<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">சமுதாயக் கண்காணிப்பு</h3> <p style="text-align: justify;">அனைவருக்கும் தொடக்கக் கல்வி இயக்கம், மாணவர்களின் வருகை, சேர்க்கை, தக்கவைத்தல் போன்ற குறிக்கோள்களுடன் கண்காணித்தல் பணியிலும் மிகுந்த கவனம் செலுத்திவருகின்றது. இதன் ஒரு அணுகுமுறையாகச் செயல்பட்டு வரும் அனைவருக்கும் கல்வி இயக்கத் (SSA) திட்டமும் கண்காணிப்பும் பின் வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது.</p> <ul style="text-align: justify;"> <li>பெண்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் வள்ளுவர் சமுதாயக் குழுக்களை அமைத்து ஆரம்பப்பள்ளிகளின் (Primary School) செயல்பாடுகளை கண்காணிக்க உதவுதல்.</li> <li>தொடக்கக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் கண்காணித்தலை நெறிப்படுத்துதல்.</li> </ul> <p style="text-align: justify;">மாவட்டத்திட்ட அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், உதவிக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் கல்வித்திட்டச் செயல்களை அவ்வப்போது பார்வையிட்டு, கல்வி முன்னேற்றம் குறித்த அறிக்கையினை மாநிலத் திட்ட இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்புகின்றன. கல்வி முன்னேற்றம் என்பது முழுவதும் பள்ளி அமைந்துள்ள சமுதாய முன்னேற்றத்திற்காக என்பதால் சமுதாயத்தில் உள்ளவர்களும் கல்விச் செயல்பாடுகளைக் கண்காணித்தல் மிகவும் அவசியமாகும்.</p> <h3 style="text-align: justify;">பள்ளிகள் சமுதாயத்தின் உடைமை</h3> <p style="text-align: justify;">பள்ளியானது சமுதாயத் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு சமூக நிலையமாகும். பள்ளிக்கும் சமுதாயத்திற்கும் நெருக்கமான தொடர்புகள் உள்ளன. பள்ளியானது சமுதாயத்தின் மையமாகத் திகழ்கிறது. "பள்ளி எனப்படுவது சமுதாய வாழ்க்கையில் உயர்நிலைப்பட்ட சிறு பதிப்பு போன்றது. சமுதாயச் செயல்களில் பயனுள்ள பல்வேறு முக்கியக் கூறுகளைப் பள்ளி பிரதிபலிக்கின்றது" என்று ஜே.சி. மையதின் குறிப்பிடுகிறார்.</p> <p style="text-align: justify;">ஆசிரியரும் சமுதாயமும் ஒத்திசைந்து செயல்படத் தொடங்கிவிட்டால், பள்ளி நலம் பெறுவது திண்ணம் - ஆசிரியர் தம் பணியைச் செம்மையாக்கிக் கொள்வதும் எளிது. இம்முயற்சியில் ஆசிரியர் ஒரு தூண்டுகோலாக, செயலாளராக, காவலராக,ஊக்குநராக அமைதல் வேண்டும். சமுதாயத்தைப் பள்ளியின் பயனாளிகள், மேலாளர்கள் என்ற நிலைக்குக் கொண்டு வர வேண்டும். அதற்கான படிநிலைகள்.</p> <ul style="text-align: justify;"> <li>சமுதாயத்தைக் கல்வி விழிப்படையச் செய்தல்.</li> <li>சமுதாயத்தைப் பள்ளி வளர்ச்சிக்காக ஒன்று திரட்டுதல்.</li> <li>சமுதாயத்தைக் கல்விப் பணிகளில் பங்கேற்கச் செய்தல்.</li> <li>சமுதாயத்திற்கு மேலாண்மை நெறிபுகட்டுதல்.</li> <li>சமுதாயத்தைப் பள்ளி நிர்வாகத்தில் ஈடுபடச் செய்தல்.</li> <li>சமுதாயம் பள்ளி நடைமுறைப்பாட்டை மதிப்பிடச் செய்தல். சமுதாயத்தைப் பள்ளியின் உரிமையாளர்களாக்குதல்.</li> </ul> <p style="text-align: justify;">பள்ளி “நமது சொத்து” என்ற எண்ணத்தை ஒவ்வொரு தனிநபரிடமும் உருவாக்குவதன் மூலம் கல்வியைச் சமுதாய உடைமையாக்க முடியும்.</p> <h3 style="text-align: justify;">சமுதாயக் கண்காணித்தல் மற்றும் சமுதாய உரிமை உடைமை உணர்வை மேம்படுத்துவதற்கான செயல்கள்</h3> <p style="text-align: justify;">தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் பயன்படும் வகையில் ஒரு குழந்தையின் உள்ளார்ந்த தகுதிகளை மேன்மை பெறச் செய்வது கல்வியாகும். கல்வி என்பது தனிமனிதத் தேவையாகவும், சமூகத் தேவையாகவும் விளங்குகிறது. இத்தகைய கல்விப்பணிகள் சிறப்பாக நிகழ்ந்திட கண்காணித்தல் ஒரு ஊக்குவிக்கும் காரணியாக அமைதல் வேண்டும். பள்ளிகளில் நடக்கும் செயல்பாடு அனைத்தும் நம் குழந்தைகளின் வளர்ச்சிகாகத்தான் நிகழ்கின்றன. இது நமது பள்ளி 'கல்வி நமது உடமை' என்ற எண்ணம் பெற்றோர், தலைமை ஆசிரியர், ஆசிரியர், மாணவர் மற்றும் சமுதாய பிரதிநிதிகளிடம் இருத்தல் வேண்டும். இந்த எண்ணம் இருந்தால் கல்வி வளர்ச்சியில் அனைத்துத் தரமக்களிடமும் அக்கறை ஏற்படும். இதனால் "அனைவருக்கும் கல்வி மேம்பாடும் சமுதாய மேம்பாடும்" ஏற்படும் என்பது திண்ணம்.</p> <h3 style="text-align: justify;">சமுதாயக் கண்காணிப்பை மேம்படுத்தும் செயல்கள்</h3> <ul style="text-align: justify;"> <li>குழந்தைகளின் சீரான வருகையைக் கண்காணித்தல்.</li> <li>குழந்தைகளின் அடைவு நிலையைக் கண்காணித்தல்.</li> <li>வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மேற்பார்வையிடுதல்.</li> <li>சத்தான தூய்மையான உணவு வழங்க வழிவகை, மேற்பார்வை செய்தல்.</li> <li>பள்ளிக்கூடச் சுற்றுப்புறத்தூய்மை பேணுதல்.</li> <li>குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு முகாம்களை நடத்துதல்.</li> <li>குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து தருதல்.</li> <li>பெண் கல்வியை ஊக்குவித்தல்.</li> <li>குழந்தைகளின் நன்னடத்தைச் செயல்களை வளர்த்தல்.</li> <li>சிறப்புக் கவனம் நாடும் குழந்தைகளின் கல்வி சார் செயல்களை உற்றுநோக்குதல்.</li> <li>கல்வி மேம்பாட்டிற்காகத் திட்டமிட்ட செயல்திட்டத்தை அவ்வப்போது கண்காணித்தல்.</li> </ul> <h3 style="text-align: justify;">சமுதாய உரிமை உடைமை உணர்வை மேம்படுத்தும் செயல்கள்</h3> <p style="text-align: justify;">"பள்ளி நமது சொத்து" என்ற உணர்வை சமுதாயத்திடம் ஏற்படுத்தும் பொறுப்பு சமுதாய உறுப்பினர்களையே சாரும். எனவே சமுதாயத்தின் அங்கமாகத் திகழும் பெற்றோர், தலைமை ஆசிரியர், ஆசிரியர், கிராமக்குழு உறுப்பினர்கள், கிராம மக்கள், மாணவர்கள் அனைவரும் பின்வரும் செயல்களில் ஈடுபட வேண்டும்.</p> <ul style="text-align: justify;"> <li>பள்ளிக் கட்டுமானப் பணிகளை சமுதாயம் கண்காணித்தல்/ஏற்றுநடத்துதல்</li> <li>மாணவர்களுக்குத் தேவையான சீருடை எழுதுபொருள்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வாங்கித் தருதல்.</li> <li>சுத்தமான குடிநீர், சத்துணவு, கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகளை ஆசிரியர்களுக்கு வழங்குதல்.</li> <li>ஆசிரியர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாத பள்ளியில் தங்கள் ஊரில் / கிராமத்தில் உள்ள படித்தவர்களைக் கற்றல் பணியை மேற்கொள்ளச் செய்தல்.</li> <li>பெற்றோர்களுக்குக் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துதல். மாணவர்களின் சுகாதாரம் மற்றும் உடல்நலனைப் பேணுதல்.</li> <li>பெற்றோர் ஆசிரியர்க் கழகக் கூட்டங்கள் தவறாமல் நடந்திட பெற்றோர்கள், அனைவரும் பங்கேற்றல்.</li> <li>சமுதாயத்தில் உள்ள வளங்களைச் சேகரித்துப் பள்ளி மேம்பாட்டிற்குப் பயன்படுத்துதல்.</li> <li>குழந்தைப் பணியாளர்களை முழுநேரக் கல்வி / மாற்றுக் கல்வி முறையில் சேர்த்துக் கல்வியறிவு பெறச் செய்தல்.</li> <li>பெண்கல்வியை ஊக்குவித்தல் பெற்றோர், ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாணவர்கள், அரசு அதிகாரிகள், கிராமக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இணைந்து அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுதல் வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்</p> </div>