<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;"><strong>இல்லறவியல்</strong></h3> <h5 style="text-align: justify;"><strong>அழுக்காறாமை</strong></h5> <p style="text-align: justify;">161 . ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு-ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக கொள்க-தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;"><strong> </strong>(இயல்பு-அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.) ---</p> <p style="text-align: justify;">162 யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்-யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை-மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;"><strong> </strong>(அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.) ---</p> <p style="text-align: justify;">163 அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான்-மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான்-பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான்.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;">('அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாம்.) ---</p> <p style="text-align: justify;">164 அழுக்காற்றின் அல்லவை செய்யார்-அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;"><strong> </strong>(அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.) ---</p> <p style="text-align: justify;">.165 ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது-அழுக்காறு பகைவரை யொழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின், அழுக்காறு உடையார்க்கு அது சாலும்-அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும்.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;">('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.) ---</p> <p style="text-align: justify;">166 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்-ஒருவன் பிறர்க்கு கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்-உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும்.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;"><strong> </strong>(கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல், 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.) ---</p> <p style="text-align: justify;">167 அழுக்காறு உடையானை-பிறர் ஆக்கம் கண்வழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும்-திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்கு காட்டி நீங்கும்.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;"><strong> </strong>(தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது' அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி. மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கோடுவித்து அழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.) ---</p> <p style="text-align: justify;">168 அழுக்காறு என ஒரு பாவி-அழுக்காறு என்று சொல்லபட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்-தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து, மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும்.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;">(பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங் கெடுத்தாற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது. ---</p> <p style="text-align: justify;">169 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-கோட்டத்தினைப் பொருந்திய தனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்-ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும்.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;"><strong> </strong>(கோட்டாம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின், என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின், 'நினைக்கப்படும்' என்றார். ''இம்மைச் செய்தன யான்அறி நல்வினை; உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது' (சிலப்.15:91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.) ---</p> <p style="text-align: justify;">170 அழுக்கற்று அகன்றாரும் இல்லை-அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்-அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;">(இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது.) ---</p> <p style="text-align: justify;">ஆதாரம் - <a class="ext-link-icon external-link" href="http://projectmadurai.org/" target="_blank" rel="noopener">மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்</a></p> </div>