<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">மொகஞ்சதாரோவில் மனித இனங்கள்</h3> <p style="text-align: justify;">மொகஞ்சதாரோ நாகரிகத்தின் காலம் கி.மு.2500-கி.மி.1500 எனப் பல வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இக்காலவரை ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் பெறப்பட்டதாகும். இதன் பின்னர் இந்நாகரிகத்தின் இடைக்காலப் பகுதியில் மேற்கொண்ட கார்பன்-14 முறையின் படி மேற் கொண்ட ஆய்வுகள் கி.மு.2500 என்பதை உறுதி செய்கின்றன. மொகஞ்சதாரோவின் பிற்காலகட்டத்தியப் பகுதியில் மேற்கொண்ட துல்லியமாகக் கணிக்கக் கூடிய கார்பன்-14 முறைப்படி ஆராய்ந்த போது அதன் காலக்கட்டம் கி.மு. 1760-கி.மு 115 என அறியப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் பல அகழாய்வுகள் செய்யப்பட்டன. அங்குக் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் மண்டையோடுகளைக் கொண்டு செவல், குகா இருவரும் பல உண்மைகளைக் கண்டறிந்தனர்.</p> <p style="text-align: justify;">இவ்வகழாய்வில் 26 எலும்புக்கூடுகள் கிடைத்தன. அவற்றில் 22 முழுமையானதாகவும், 3 மண்டையோடுகளாகவும் இருந்தன. இறுதி ஒன்று “M” மண்டையோடு என வகைப்படுத்தப்பட்டது. இவையனைத்தையும் உற்றுநோக்கிய செவல், குகா இருவரும் 14 மண்டையோடுகள் மட்டுமே முழுமையாக இருந்ததால் அவற்றை மட்டுமே ஆய்வு செய்தனர். இந்த 14 மண்டையோடுகளும் ஒரே மனித இனத்தைச் சேர்ந்தவையாக இல்லை. பின்வரும் நான்கு இனத்திற்குரியனவாக இருந்தன.</p> <ul style="text-align: justify;"> <li>வகை 1: தொன்மை ஆஸ்திரேலிய இனம்</li> <li>வகை 2: நடுநிலக்கடல் இனம்</li> <li>வகை 3: மங்கோலிய இனம்</li> <li>வகை 4: ஆல்பைன் இனம்</li> </ul> <p style="text-align: justify;">ஆய்வுக்குத் தேர்வு செய்த 14 மண்டையோடுகளில் 2, 11, R என்னும் 3 மண்டையோடுகள் தொன்மை ஆஸ்திரேலிய இனத்துக்குரியதாக இருந்தன. இவையே திராவிடர்கள் உள்ளிட்ட தமிழர்களுக்குரியவை. இம்மூன்று மண்டையோடுகளும் ஆண்களின் மண்டையோடுகள். பெண்களின் மண்டையோடுகள் கிடைக்கவில்லை.</p> <p style="text-align: justify;">இம்மண்டையோடுகளின் சராசரி கொள்ளளவு 1490 cc ஆகும். இவை அளவுள்ளவை நீண்டு அகண்ட மண்டைகள் எனப்படும். மொகஞ்சதாரோவில் கிடைத்த இந்த மண்டையோடுகள் 1490cc அளவுள்ளவை. இவை அண்மையில் அற்றுப்போன டாஸ்மேனிய இனத்தை ஒத்ததாகவும் வடக்கு ஆப்பிரிக்காவில் காணப்பட்ட வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்தில் 1400cc-1500cc சராசரி அளவு கொண்ட ஹோமோ நியாண்டர்தால் மனித இனத்தைப் பெரிதும் ஒத்துள்ளது என்றும் கருதினர்.</p> <p style="text-align: justify;">பின்னர், ஆறு மண்டையோடுகள் (எண் 6,7,9,10,19,26) நடுநிலக்கடல் இனத்தைச் சேர்ந்தவையாக இருந்தன. இவற்றில் 2 ஆண் மண்டையோடுகளும் 4 பெண் மண்டையோடுகளும் அடங்கும். இவற்றின் அளவு சற்று சிறியதாக இருந்தது. சராசரி கொள்ளளவு 1332.5cc ஆகும். அடுத்ததாக மங்கோலிய இனத்தைச் சேர்ந்த மண்டையோடு ஒன்று மட்டுமே இருந்தது. இது நாகர் இனத்து மண்டையை ஒத்திருந்தது.</p> <p style="text-align: justify;">இறுதியாக, ஒரு குழந்தையின் மண்டையோடு ஆல்பைன் இனத்தைச் சேர்ந்ததாகும். மொகஞ்சதாரோவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது அகழாய்வில் 15 நபர்களின் எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 4 மட்டுமே முறையான அளவீட்டிற்கு உட்படுத்தப்படும் வகையில் இருந்தன. இந்நான்கும் சடங்குடமுறைகளுடன் இயல்பாகப் புதைக்கப் பட்டதாக இல்லை. இவ்வுடல்கள் கொடுரத் தாக்குதலுக்குட்பட்டு படுகாயங்களுடன் இறந்திருக்கக்கூடும் என்ற ஐயத்தை எழுப்புவதாக குகாவும் பாசுவும் கருதுகின்றனர்.</p> <p style="text-align: justify;">மேற்கூறிய இவ்வுடல்கள் மொகஞ்சதாரோவின் பிற்கால கட்டத்தைச் சேர்ந்தவை என்று மெக்கே கூறுகிறார். இவ்வுடல்களில் ஒரு பகுதி தொன்மை ஆஸ்திரேலிய இனத்திற்குரியதாகவும் உள்ளன என்று குகாவும் பாசுவும் கூறுகின்றனர். M28 என்று குறிக்கப்பட்ட எலும்புக்கூடு மட்டும் இவ்விரண்டு இனங்களின் கூறுகளைத் தெளிவாகப் பெற்றுள்ளது என்றும் தெரிவித்தனர். இன்றும் கூட மொகஞ்சதாரோவுக்குப் பக்கத்தில் உள்ள ஜலவான் மலை, சாரவான் மலைகளில் பிராகூய் மொழி பேசும் (திராவிடமொழி) மக்கள் வாழ்வது திராவிட இனத்தாரின் பரந்த பிரதேசத்தைக் காட்டுகிறது.</p> <h3 style="text-align: justify;">ஹரப்பாவில் மனித இனங்கள்</h3> <p style="text-align: justify;">அகழாய்வுகள் மூலம் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள எலும்புக்கூடுகளையும் மண்டையோடுகளையும் கணக்கில் கொண்டால் ஹரப்பாவில்தான் இவை அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இவையனைத்தும் கிடைத்த வெவ்வேறு இடங்களை ஆய்வாளர்கள் தனித்தனிக் குறியீடுகள் கொடுத்து அடையாளப் படுத்தியுள்ளனர். R37 இடுகாடு, AB எனப் பெயரிடப்பட்ட மண்மேடு (Mound Area), G பகுதி, H இடுகாட்டுப் பகுதி ஆகிய நான்கு இடங்கள் மிக முக்கியமானவை. இவற்றில் R 37 பகுதியில் கிடைக்கப்பெற்ற எலும்புகள் மிகப் பண்டைய மனிதர்களின் எச்சங்கள் எனவும் இடுகாட்டுப் பகுதியில் கிடைத்தவை கடைசியாக அங்கு வாழ்ந்த இனத்தவரின் எச்சங்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளன.</p> <p style="text-align: justify;">H புதைவிடத்தின் அகழாய்வில் இரண்டு அடுக்குகள் காணப்பட்டன. அவற்றில் அடுக்கு I (பிற்காலத்தைச் சேர்ந்தது) குடத்தில் இட்டுப் புதைத்த முறையைச் சுட்டுக்கின்றது. அடுக்கு II (முற்காலத்தைச் சேர்ந்தது) பகுதியில் குடத்தில் இடாமல் திறந்த வெளியில் புதைக்கும் முறையைச் சுட்டுகின்றது. மேற்கூறிய தரவுகளைக் கொண்டு பார்க்கும்போது மேலே கிடைத்த அடுக்கு I-இல் வாழ்ந்தவர்கள் இறந்தவர்களால் புதுவகையில் அடக்கம் செய்யும் முறையைக் கொண்டிருந்ததை அறியமுடிகிறது. இந்த இரண்டாம் அடுக்கைச் சேர்ந்தவர்கள் தொல் ஆஸ்திரேலிய இனத்தவர்கள் என்கிறார் குகா. அடுக்கு I-இல் வாழ்ந்த தொல் ஆஸ்திரேலிய இனத்தாரோடு ஆர்மீனியர் அல்லாத பிற இனத்தாரும், ஆர்மீனிய-ஆல்பைன் இனத்தாரும் அடங்குவர் என்கிறார். ஹரப்பாவில் 86 எலும்புக்கூடுகளை ஆய்வு செய்த குப்தாவும் பிறரும் இவ்விடத்தில் 4 வகையான இனத்தவர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதைத் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.</p> <h3>ஆதிச்சநல்லூர்</h3> <p style="text-align: justify;">இந்தியாவில் தொல் மனித இனங்களை ஆய்வு செய்வதற்கு மிக முக்கிய இடங்களில் ஒன்று ஆதிச்சநல்லூர். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் இரும்புக் காலத்தைச் சேர்ந்த ஊர். ஜகோர்(Jagor) என்னும் அறிஞர் 1876ஆம் ஆண்டு இவ்விடத்தில் அகழாய்வு செய்தார். இவ்வூரை லப்பிக் 1905 லும் , தர்ஸ்டன் 1909 இலும், அலெக்சாண்டர் ரே 1915இலும் , ஸ்மித் 1924&1927 இலும், சுக்கர்மேன் 1930-இலும் , செவல் ரூ குகா 1931 இலும், சட்டர்ஜி ரூ குப்தா 1963-இலும் ஆய்வு செய்தனர்.</p> <p style="text-align: justify;">ஆதிச்சநல்லூர் மண்டையோடுகள் தொல் திராவிடக் கூறுகள் கொண்டவை என்று லப்பிக் கூறினார். இவர் 1903-04 காலக்கட்டத்தில் ஆய்வு செய்தார். இந்த மண்டையோடுகள் அகன்ற தாடை கொண்டவை ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட மண்டையோடுகளும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட மண்டையோடுகளும் ஒத்த தன்மை கொண்டவை.</p> <p style="text-align: justify;">ஹரப்பாவில் அகழ்ந்த குழிகளில் முக்கியமான ஒரு குழிக்கு R-37 எனப் பெயரிடப்பட்டது. அந்தக் குழியில் கிடைத்த மண்டையோடுகள் ஆதிச்சநல்லூர் மண்டையோடுகளை ஒத்துள்ளன. தமிழகத்தில் பல இடங்களில் அகழாய்வு மூலம் மனித மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் குன்னத்தூர், அமிர்தமங்கலம், சானூர் ஆகிய மூன்று இடங்களில் மனித எலும்புகுள், மண்டைகள் எடுக்கப்பட்டன. முதலிடத்தில் கிருஷ்ண மூர்த்தியும் பன்னிரண்டு இடங்களில் பானர்ஜியும் ஆய்வு செய்தனர். இலங்கையில் வேடர்களின் எலும்புகளை ஆஸ்மன் ஹில் 1931-இல் ஆய்வு செய்தார் ஹரப்பாவில் பல ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.</p> <p style="text-align: justify;">ஹரப்பா தொடங்கி தமிழகம், இலங்கை வரை ஆய்வு செய்ததன் மூலம் ஒரு ஒப்பீட்டு ஆய்வுக்கு வழி ஏற்பட்டது. இந்த ஒப்பீட்டின் மூலம் தான் இத்துணைக்கணடத்தின் இனவியல் கூறுகளை வெகு நுட்பமாக அறிய முடிகிறது. தாமிரபரணி முகத்துவாரத்திலும் செங்கல்பட்டிலும் கிடைத்த மண்டையோடுகள் ஹரப்பா மண்டையோடுகளோடு நெருக்கமாக உள்ளன. வேடர்களின் மண்டையோடுகளோடு நெருக்கமாக உள்ளன. வேடர்களின் மண்டையளவுகள் சற்று விலகி உள்ளன.</p> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் ;</strong> சரவணன் வழக்கறிஞர்</p> </div>