<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">இல்லறவியல்</h3> <h5 style="text-align: justify;">பயனில சொல்லாமை</h5> <p style="text-align: justify;">191) பல்லார் முனிப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன்இலவாகிய சொற்களைச் சொல்லுவான்; எல்லாரும் எள்ளப்படும் - எல்லாரானும் இகழப்படும்.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;">(அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், 'எல்லாரும் எள்ளப்படும்' என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது. ---</p> <p style="text-align: justify;">192). பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல்; நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;">((விருப்பம்இல. வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.)</p> <p style="text-align: justify;">193 பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே; நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன்' என்பதனை உரைக்கும்.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;"><strong> </strong>(உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.) ---</p> <p style="text-align: justify;">194 பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச் சொல்லுமாயின்; நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும்.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;"><strong> </strong>(பண்பு: இனிமையும் மெய்யும் முதலாய சொற்குணங்கள். 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.) ---</p> <p style="text-align: justify;">195 பயன் இல நீர்மையுடையார் சொலின்-பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின்; சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும்.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;"><strong> </strong>(நீர்மை: நீரின் தன்மை. 'சொல்லின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.) ---</p> <p style="text-align: justify;">196 பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்-பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க; மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;"><strong> </strong>('அல்' விகுதி வியங்கோள்; முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.) ---</p> <p style="text-align: justify;">197 நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக-சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும்; பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;">('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.) ---</p> <p style="text-align: justify;">198 அரும்பயன் ஆயும் அறிவினார்-அறிதற்கு அரிய பயன்களை ஆராய வல்ல அறிவினையுடையார்; பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார்.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;"><strong> </strong>(அறிதற்கு அரிய பயன்களாவன: வீடு பேறும் மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிதும் உடையனவும் ஒழிக்கப்பட்டன.) ---</p> <p style="text-align: justify;">199 பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார்; மருள் தீர்ந்த மாசுஅறு காட்சியவர்-மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார்.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;">('தூய அறிவு' மெய்யறிவு, 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் 'காட்சியவர்' என்னும் குறிப்புப் பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல் சொல்லாமையின் குணம் கூறப்பட்டது.) ---</p> <p style="text-align: justify;">200 சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக; சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;">('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வரு நிலை என்னும் அணி நோக்கி வந்தது, ''வைகலும் வைகல் வரக்கண்டும்'' (நாலடி. 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.) ---</p> <p style="text-align: justify;">ஆதாரம் - <a class="ext-link-icon external-link" href="http://projectmadurai.org/" target="_blank" rel="noopener">மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்</a></p> </div>