<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">புகழ்பெற்ற சண்டெல் மகாராஜா கீரட் ராயின் மகளாக 1524 ஆம் ஆண்டு பிறந்தவர் ராணி துர்காவதி. சண்டெல் வம்சம் இந்தியாவின் புகழ்ப்பெற்ற வம்சமாக இருந்திருக்கிறது. வரலாற்றில் மிக முக்கியமான இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் சிற்பங்கள் மீது அலாதி ப்ரியம் கொண்டவர்களாகவும் சிற்பம் வடிப்பதில் தனித்திறமை வாய்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களது காலத்தில் தான் கஜுராஹோ சிற்பக்கூடம் மற்றும் கலஞர் கோட்டை ஆகியவை கட்டப்பட்டது. கலைகளில் மட்டுமல்ல வீரத்திலும் சிறந்தவர்களாக இவர்கள் விளங்கினார்கள்.</p> <p style="text-align: justify;">பிறப்பு: 1524-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி</p> <p style="text-align: justify;">பிறப்பிடம்: கலஞ்சார் கோட்டையில் (இன்றைய உத்தரப் பிரதேசம்),</p> <p style="text-align: justify;">இறப்பு: 1564-ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி</p> <p style="text-align: justify;">ஆனால் இந்த பேரரசி ராணி துர்காவதி, தங்களை எதிர்த்த இஸ்லாமிய பேரரசை எதிர்த்து போரிட்டிருக்கிறார். வரலாற்றில் நின்ற ராணி துர்காவதி பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்.</p> <h3 style="text-align: justify;">திருமணம்</h3> <p style="text-align: justify;">1542 ஆம் ஆண்டு ராணி துர்காவதி கொந்த் அரச வம்சத்தை சேர்ந்த மன்னர் சங்கர்மஸ்ஹாவின் மூத்த மகன் டல்பாட்ஸாவை மணந்து கொள்கிறார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு சாண்டெல் மற்றும் கொந்த் வம்சத்தினர் நட்புணர்வை தொடர்ந்தனர்.</p> <p style="text-align: justify;">இவர்களுக்கு 1545 ஆம் ஆண்டு விர் நாராயண் என்ற இளவரசர் பிறந்தார்.</p> <p style="text-align: justify;">இளவரசர் பிறந்த ஐந்தே ஆண்டுகளில் ராணி துர்காவதியின் கணவரான டல்பாட்ஸா காலமானார்.</p> <h3 style="text-align: justify;">ராணி துர்காவதியின் ஆட்சி</h3> <p style="text-align: justify;">இளவரசர் ஐந்து வயதே நிரம்பிய குழந்தை என்பதால் கொந்த் சாம்ராஜ்ஜியத்தை கட்டி காக்க வேண்டிய பொறுப்பு ராணி துர்காவதியிடம் வந்தது.</p> <p style="text-align: justify;">கொந்த் சாம்ராஜ்ஜியத்தின் அரசியாக ராணி துர்காவதி பதவியேற்றார். இவருக்கு அதார் காயஸ்தா மற்றும் மன் தாக்கூர் ஆகிய இரண்டு அமைச்சர்கள் ஆட்சி செய்வதில் துணை புரிந்தனர். ராணி துர்காவதி தொலை நோக்கு பார்வையுடனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் எண்ணற்ற மாற்றங்களை கொண்டு வந்தார்.</p> <p style="text-align: justify;">அவற்றில் ஒன்று தான் நாட்டின் தலைநகரை சாவுரஹாவிற்கு மாற்றினார். இந்த இடம் சட்புரா மலை ப்ரதேசத்தில் அமைந்திருக்கிறது. எதிரி நாட்டினர் எளிதாக உள்ளே நுழைய முடியாத வண்ணம் மிகப்பெரிய கோட்டையை கட்டமுடியும். இந்த அமைப்பே பாதியளவு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்பதை உணர்ந்து நாட்டின் தலைநகரை மாற்றினார் ராணிதுர்காவதி.</p> <h3 style="text-align: justify;">வீர செயல்கள்</h3> <p style="text-align: justify;">செர்ஷாவின் மறைவைத் தொடர்ந்து மால்வா பகுதியை சுஜத் கான் கைப்பற்றினார். சுஜத் கானைத் தொடர்ந்து அவரது மகன் பஜ்பாஹாதூர் 1556 ஆம் ஆண்டு மால்வா பகுதியின் அரசராக அரியணை ஏறுகிறார்.</p> <p style="text-align: justify;">பஜ்பாஹாதூர் பதவியேற்றவுடன் முதல் வேலையாக பக்கத்து நாட்டு அரசியாக இருந்த துர்காவதியை போரிட்டு வெல்ல முயன்று போரிட துடித்தார். ஆனால் மகாராணி சாதுர்யமாக போர் வியூகங்களை வகுத்து பஜ்பாஹாதூரின் வீரர்களை திணறடித்தார். இதனால் பஜ்பாஹாதூர் படைக்கு பயங்கர இழப்பு ஏற்பட்டது. இந்த வெற்றிக்கு பிறகு ராணி துர்காவதியின் பெயரும் புகழும் மிக வேகமாக நாடு முழுவதும் பரவியது.</p> <p style="text-align: justify;">1562 ஆம் ஆண்டு பேரரசர் அக்பர் மால்வா அரசரான பஜ்பாஹாதூரை வென்றெடுத்தார். மால்வாவை தன்னுடைய முகலாய பேரரசின் கீழ் கொண்டு வந்தார். மால்வாவும் முகலாய பேரரசின் கீழ் கொண்டு வந்து விட்டதால் அதற்கடுத்து எல்லையில் இருந்த ராஜ்ஜியம் ராணி துர்காவதியினுடையது. இம்முறை முகலாய பேரரசின் அனுமதி பெற்று ரேவா நாட்டின் அரசரான அப்துல் மஜித் கான் என்பவர் படையெடுத்து செல்கிறார்.</p> <p style="text-align: justify;">விஷயம் ராணி துர்காவதிக்கு தெரிய வருகிறது, அக்பர் மிகப்பெரிய பேரரசர், வருகின்ற அப்துல் மஜித் மன்னரின் போர்ப்படையை தோற்கடித்தாலும் அடுத்த கணமே தன்னுடைய பெரும் படையுடன் அக்பர் வரக்கூடும், ஆனால் அவருடன் போரிட நம்மிடம் வீரர்கள் கிடையாது. நவீன ஆயுதங்களும் இல்லை என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள்.</p> <p style="text-align: justify;">தோற்றாலும்.... இறந்தாலும் போரில் ஈடுபட்டு வீர மரணம் அடைவது தான் பெருமை என்று நினைத்தார் ராணி துர்காவதி .தனது சில வீரர்களுடன் நராய் என்ற மலை பிரதேசத்திற்கு சென்றார். ஒரு பக்கம் கௌர் நதி இன்னொரு பக்கம் நர்மதை நதி. ஒரு பக்கம் போரிட தீவிர பயிற்சி பெற்ற வீரர்கள் அவர்களிடம் மிகவும் நவீனமான ஆயுதங்கள். இன்னொரு பக்கம் அந்தளவிற்கு பயிற்சி இல்லாத வீரர்கள் பெயரளவில் சில ஆயுதங்கள்</p> <p style="text-align: justify;">ராணி துர்காவதி மிகவும் இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டுவிட்டார். படையை தலைமைத் தாங்கிச் சென்ற ஃபஜுதர் அர்ஜுன் தவாஸ் ஒரு கட்டத்தில் கொல்லப்பட இம்முறை ராணி துர்காவதியே படையை வழிநடத்தி முன்னேறினார். எதிர்ப்படையினரிடம் கடுமையான போர் மூண்டது. இரண்டு பக்கமும் பயங்கரமான இழப்பு, ஆனால் இந்த போரில் வெற்றி ராணி துர்காவதிக்கு தான். முகலாயப்படையை துரத்தினார்.</p> <p style="text-align: justify;">படையை நம் இடத்திலிருந்து துரத்திவிட்டோம் ஆனால் வென்றாக வேண்டுமே.... தன்னுடைய போர் தந்திரங்கள் குறித்தும், மேற்கொண்டு என்ன செய்யலாம் என்றும் ஆலோசனை நடத்தினார். எதிரி படையினர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் இரவு நேரத்தில் சென்றால் அவர்கள் சுதாகரிப்பதற்குள் நாம் ஆதிக்கம் செலுத்த துவங்கிவிடலாம். அதனால் இரவில் போரிட வேண்டும் என்றார் ராணி. ஆனால் அவரது ஆலோசகர்கள் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.</p> <p style="text-align: justify;">ராணி துர்காவதியின் மகன் வீர் நாராயணும் போரிட்டார்</p> <p style="text-align: justify;">மறு நாள் யாரும் எதிர்பாராத விதமாக முகலாய அரசின் பக்கத்திலிருந்து அசாஃப் கான் பெரிய பீரங்கிகளை கொண்டு வந்து நின்றார். ராணி யானைப்படையுடன் நின்றிருந்தார், இம்முறை ராணி துர்காவதியின் மகன் வீர் நாராயணும் போரிட்டார். தாயைப் போலவே சாதுர்யமாக போரிட்டு மூன்று முறை முகலாய படையை பின் வாங்கச் செய்தார். இறுதியில் வீர் நாராயணுக்கு காயம் உண்டாகவே வீரர்கள் அவரை களத்திலிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.</p> <h3 style="text-align: justify;">கழுத்தில் வீசப்பட்ட அம்பு</h3> <p style="text-align: justify;">அதே நேரத்தில் இன்னொரு பக்கம் போரிட்டுக் கொண்டிருந்த ராணி துர்காவதியின் கழுத்தை குறி பார்த்து வீசப்பட்ட அம்பு சற்று விலகி கழுத்தின் இடது பக்கம் தாக்கியது. இதில் ராணி துர்காவதி தன் சுயநினைவை இழந்தார். அவர் உடனடியாக சுயநினைவிற்கு வரவில்லையெனில் உடனடியாக ராணி துர்காவதி தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.</p> <p style="text-align: justify;">அவரின் பாதுகாவலர்கள் ராணியை பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல வந்தார்கள், லேசகா சுயநினைவிற்கு திரும்பிய ராணி துர்காவதி அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார். என் இறுதி மூச்சு இருக்கிற வரை போர் களத்தில் இருப்பேன் என்று சூளுரைத்தார்.</p> <h3 style="text-align: justify;">இறப்பு</h3> <p style="text-align: justify;">இனியும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்ற கட்டம் வந்த போது, எதிரி கையில் இறப்பதை விட நானே மரித்துக் கொள்கிறேன் என்று சொல்லி தன்னுடைய குத்துவாளை எடுத்து தற்கொலை செய்து கொண்டார் ராணி துர்காவதி. இவர் இறந்த நாள் ஜூன் 24, 1564. இன்றளவும் இந்த நாளை போற்றுகிறார்கள் மக்கள். போர்களத்தில் நின்று இறுதிவரை போராடி மரணத்தை தழுவிய ராணி துர்காவதி போற்றுதற்க்குரியவர்.</p> <p style="text-align: justify;">ஆதாரம் - தமிழ்போல்ட்ஸ்கை வலைதளம்</p> </div>