<div id="Middlecolumn_internal"> <h3>பாயிரவியல்</h3> <h5 style="text-align: justify;">வான்சிறப்பு</h5> <p style="text-align: justify;">11. வான் நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று-அம்மழைதான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம் </strong></p> <p style="text-align: justify;">('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை' 'அமிழ்தம்' என்று உணர்க' என்றார்.) ---</p> <p style="text-align: justify;">12 துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை-அவற்றை உணர்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம் </strong></p> <p style="text-align: justify;">(தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணைமேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின், அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.) ---</p> <p style="text-align: justify;">13 விண் இன்று பொய்ப்பின் மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி-நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம் </strong></p> <p style="text-align: justify;">(கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், 'விரி நீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின், பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.) ---</p> <p style="text-align: justify;">14. உழவர் ஏரின் உழார் - உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம் </strong></p> <p style="text-align: justify;">('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.) --</p> <p style="text-align: justify;">15 கெடுப்பதூஉம் - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற்போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை-இவை எல்லாம் வல்லது மழை.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம் </strong></p> <p style="text-align: justify;">('மற்று' வினை மாற்றின்கண் வந்தது, 'ஆங்கு என்பது மறுதலைத் தொழிலுவ மத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு' என்றார். 'எல்லாம்' என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.) ---</p> <p style="text-align: justify;">16. விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது-வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது. தலையையும் காண்டல் அரிது.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம் </strong></p> <p style="text-align: justify;">('விசும்பு ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்) ---</p> <p style="text-align: justify;">17 நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும்-அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகிவிடின்-மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின்.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம் </strong></p> <p style="text-align: justify;">(உம்மை சிறப்பு உம்மை. தன்இயல்பு குறைதலாவது நீர்வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம். ஈண்டுக் 'குறைத்தல்' என்றது முகத்தலை. அது "கடல்குறை படுத்தநீர் கல் குறைபட எறிந்து" (பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.) ---</p> <p style="text-align: justify;">18. வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல்-மழை பெய்யாதாயின.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம் </strong></p> <p style="text-align: justify;">(நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார்ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற் கூறினார்.) ---</p> <p style="text-align: justify;">19 வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின்</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம் </strong></p> <p style="text-align: justify;">(தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.) ---</p> <p style="text-align: justify;">20 யார் யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின்-எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது.</p> <p style="text-align: justify;"><strong>விளக்கம் </strong></p> <p style="text-align: justify;">(பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார். அவை இம்மைக்கண்ண ஆகலின். இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல். நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின், அதுபோல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகு எனின்' என்றார். இதனை, 'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது. ---</p> <p style="text-align: justify;">ஆதாரம் - <a class="ext-link-icon external-link" href="http://projectmadurai.org/" target="_blank" rel="noopener">மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்</a></p> </div>