மொத்த பரப்பளவு 270 ஹெக்டேர்.</li> <li>கிண்டி தேசியப் பூங்கா, இந்தியாவில் இருக்கும் எட்டாவது சிறிய தேசியப் பூங்காவாகும்.</li> <li>இந்தியாவில் மாநகராட்சிப் பகுதியில் இருக்கும் இரண்டாவது தேசியப் பூங்கா இது மட்டுமே. முதலாவது மும்பை மாநகரில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவாகும்.</li> <li>ஆங்கிலேயர் காலத்தில் கில்பர்ட் ரோடரிக்ஸ் (Gilbert Rodericks) என்பவரின் சொந்த வேட்டையாடும் பகுதியாக இருந்தது இந்தக் காடு.</li> <li>1958- ஆம் ஆண்டு தமிழ்நாடு வனத்துறையின் கண்காணிப்பிற்கு மாற்றப்பட்டது. பின்பு, மத்திய அரசால் தேசியப் பூங்காவுக்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டது.</li> <li>ஆண்டுதோறும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.</li> <li>வெளிமான் (blackbuck) இயற்கைப் புகலிடமாகவும் கிண்டி தேசியப் பூங்கா விளங்குகிறது.</li> <li>தமிழகத்தில் சத்தியமங்கலம் காடுகளுக்கு பின்பு கிண்டியில் மட்டுமே வெளிமான்களைப் பார்க்க முடியும்.</li> <li>வெளிமான்கள் அழிந்து வரும் இனங்களின் விலங்குகள் பட்டியலில் பிரதானமாக இருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.</li> <li>350 தாவர வகைகளும், 130 பறவை வகைகளும் மற்றும் 60 வகை பூச்சிகள், 60 வகை சிலந்திகள், நரி, கீரி உள்ளிட்ட உயிரினங்களும் இந்தப் பூங்காவில் உள்ளன.</li> <li>இந்தப் பூங்காவில் மட்டும் 200 வெளிமான்களும், 670 புள்ளிமான்களும் உள்ளன.</li> <li>சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1988-இன்படி கிண்டி தேசியப் பூங்காவின் 7கி.மீ. முதல் 10 கி.மீ. பரப்பு கொண்ட சுற்றுப் பகுதியை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது.</li> <li>தேசியப் பூங்காவின் அங்கமாக சிறிதும் பெரிதாக இரண்டு ஏரிகள் உள்ளன. மேலும், 5 குளங்களும் உள்ளன.</li> <li>இதனையொட்டியுள்ள சிறுவர் பூங்காவில் ஏராளமான மான்கள், குரங்கு வகைகள், யானைகள், கொக்கு வகைகள் உள்ளன. இதன் அருகிலேயே பாம்பு பூங்காவும் உள்ளது.</li> <li>கிண்டி தேசியப் பூங்கா முன்னொரு காலத்தில் பசுமைமாறாக் காடுகள் என அறியப்பட்டது.</li> <li>கிண்டி தேசியப் பூங்கா வளாகத்தில்தான் ஆளுநர் மாளிகையும், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமும் (ஐ.ஐ.டி.) உள்ளன.</li> </ul> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் : </strong>தமிழ்நாடு சுற்றுலாத்துறை</p>