<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">பாதுகாப்பு</h3> <p style="text-align: justify;">இந்திய பாதுகாப்பு கொள்கை என்பது</p> <ol style="text-align: justify;"> <li>இந்திய துணைக்கண்டத்தில் அமைதியை நிலைநாட்டுதல்</li> <li>அன்னிய படையெடுப்பு ஏற்படாமல் பாதுகாத்தல்</li> <li>முப்படைகளின் பிரிவில் நவீன ரக ஆயுதங்களைச் சேர்த்து பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகும்</li> </ol> <p style="text-align: justify;">நமது குடியரசுத் தலைவரே முப்படைகளின் பிரதம தளபதியாவார். நம்நாட்டு பாதுகாப்பு சார்பான தெளிவுகளைப் பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டியது பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு ஆகும்.</p> <h3>தரைப்படை (ARMY)</h3> <p style="text-align: justify;">இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. தலைமை அதிகாரிக்கு ஒரு துணை அதிகாரியும், 7 முக்கிய அதிகாரிகளும் உதவி புரிகின்றனர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பிரிவு என 5 மண்டலப் பிரிவுகளும் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்தின் கீழ் 14 பிரிவுகள் உள்ளன.</p> <p style="text-align: justify;">நமது ராணுவத்தில் பல ஆயுதப்பிரிவுகளும், சேவைப்பிரிவுகளும் உள்ளன. இவைதவிர ஆள்சேர்ப்பு, ஆவண அலுவலர்கள், பணிமனைகள், தேர்ந்தெடுப்பு மையங்கள், பயிற்சி நிலையங்கள் உள்ளன. இதில் ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. எல்லோருக்கும் மதச்சார்பற்ற ஜனநாயக, சமூக நீதிக்கொள்கைகள் அடிப்படையில் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்படுகின்றன.</p> <h3>கடற்படை NAVY)</h3> <p style="text-align: justify;">இதன் தலைமையிடம் டெல்லியில் உள்ளது. தலைமை அதிகாரிகளின் கீழ் 4 துணை அதிகாரிகள் செயல்படுகின்றனர். நமது கப்பல் படை மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகும். விசாகப்பட்டினம், மும்பை, கொச்சி ஆகிய இடங்களின் மண்டல அலுவலகங்கள் உள்ளன. மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்கள் போர் நடவடிக்கைகளையும், தென் மண்டலம் பயிற்சி அளிப்பதையும் கவனித்து வருகின்றன. இங்கு விமானத் தாங்கிகள், நாசகாரிகள், நீர்மூழ்கிகள் தங்க வைக்கும் கப்பல்கள், பயிற்சி கப்பல்கள், படகுகளை உள்ளடகிய கப்பல்கள் எனப் பலவகை உள்ளன. கோவா மற்றும் அரக்கோணத்தில் இப்படையின் விமான தளங்கள் உள்ளன.</p> <h3>கடலோரக்காவல்படை (COAST GUARD)</h3> <p style="text-align: justify;">1977 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் கடலோரக் காவல்படை (Coast Guard) இந்திய நாட்டின் தனி இராணுவமாக உருவாகியது. கடலோரப் பகுதிகள் மேற்கு, கிழக்கு, அந்தமான், நிக்கோபர் தீவுகள் என 3 கண்காணிப்பு பிரிவுகளாக உள்ளன. தலைமையகங்கள் மும்பை, சென்னை, போர்ட்பிளேயரில் உள்ளன. கண்காணிப்பு பிராந்தியங்கள் 11 கண்காணிப்பு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">கடலோர எல்லைக் காவல், மீன் வளங்களைப் பாதுகாத்தல், கடல்வழி கடத்தல்களைத் தடுத்தல், கடலில் சிக்கியவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறது.</p> <h3>விமானப்படை (AIR FORCE)</h3> <p style="text-align: justify;">தலைமையகம் டெல்லியில் உள்ளது. 5 புவியியல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மேற்கு, தென்மேற்கு, மத்திய கிழக்கு, தெற்கு மண்டலங்கள் ஆகும். இவை தவிர பயிற்சி பிரிவு ஒன்றும் உள்ளது. டெல்லி தலைமை அதிகாரிக்கு 6 துணை அதிகாரிகள் உதவுகின்றனர். பல நவீன ரக விமானங்கள் இப்படையில் உள்ளன.</p> <h3>எல்லைபாதுகாப்புப்படை (Border Security Force)</h3> <p style="text-align: justify;">இது 1949-ல் தொடங்கப்பட்டது. இது பகுதி நேர உள்நாட்டு மக்களின் தன்னார்வ படைப்பிரிவு ஆகும். இதில் அரசு ஊழியர்களும், பொது மக்களும் தாமாக வந்து சேர்ந்து ராணுவ பயிற்சி பெற்று நாட்டுக்கு உதவுகின்றனர்.</p> <h3 style="text-align: justify;">முடிவுரை</h3> <p style="text-align: justify;">பரந்த நிலப்பரப்பும், இயற்கை வளங்களும் இந்தியாவை உலக அரங்கில் பெரிய பங்களிப்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. பண்டைய காலம் முதலே இந்தியா எல்லாத் துறையிலும் தனது பங்களிப்பை பெருமளவில் வழங்கியுள்ளது. இந்தியா வேளாண்மையிலும், தொழில் துறையிலும், நவீன கால போக்குவரத்திலும், அவசியமான தகவல் தொடர்புகளிலும், வளம் கொழிக்கும் வர்த்தகத்திலும், ஆராய்ந்து உருவாக்கும் அறிவியல் தொழில்நுட்பத்திலும், விந்தையான விண்வெளி வளர்ச்சியிலும், கசடற கற்க வேண்டிய கல்வியும், பாதுகாப்பிலும், வளமான, உயர்வான நிலையை, உலக அரங்கில் நிலைநாட்டி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கும், உயர்விற்கும், பெருமைக்கும், புகழுக்கும் நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், சென்னை</p> </div>