<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">தமிழ்நாட்டில் பிறந்த, அமெரிக்கா இந்தியரான சர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வு கழகத்தில் மூத்த விஞ்ஞானியாகவும் பணியாற்றியவர். ‘உயிர்களின் மூலச்செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன’ என்பதை கண்டறிந்ததற்காக, 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ இவருக்கு வழங்கப்பட்டது. இத்தகைய உலகம் போற்றும் தமிழ் மனிதனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி விரிவாக காண்போம்.</p> <p style="text-align: justify;">பிறப்பு: 1952</p> <p style="text-align: justify;">இடம்: சிதம்பரம், கூடலூர் மாவட்டம் (தமிழ்நாடு)</p> <p style="text-align: justify;">பணி: கட்டமைப்பு சார்ந்த உயிர்நூல் அறிஞர்</p> <p style="text-align: justify;">நாட்டுரிமை: அமெரிக்கா</p> <h3 style="text-align: justify;">பிறப்பு</h3> <p style="text-align: justify;">வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள், 1952 ஆம் ஆண்டு சி.வி. ராமகிருஷ்ணனுக்கும், ராஜலக்ஷ்மிக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கடலூர் மாவட்டத்திலிருக்கும் ஒரு சிறிய நகராட்சியான சிதம்பரத்தில் பிறந்தார்.</p> <h3 style="text-align: justify;">ஆரம்ப வாழ்க்கை</h3> <p style="text-align: justify;">வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள், தனது தந்தையின் பணிமாற்றத்தின் காரணமாக, குஜராத்திற்கு இடம்பெயர்ந்தார். இவர் தன்னுடைய ஆரம்ப பள்ளிப்படிப்பை வடோதராவிலுள்ள ஒரு கிறிஸ்துவ பள்ளியில் பயின்றார். பின்னர், தனது இளங்கலைப் படிப்பை பரோடாவில் உள்ள ‘மகாராஜா சாயாஜிராவ் பல்கலைகழகத்தில்’ பயின்று, 1971-ல் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். “நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகை” இவருக்கு கிடைத்ததால், அறிவியலில் ஈடுபாடு பெருகியது.</p> <p style="text-align: justify;">தன்னுடைய முனைவர் படிப்பை தொடர அமெரிக்கா சென்ற இவர், 1976 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “ஒகையோ பல்கலைகழகத்தில்” இயற்பியலுக்கான முனைவர் பட்டமும் பெற்றார். கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், உயிரியல் துறையில் ஆர்வம் கொண்டு அதே பல்கலைகழகத்தில் 1978 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டமும் பெற்றார்.</p> <h3 style="text-align: justify;">திருமண வாழ்க்கை</h3> <p style="text-align: justify;">சர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள், ‘வேரா ரோசென்பெர்ரி’ என்ற ஒரு குழந்தைப் புத்தகங்கள் எழுதும் பெண்ணை மணந்தார். இவர் 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர்களுக்கு தான்யா என்ற மகளும், இராமன் என்ற மகனும் உள்ளனர். தான்யா மருத்துவத்துறையிலும், இராமன் இசைத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர்.</p> <h3 style="text-align: justify;">சர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் ஆராய்ச்சிப் பணிகள்</h3> <p style="text-align: justify;">ராமகிருஷ்ணனின் தாய் மற்றும் தந்தை இருவரும் விஞ்ஞானிகள் என்பதால் இவருக்கும் அத்தகையான தாக்கம் ஏற்பட்டது எனலாம். தன்னுடன் முனைவர் பட்டம் பெற்ற சக தோழர்களான தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் ஆகியோருடன் சேர்ந்து 1983 முதல் 1995 வரை உயிரணுக்களிலுள்ள “ரைபோ கரு அமிலம்” மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான “ரைபோசோம்” எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் மூலம் ‘நமது உடலின் இயக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் மரபணுவிலுள்ள ரைபோசோம்கள் எவ்வாறு புரத்தத்தை உற்பத்தி செய்கின்றன மற்றும் உயிர்களின் மூலசெயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன’ என்பதை விளக்கிக் காட்டினார்.</p> <h3 style="text-align: justify;">நோபல் பரிசு</h3> <p style="text-align: justify;">செல்லின் மிகச்சிறிய மூலகூறான “ரைபோசோம்” பற்றிய சிறப்பான ஆய்வை பாராட்டி, 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசை’, “ராயல் சுவீடிஷ் அகாடெமி ஆஃப் சயன்சு” என்ற அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் பங்காற்றிய சர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் மூவருக்கும் பரிசுத் தொகை சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.</p> <h3 style="text-align: justify;">விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்</h3> <ul style="text-align: justify;"> <li>கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிடி கல்லூரியில் உதவி பெரும் மூத்த ஆய்வாளர்.</li> <li>அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியில் ஒரு கௌரவ உறுப்பினர்.</li> <li>மருத்துவத்தில் இவருடைய பங்களிப்பை பாராட்டி ‘லூயிஸ்-ஜீண்டேட் பரிசு’ வழங்கப்பட்டது.</li> <li>2008 ஆம் அண்டு இந்திய நாட்டு அறிவியல் கழகத்தின் அயல் நாட்டாய்வாளர் பதவி.</li> <li>2008 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் உயிர்வேதியில் சொசைட்டி மூலமாக ‘ஹாட்லே பதக்கம்’ வழங்கப்பட்டது.</li> <li>செல்லின் மிகச்சிறிய மூலகூறான “ரைபோசோம்” பற்றிய சிறப்பான ஆய்வைப் பாராட்டி, 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது.</li> <li>இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான “பத்ம பூஷன்” விருது 2010 ஆம் அண்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது.</li> <li>2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31ல் பிரிட்டிஷ் அரசு, ‘சர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.</li> </ul> <h3 style="text-align: justify;">காலவரிசை</h3> <p style="text-align: justify;">1952 – கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் (தமிழ்நாடு) பிறந்தார்.</p> <p style="text-align: justify;">1971 – இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.</p> <p style="text-align: justify;">1976 – ஓஹியோ பல்க்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.</p> <p style="text-align: justify;">1983 – 1995: ப்ரூக்ஹவேன் தேசிய ஆய்வு கூடத்தில் ரைபோசோம்கள் பற்றிய ஆய்வைத் தொடர்ந்தார்.</p> <p style="text-align: justify;">1995 – யூட்டா பல்கலைக்கழகத்தில் உயிரியில் பேராசிரியராக பணியாற்றினார்.</p> <p style="text-align: justify;">1999 – ரைபோசோம்களைப் பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.</p> <p style="text-align: justify;">2007 – மருத்துவத்தில் இவருடைய பங்களிப்பிற்காக ‘லூயிஸ்-ஜீண்டேட் பரிசு’ வழங்கப்பட்டது.</p> <p style="text-align: justify;">2008 – பிரிட்டிஷ் உயிர்வேதியில் சொசைட்டி மூலமாக ‘ஹாட்லே பதக்கம்’ வழங்கப்பட்டது.</p> <p style="text-align: justify;">2009 – “ரைபோசோம்” பற்றிய ஆய்வுக்காக வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது.</p> <p style="text-align: justify;">2010 – அறிவியலில் இவருடைய பங்களிப்பிற்காக “பத்ம பூஷன்” விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.</p> <p style="text-align: justify;">2011 – பிரிட்டிஷ் அரசு “சர்” பட்டம் வழங்கி கௌரவித்தது.</p> <p style="text-align: justify;">ஆதாரம் - <a href="http://www.itstamil.com/" target="_blank" rel="noopener">இட்ஸ்தமிழ் வலைதளம்</a></p> </div>