<div id="Middlecolumn_internal"> <h3>சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வதற்கான சில யோசனைகள்</h3> <ul style="text-align: justify;"> <li>விண்ணப்பதாரர்கள், தங்களது பள்ளிப்பாடப் புத்தகங்களை முழுவதுமாக படிக்க வேண்டும். இது பொது அறிவு என்ற அடித்தளத்தை வலுவாக அமைத்திட உதவும். நாள்தோறும் ஏதாவது ஒரு தேசிய நாளேட்டைத் தொடர்ந்து படிக்கவேண்டும்,</li> <li>போட்டித்தேர்வுக்கு பிரத்யேகமாக வெளியிடப்படும் மாத இதழ்களையும் படிப்பது அவசியம். தொலைக்காட்சிகளில், செய்திகள், விவாதங்கள், உரையாடல்கள் ஆகியவற்றை பார்த்து வர வேண்டும்.</li> <li>படித்த செய்திகள், தொலைக்காட்சிகளில் பார்த்த செய்திகள், விவாதங்கள், உரையாடல்கள் குறித்த கருத்துக்களை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் <span style="text-align: justify;">பகிர்ந்து கொள்ள</span> வேண்டும்.</li> <li>அகில இந்திய வானொலியின் காலை, மாலை செய்தி அறிக்கைகளை <span style="text-align: justify;">கேட்பது மிக மிக அவசியம்.</span> <span style="text-align: justify;">முக்கியமாக அகில இந்திய வானொலியின் இரவு 9 மணி செய்தியைத் தொடர்ந்து 9.16க்கு ஒலிபரப்பாகும் spot light என்ற நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.</span> இந்த செய்தி அறிக்கைகள் தேசிய மற்றும் உலக அளவிலான அன்றாட நிகழ்வுகளை தெரிவிக்கக்கூடியது என்பதை மறுக்கக் கூடாது.</li> <li>சில வேளைகளில் வானொலி செய்திகளை நேரலையில் கேட்க முடியவில்லை என்றால், அகில இந்திய வானொலியின் இணையம் மூலம் பார்க்கலாம்.</li> <li>NCERT புத்தகங்கள் சிறிய கலைக் களஞ்சியம் போன்றது என்பதால், அந்தப் புத்தகங்களை மிகக் கவனமாக படிக்க வேண்டியது அவசியம்.</li> <li>மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் புத்தக வெளியீட்டுப்பிரிவு வெளியிடும் இந்தியா இயர்புக், யோஜனா, குருக்க்ஷேத்திரா ஆகியனவும் படிக்க வேண்டும். இந்தப் புத்தகம் இந்தியா பற்றிய அனைத்து விவரங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள உதவிடும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>பொது </strong><strong>அறிவு </strong><strong>பாடம் </strong><strong>தொடர்பாக </strong><strong>சில </strong><strong>யோசனைகள் </strong></p> <p style="text-align: justify;">பொது அறிவு பாடக் கேள்வித் தாளில் நடப்பு நிகழ்வுகள் மற்றும் பள்ளிப் பாடத்திட்டங்கள் தொடர்பான கேள்விகள் இடம்பெறும். 12ஆம் வகுப்பு வரை படித்த பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.</p> <p style="text-align: justify;">பள்ளிப்படிப்பின்போது புத்திகூர்மை உடையவர்களாக இருந்தவர்கள் பொது அறிவுப் பாடத்தை எதிர்கொள்வதில் வலுவாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பொது அறிவுப் பாடக் கேள்வித் தாளில் திட்டமிடுதல், பட்ஜெட் தயாரிப்பு, வளர்ச்சித் திட்டங்கள், சமீபத்திய அரசியல் சர்ச்சைகள், அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள், பஞ்சாயத்ராஜின் தேர்தல் சீர்திருத்தங்கள், நாட்டின் இயற்கை வளங்கள், கலாச்சாரம், மத்திய அரசால் அமைக்கப்படும் குழுக்கள், ஆணையகங்கள் ஆகியன குறித்து ஒவ்வொரு ஆண்டும் கேள்விகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான தேர்வுகளில் பங்கேற்கும் பெரும்பாலானவர்கள் பரந்த அறிவுத்திறன் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களின் எழுதும் திறமை குறைவாகவே இருக்கும். மதிப்பீட்டாளர்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப அவர்களின் பதில் அமைந்திருக்காது. என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். எழுதும் திறமையை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.</p> <p style="text-align: justify;">பாடங்களை படித்துவிட்டு தேர்வுகளை நேரடியாக எழுத முடியும் என்ற எண்ணம் விண்ணப்பதாரரிடம் குடியிருக்கக்கூடாது. வைரம் தீட்டத் தீட்ட அதிக ஒளிதருவது போல ஒவ்வொரு போட்டியாளரும் தொடர் எழுத்துப் பயிற்சி மூலம் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.</p> <p style="text-align: justify;">விண்ணப்பதாரர்கள் முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்றுவிட்டால், அவர்கள் மத்திய அரசின் செயலர், ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலர், மத்திய அமைச்சரவையின் செயலர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு செல்ல முடியும்.</p> <p style="text-align: justify;">மத்திய அரசின் சிவில் <span style="text-align: justify;">சர்வீஸ் </span>பணிகளைக் குறிப்பிடும்போது ஐஏஎஸ், ஐபிஎஸ், <span style="text-align: justify;">ஐஎப்எஸ் </span>பதவிகள் மற்ற எல்லா பதவிகளைக் காட்டிலும் சிறப்பு அங்கீகாரத்தைக் கொண்டவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.</p> <p style="text-align: justify;">விடாமுயற்சியும், விவேகமும் விக்கிர மாதித்தன் கதைகளின் மையக்கருத்து என்பதை மறுப்பதற்கில்லை. சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் அணுகுமுறைதான் வெற்றியைத் தேடித்தரும்</p> <p style="text-align: justify;">ஆதாரம் : திட்டம் மாத இதழ்</p> <p style="text-align: justify;"><em>ஆக்கம் : வை. </em><em>பழனிச்சாமி, </em><em>ஐ.</em><em>ஐ.</em><em>எஸ், </em><em>இயக்குனர் (</em><em>செய்தி), </em><em>அகில </em><em>இந்திய </em><em>வானொலி </em><em>நிலையம், </em><em>சென்னை.</em></p> </div>