<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">சில மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து படித்திருப்பார்கள். எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்றால் தொடர்ந்து நல்ல படிப்பை படிக்க முடியாதே என்ற ஏக்கத்தில் சிலரது மனநிலை மாறும்.</p> <p style="text-align: justify;">சில மாணவர்கள் தொடக்கத்திலேயே சரியாக படிக்காமல் இருந்திருப்பார்கள். பெற்றோர்களின் தூண்டுதல் மற்றும் ஆசிரியர்களின் கண்டிப்பு காரணமாக படிக்க வேண்டும் என்று கண்டபடி படித்து தேர்வு எழுதியிருப்பார்கள். அப்படி தேர்வு எழுதியும் தோல்வியடைந்து விட்டால், அவர்களது மனநிலை மிகவும் பாதிப்படையும். அந்த சமயங்களில் சில மாணவ, மாணவிகள் தற்கொலை செய்ய முயல்கிறார்கள்.</p> <p style="text-align: justify;">தங்களது குழந்தைகள் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்ற பெற்றோரின் ஆதங்கத்தினாலும் தங்களது பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று, பள்ளி நல்ல தேர்ச்சி சதவீதம் பெற வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் மாணவர்களை அதிக அளவில் கட்டாயப்படுத்துவதால் மாணவ, மாணவிகளின் மனநிலை பாதிக்கிறது. மேலும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறாத மாணவ, மாணவிகளின் மனநிலையும் பாதிக்கப்படும்.</p> <p style="text-align: justify;">அந்த சமயத்தில் பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும். மாணவ, மாணவிகளை பெற்றோர் நேரடியாக குற்றம்சாட்டாமல் எதனால் இப்படி ஆனது என்பதை ஆராய்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும். அதற்கு என்ன வழிமுறைகள் என்பதை தங்களது குழந்தைகளுக்கு கூற வேண்டும்.</p> <p style="text-align: justify;">அதிக அளவில் பாதிப்படைந்த மாணவ, மாணவிகளாக இருந்தால், உடனடியாக மன நல மருத்துவர் மூலமாக கவுன்சலிங் செய்யலாம்.</p> <p style="text-align: justify;">குறிப்பாக நான்கு பேர் மத்தியில் குழந்தைகளை குற்றம் சொல்லியோ, குறையை சுட்டிக்காட்டியோ பெற்றோர் பேசக்கூடாது. தேர்வுக்கு படிக்கும்போது இரவில் காபி, டீ போட்டு கொடுத்து ஊக்கப்படுத்துவது போல தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில் பெற்றோர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் : </strong>தினமலர் கல்வி மலர்</p> </div>